29/8/11

குந்தம் சாடிய வாழை



நேற்று உன் கவிதைகளை வாசித்து கொண்டிருந்தேன்.
பரிதாபத்திற்குரிய வார்த்தைகள்.
பொருத்தமற்ற இடத்தில் கண்ணீரால் யாசித்திருந்தாய்.
என் இரக்கத்தின் ஊற்றுக்கண் வற்றி கொஞ்சகாலமாகிறது.
வாழ்வின் மீதான நம்பிக்கைகளே நகைப்பாய் மாறிவிட்ட
காலத்தில் வாழ்கிறோம் என்பதை உன்னால் உணரக்கூட
முடியவில்லையென்பதை உன் கவிதைகள் பல்லிளித்துக்கொண்டிருப்பதை வைத்தே
அறிந்துகொள்கையில் மெலிதான பயம் என்னை சூழ்கிறது.
தயவுசெய்து உன் குந்தம் சாடிய வாழைகளை அப்புறபடுத்திவிடு என் பார்வையிலிருந்து.

Read more »

27/8/11

கேட்வாக்



கம்பியில் மட்டுமே நடந்துகொண்டிருந்தவன் சர்க்கஸிலிருந்து வந்திருந்தான். ரேம்பில் கேட்வாக் செய்ய தெரியாதென்றாலும் பேஷன்ஷோ விளக்குகள் நடுத்தர வயதுகாரனை வசீகரித்திரிக்க வேண்டும். கேட்வாக் செய்ய தயாராய் இருந்த அவனிடம் டீவியில் இதை பார்த்திருக்கிறாயா என்று கேட்டார்கள். டீவி பெட்டியையே பார்த்திராத அவன் இதை எங்கே பார்த்திருக்க முடியுமென்று வண்ண விளக்கிலிருந்து குரல் வந்தது.

Read more »

அவளுடலை தீண்ட வந்திராத மீன்கள்

                                                                                                    -  குருசு.சாக்ரடீஸ்                     
                                                                                                 

நிர்வாணமான பெண்ணின் உடலை கடலில் வீச அவர்களுக்குப் பயிற்சியொன்றும் இருந்திருக்கவில்லை. அவர்கள் பதினேழு பேர் இருந்தார்கள். மீன்பிடிடெக்கில் நின்றுகொண்டிருந்தவர்களைக் கண்டு மிரண்ட வெயில் மட்கத்துவங்கியது. தளதளத்த கடலின் மேனியை கிழித்தபடி நகர்ந்துகொண்டிருந்த தைவானி மீன்பிடிக்கப்பல் ஒரு சாயங்காலத்தை விரட்ட எந்த உபகரணங்களையும் கொண்டிருக்கவில்லை.

அவளுடல் கனத்திருக்கவில்லை. பிடிவாத உயிர் மிச்சமிருந்தது. கடல்நீரின் மகோன்னதக் குணங்கள் அவளது நீண்டகூந்தலை தொடர்ந்து சிதைத்திருந்தன. கூந்தலால் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்த கைகள் தோள்பட்டையிலிருந்து கழன்றுவிடும் சாத்தியம் தெரிந்தது. அவளுடம்பில் வழவழப்பு மறைந்துவிட்டிருந்தது. பரணில் வீசப்பட்ட ஒரு பிளாஸ்டிக் பொம்மையின் தோற்றத்தை மிச்சம் வைத்திருந்தாள்.

பதினேழுபேரும் நெடுங்காலக் கடற்கொள்ளையர்களின் தோற்றத்தை அடைந்திருந்தாலும் வேட்டையின் கண்ணியில் தொங்கிகொண்டிருக்கும் மீன்வேட்டையர்களின் குணத்தை மிச்சம் வைத்திருந்தார்கள். பலநாட்டு முகச்சாயல் கொண்ட அவர்களைக் கடலின் முரட்டுமொழி அதிர்ஷ்டத்தின் கண்ணிகளால் பிணைத்திருந்தது. தெற்கத்திய முகமே அதிகமும் தென்பட்டன. அவர்கள் பயன்படுத்திய மீன்பிடி கப்பல்கூடத் தைவான் மீனவர்கள் மூழ்கடிக்கக் கொண்டுவந்த நவீனரக டிராலர்தான். நிரந்தரப் படகுகளை அவர்கள் சுமக்கும் வழக்கமில்லை. ஆறுமாத வேட்டை காலத்தில் கிடைத்த படகுகளைப் பயன்படுத்திக்கொள்வதையே விரும்பினார்கள். நிரந்தரப் படகுகளும் நிரந்தர வாழிடங்களும் அவர்களது கனவுகளில் கூட எட்டிப்பார்ப்பதில்லை.

தைவான் மீன்பிடிகப்பலை கைப்பற்றிக் கொள்ளச் சிறிய யுத்தம் செய்ய வேண்டியிருந்தது. யுத்தகணத்தில் கொள்ளையர்களில் நான்குபேர் கடலின் அடியில் தமக்கான சமாதியை தேடிப்போனார்கள். கணிக்கஇயலா யுத்தகணத்தில் பொருதிகொண்ட அவர்களை அதிர்ஷ்டமும் துரதிர்ஷடமும் கைவிட்டிருந்தது.

தைவான் மீனவர்களை வதைத்துகொல்லும் திட்டத்தைச் சீட்டுக்குலுக்கி அவர்கள் தேர்வு செய்தார்கள். எதையும் சீட்டுகுலுக்கி தேர்ந்தெடுப்பது அவர்களது வழக்கமென்றாலும் கைப்பற்றிய மீன்பிடிக்கப்பலில் அதற்கான பொருட்கள் இருந்திருக்கவில்லை. அவர்களால் கைவிடப்பட்ட பைபர் படகுகளில் அதற்கான வசதியிருந்தது. தைவான் மீன்பிடிக்கப்பல் யார்டிலிருந்து கிளம்பிய மேனிக்கே இருந்தது. வலைகளை வீச பயன்படுத்தும் ரோப்புகள் டிரம்மிலிருந்து முன்னோர்களால் உருவப்பட்டிருந்தன. மீன்பிடிவலைகளின் துண்டைகூட விட்டுவைத்திராத தைவானியமுன்னோர்களைக் கொள்ளையர்களால் வழிபடமுடியவில்லை. இன்சூரன்ஸிற்காக மூழ்கடிக்கக் கொண்டுவந்திருந்தாலும் மீன்பிடிக்கப்பலின் வெளிப்புற தோற்றத்தை தைவானிகள் சிதைத்திருக்கவில்லை.

அவர்கள் கொண்டுவந்த நான்கு பைபர் படகுகளும் திசை மாறியிருந்தன. பலதிசை நீரோட்டங்களும் முட்டிகொள்ளும் தாமிரா கிரவுண்டில் நீரோட்டத்தின் திசைக்கு படகுகள் இழுபடுவது கவலைகொள்ளும் விஷயமல்ல. வேகமான நீரோட்டமென்றாலும் மேற்புறத்தில் அதைக் காண்பித்திருக்கவில்லை. ஆழ்கடலுக்குப் பொருத்தமான படகுகள் இல்லையென்றாலும் பெரும்பாலான தாக்குதலுக்கு அதைப் பயன்படுத்தியிருந்தார்கள். விரிக்கப்பட்ட வலைகளை அறுத்துக்கொண்டு நுழைய பெரும்பயிற்சியுள்ள படகுகள். மீன்பிடி காலங்களில் கொள்ளையிட பைபர் படகுகளே சௌகரியமானவை. திசைக்கொன்றாக வந்து தாக்கவும் தப்பிக்கவும் பயன்படுத்தியதை விட்டுபோகும் மனசை அவர்கள் கொண்டிருக்கவில்லை.

அதிலொன்றை கைப்பற்ற கடலில் குதித்த கொள்ளையன் சிறிது நேரத்திலேயே மீன்களிடம் கால் ஒன்றை பறிகொடுத்தான். அலறுவதற்கான சந்தர்ப்பத்தை அம்மீன்கள் அவனுக்கு வழங்கியிருக்கவில்லை.

அம்மீன்கள் எவ்வகையைச் சார்ந்ததென்று அறிந்துகொள்ள அவர்கள் பெருமுயற்சி எடுக்கவேண்டியிருந்தது. தாமிரா கிரவுண்டில் பயங்கரக் குணமுள்ள மீன்கள் கிடையாது. வங்காளவிரிகுடாவின் எப்பிரதேசங்களிலும் அம்மீன்கள் அவர்களது கண்களுக்குத் தென்பட்டிருக்கவில்லை. இனப்பெருக்கத்திற்காக இடம்பெயரும் வகையினமல்ல. பெருந்துக்கத்தில் கூட வாழிடங்களைக் கெட்டியாகப் பிடித்தலையும் கோளா வகையைப்போலத் தோன்றின.

அன்றைய உணவிற்காக அவனைக் குதறிக்கொண்டிருந்த மீன்கள் மேற்புறத்தில் தலைக்காட்டாமல் தங்கள் காரியங்களை நடத்தி கொண்டிருந்தன.

அவனை மீட்பதற்கான முயற்சிகளைக் கொள்ளைகுழு எடுத்திருக்கவில்லை. மரணத்திலிருந்து மீட்பதற்கான மருத்துவமுறைகளையொன்றும் அவர்கள் அறிந்துவைத்திருக்கவில்லை. சில கடலோடி மருத்துவங்களில் அவர்களுக்கு முறையான பயிற்சியொன்றுமில்லை. சிலவகைக் கடற்பாசிகள் சதைமுறிவுகளைக் குணமாக்குமென்றாலும் துரிதபயன்பாட்டிற்குப் போதுமானவையல்ல. கொப்பளிக்கும் ரத்தத்தைக் கடவுளாலும் நிறுத்தமுடியாதென்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

மரண அலறல்களைக் கேட்டுப் பழகியிருந்தார்கள். வழக்கத்திலில்லாத விஷயங்களைக் கடல் பரப்பில் அவர்கள் முயற்சிப்பதில்லை. வேட்டைக்குக் கிளம்பிய சொற்ப நாட்களில் ஐந்துபேரை இழந்திருந்தார்கள். அதிர்ஷ்டம் பின்வாங்கியிருந்தது.

தாமிரா கிரவுண்டில் பெரும்பாலும் இரால்வகைகளே இனப்பெருக்கத்திலிருந்தன. அவைகளுக்குக் கொடூர குணமொன்றுமில்லை. உண்ணத் தோதான அவைகளை மனிதர்களும் சில மீன்வகைகளுமே விரும்பின.

கடலில் இனப்பெருக்கத்திற்கான கிரவுண்டுகள் பல இருந்தனவென்றாலும் மீன்பிடிக்கப்பல்களுக்கு வசதியான இடம் தாமிராகிரவுண்டுதான். கடலின் அடியாழம் வரை வலைகளை விரித்து இழுத்துகொண்டு நகரும் இழுவைகப்பல்களே அக்கிரவுண்டில் மேய்வது வழக்கம். அதிஆழமுள்ள அவ்வெளியில் பல விசித்தரங்களும் இன்சூரன்சிற்காக மூழ்கடிக்கப்பட்ட மீன்பிடிக்கப்பல்களும் இருந்தன.

மூழ்கடிக்கப்பட்ட பொக்கிஷகப்பல்களைக் குறித்த ஆர்வங்கள் அப்பிரதேசத்தின் மீது இருந்திருக்கவில்லை. தாமிரா கிரவுண்டு கடலில் தான் இருந்ததென்றாலும் அது நடைமுறை வாழ்கைக்கு வெளியே இருப்பதாகப் பல கற்பனைகள் உலாவந்தன. மீன்வேட்டை வரைபடங்களில் ஆபத்தற்ற வெளியாகவே குறிக்கப்பட்டிருந்தாலும் வேட்டைக்காலங்களில் திமிறிக்கொண்டிருக்கும் அதன் சுவாபத்தை வரைபடங்கள் கணக்கிலெடுத்துக் கொண்டிருக்கவில்லை.

அப்பெண்ணின் உடலை தாமிராகிரவுண்டில் எறிவதற்கு முன்னால் அவளது கைகளைப் பின்புமாகப் பிணைத்து நீண்ட கூந்தலால் கட்டினார்கள். நீண்ட கூந்தலுள்ள பழங்காலவகையைச் சார்ந்தவளென்றாலும் நவநாகரீக வழக்கங்களின் அடையாளங்களும் அவளுடம்பில் காணக்கிடைத்தன. விசேஷ எண்ணைவகைகளையே கூந்தலுக்குப் பயன்படுத்தியிருந்தாள். துருப்பிடித்த கட்டுகம்பியின் உருவத்தைக் கூந்தல் அடைந்திருந்தது. நீண்ட கூந்தல் வகையினத்தின் கடைசிபெண்ணாக இருந்தாள்.

அந்தரத்தில் வீசி எறியப்பட்ட உடல் கொஞ்சநேரம் காற்றில் மிதந்தது. கப்பலின் மீன்பிடி டெக்கில் நின்ற பதினேழு பேரும் அவ்வுடல் காற்றில் மிதப்பதை சிலகணங்களேனும் ரசித்திருக்கவேண்டும். ஒரு பறவையின் கதியை அடைந்துவிடும் சாத்தியங்கள் அவ்வுடலுக்கு இருந்திருக்கவில்லை. நிலைதடுமாறி கப்பலின் பக்கப்பலகையில் மோதிவிடும் சாத்தியங்களே தென்பட்டன.

நிர்வாண உடல் ஒரு கர்ணத்துக்குத் தயாரானதுபோல் ஆட்டம் கொடுத்தது. அவளுடலில் மிச்சமிருந்த உயிரைப்போலத் தளர்ந்து தண்ணீர் பரப்பை நோக்கி வேகமாக இறங்கியது. எலும்புகள் நொறுங்கிவிடும் வேகத்தை உடல் அடைந்திருந்தது.
அவளுடலின் பாரத்தில் தண்ணீர் வெடித்து வர்ணங்களைத் தூவியது.

அவள் உயிரை மிச்சம்வைத்திருந்தது அவர்களுக்கு வருத்ததைத் தந்திருந்தது. நெடுநேரம் நீடித்திராத வருத்தம் உப்புகாற்றில் கரையத்துவங்கியிருக்கவேண்டும். அவளது உடலை துண்டு துண்டாக வெட்டியெறியவே விரும்பினார்கள். சீட்டுகுலுக்கியதில் அதிர்ஷ்டம் அவள் பக்கமாகத் திரும்பிவிட்டது. அதிர்ஷ்டத்தின் எல்லாப் பக்கங்களையும் அவர்கள் ஆதரிப்பவர்களென்பதால் அவளுடலை சேதப்படுத்தியிருக்கவில்லை.

கணக்கற்ற நாட்களாக அவளுடலின் அங்கங்களைச் சுவைத்திருந்தாலும் அவள் ருசியை அவர்கள் கண்டடைந்திருக்கவில்லை. அவளது முலைகளில் கடலின் மூர்க்கத்துடன் பதிக்கப்பட்டிருந்த பற்களின் வடுக்கள் எண்ணிக்கையைத் தாண்டிருந்தன. அவளது முனகலுக்கு ஏற்ப கிழிந்திருந்த உதடுகளில் எந்த யாசிப்பும் இருந்திருக்கவில்லை.

அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் நிரம்பிய கடலில் கொள்ளையர்கள் அவளைக் கைவிட்டிருந்தார்கள்.

தொடர் மயக்கத்திலேயே அவளுடல் இருந்துவந்தது. நேரங்காலமற்று ஒரு பெண்ணைப் புணர்வதாகவே அவர்கள் நினைத்திருக்கவேண்டும். ரத்தம் ஒழுகிகொண்டிருந்த யோனியில் கடலின் இரைச்சலை அவர்கள் கேட்டிருக்கவில்லை. மீன்பிடி டெக்கில் உணர்வற்று வெளியேறிய மூத்திரத்தை கழுவிவிட அவர்களுக்கு எந்த வெட்கமும் இருந்திருக்கவில்லை.

அவர்களது கைக்குக் கிடைப்பதற்குமுன் அழகானவளென்று பெயரெடுத்திருந்தாள். கணிக்க இயலாத இளவயது பெண்ணான அவளுடம்பில் தத்தமது அடையாளங்களைப் பதிக்கப் போட்டியிட்டார்கள். அடையாளங்கள் அரூப ஓவியத்தின் அழகையிழந்து குரோதத்தின் வடிவை அடைந்திருந்தன. தறிகெட்ட பாய்ச்சலுக்கு எதிர்ப்பொன்றையும் அவ்வுடல் காண்பிக்கவில்லை.

ஹீக்கிளி ஆற்றின் பொழிமுகத்திலிருந்து அவர்கள் வெளியேறிகொண்டிருந்தபோது சாகர் தீவின் தெற்கில் நடந்த சண்டையில் சிறிய சொகுசு படகிலிருந்து அவளைக் கைப்பற்றியிருந்தார்கள். அவளைச் சோனகஞ்சில் விற்பதற்காகச் சில வியாபாரிகள் அழைத்துபோய்கொண்டிருந்தார்கள். அரைமயக்கத்திலிருந்த அவளும் சில உயர்ரக மதுவகைகளும் டின்களில் பதப்படுத்திய உணவுகளும் கொள்ளையில் கிடைத்தன. குடிநீரை சேகரிக்க ஹீக்கிளி பொழிமுகத்துக்குப் போய்விட்டு திரும்பும்பொழுது அதுபோன்ற பெரியவேட்டையை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

சொகுசுப்படகிலிருந்தவர்கள் எதிர்பொன்றும் காண்பித்திருக்கவில்லையென்றாலும் அதிர்ஷ்டம் வியாபாரிகள் பக்கமிருந்திருக்கவில்லை. கொல்வதற்கு முன் அவளைப்பற்றிய விவரங்களை அவர்கள் சேகரித்திருக்கவில்லை. வியாபாரிகள் மரணபயத்தில் வார்த்தைகளை மறந்திருந்தார்கள். பேசுவதற்கான அவகாசமும் கிட்டவில்லை. சொற்ப நிமிடங்களில் யுத்தம் முடிவிற்கு வந்திருந்தது.

கொள்ளையர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் மழுங்கிப்போயிருந்தன. குண்டுகள் தீர்ந்த நாட்டுத்துப்பாக்கிகளே கைவசமிருந்தன. வியாபாரியின் தலையைத் துண்டிக்க இருபத்தி எட்டுமுறை மழுங்கிய வாளால் கொள்ளையர்களில் ஒருவன் கொத்திக்கொண்டிருந்தான். போதிய பயிற்சி அவனுக்கு இருந்தபோதிலும் பெரிய மீன்களை வெட்டிவிட்டு அதைச் சாணைபிடிக்க மறந்திருந்தான். சாணைபிடிக்கும் வசதிகளொன்றும் தைவான் மீன்பிடிக்கப்பலில் இல்லாதிருந்தது. கிச்சனிலிருந்த பல ரகக் கத்திகளும் மழுங்கிப்போயிருந்தன.

பல மாதங்களுக்குப் போதுமான டீசல் டாங்குகளில் இருந்தது. மீன்பிடிக்கப்பலின் டீசல் தீரும்வரை பயன்படுத்திவிட்டு இறங்கப்போகும் கரையோரங்களில் எலும்புகூடாகக் கைவிடுவதையே வழக்கத்தில் வைத்திருந்தார்கள். வேட்டைகுணம் நிரம்பிய அவர்கள் உறங்குவது குறைவென்றாலும் படுக்கைவசதி கொண்ட தைவான் மீன்பிடிக்கப்பலை விரும்பவே செய்தார்கள். இன்சூரன்சிற்காக மூழ்கடிக்ககொண்டு வந்திருந்தாலும் பழக்கவழக்கங்களை மாற்றிவிடும் வசதிகளை யாரும் குலைத்திருக்கவில்லை. பழங்காலத் தோற்றத்திலிருந்தாலும் உறுதியான மீன்பிடிக்கப்பலது. தைவானிய செய்நேர்த்தியை கொள்ளையர்களிலொருவன் தொடர்ந்து முணுமுணுத்து அலைந்தான்.

பாரத்தீபின் சந்துபொந்துகளில் தற்காலிக குடும்பங்கள் வாடகைக்குக் கிடைத்துவந்தன. பழந்துணிகளைப்போலச் சுருண்டுகொள்ள இடப்பரப்புள்ள கச்சிதமான வீடுகள். பிக்கலும் பிடுங்கலும் அனாவசிய வார்த்தைகளும் நிரம்பிய பெண்கள் புழங்க தோதான வரவேற்பை வைத்திருந்தார்கள். வேட்டை முடிந்து திரும்புகிறவனைக் குளிர்விக்கப் போதுமான வெப்பத்தை அப்பெண்கள் கைவசம் வைத்திருந்திருக்கவேண்டும். கொள்ளையிட்ட பொருட்களை வாங்கவரும் ஏஜென்றுகள் அப்பெண்களோடு தொடர் நட்பிலிருந்த பரசியத்தை யாரும் கண்டுகொள்வதில்லை.

அவள் கைப்பற்றபட்டபோது போதுமான உடைகளை அணிந்திருந்தாள். கல்லூரி மாணவிக்குரிய தோற்றம் தந்திராத அவ்வுடைகளின் நிறம் கொள்ளையர்களுக்கு மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பளப்பளப்பான கிராமச்சாயல் கொண்ட பட்டுப்பாவாடையை அணிந்திருந்தாள். மேற்புற சட்டையைப் பொதிந்த கோட் அவளை அழகானவளாய்க் காண்பித்தது. பாவாடையினுள் நீண்ட தொடைகளைக் கௌவிக்கொண்டிருந்த கால்சாராயை அவர்கள் அதற்குமுன் கண்டதில்லை. மயக்கத்திலிருந்தாலும் சூடான மூச்சுக்காற்றைப் படரவிட்டாள்.

நடன அரங்கிலிருந்து தூக்கி வரப்பட்டிருக்க வேண்டும். தூக்கி வந்தவர்கள் எந்த நகையையும் அவளிடம் விட்டுவைத்திருக்கவில்லை. அவளது காதுகளிலிருந்த பிளாஸ்டிக் அணிகலனை கொள்ளையர்களிலொருவன் கழற்றிப் பத்திரப்படுத்தினான். தெற்கத்திய நாட்டைச் சேர்ந்த அவனுக்கு அவளைப்போன்ற காதலி இருந்தாள். வடக்கிலிருந்து ஒன்பது டிகிரி முப்பத்தெட்டு மினிட் நாற்பது செகன்றுகளையும் கிழக்கிலிருந்து எழுபத்தெட்டு டிகிரியும் ஐம்பத்தேழு மினிட்டும் பாகைமானியில் திசைவைத்தால் அவனால் காரங்காட்டையும் காதலியையும் அடைந்துவிட முடியும். தென்பகுதிக்குப் போய்ப் பலவருடங்கள் ஆகிவிட்டது. காதலிகுறித்த எண்ணங்கள் தொலைந்திருக்கவில்லை.

கடலோடிகளாய் இருந்தபோதும் கொள்ளையர்களின் தோற்றத்தை அவர்களால் மறைக்க இயலவில்லை. பெரும்பாலும் மீன்பிடிப்படகுகளையே பயன்படுத்திகொண்டிருந்ததால் கடற்படையின் ரடார்களில் அதிகப்பிரசங்கித்தனமான மீன்பிடிக்கப்பல்களைபோல உலவமுடிந்தது. பொதுவே கடல்ப்பரப்பில் கெடுபிடிகளுக்குப் பஞ்சமொன்றுமில்லை.

கொள்ளையடிக்கும் படகுகளின் இன்ஜின்களையும் மீன்பிடி வலைகளையும் வாங்கிகொள்ள விசாகப்பட்டணத்தில் ஏஜென்றுகள் இருந்தார்கள். சொற்ப விலைக்கே பொருட்கள் கைமாறினவென்றாலும் தொழிலில் நாணயமிருந்தது. வேட்டையொழிந்த காலங்களில் ஏஜென்றுகள் தாராள குணங்களைத் திறப்பதுண்டு.

சர்வதேச எல்லை கடந்துவரும் மீன்பிடிக்கப்பல்களைத் தாக்குவதே எளிதாக இருந்தது. எதிர்பற்ற அவர்களைத் தாக்குவதில் எந்தச் சுவாரஸ்யமும் இருப்பதில்லையென்றாலும் பறிகொடுத்த உடமைகளைக் குறித்த முணுமுணுப்பொன்றும் அதிகமாக எழுவதில்லை. வலைவிரித்துத் திணறிக்கொண்டிருக்கும் தருணத்திலேயே அவர்கள் தாக்குவது வழக்கம். தைவான் மீன்பிடிக்கப்பலை தாக்க அவர்கள் எந்தவொரு முன்னேற்பாடுகளும் செய்திருக்கவில்லை. நான்குபுறமும் பைபர் படகில் வந்து சூழ்ந்துகொள்ளும்வரை மரணவாதைகள் மீன்பிடிக்கப்பலில் உறங்கிகொண்டிருந்திருக்கவேண்டும். எதிர்பாரா தாக்குதலுக்கு நான்கு பேரை பிணமாக்கிவிட்டுதான் தைவானிகள் அடங்கினார்கள்.

கைவசத்தில் கிட்டும் பொருட்களைப் பங்குபிரிக்கப் பெரும்பாலும் சண்டையிட்டுகொள்வதில்லை. அவளுடைய உள்ளாடைகளைச் சீட்டுக்குலுக்கியே பகிர்ந்துகொண்டார்கள். சீட்டுக்குலுக்கும் சடங்கிற்குப் பிரதான பொருட்களொன்றும் தேவையில்லை. துரதிர்ஷ்டத்தின் கண்ணிகளிலிருந்து விடபடவே தொடர்ந்து சீட்டுகளைக் குலுக்கிகொண்டிருந்தார்கள். எல்லாகட்டத்திலும் அதிர்ஷ்டம் நிரம்பிய ஒருவன் கூட்டத்தில் இருந்துகொண்டிருந்தான்.

சொகுசுப்படகிலிருந்த வியாபாரிகளைப் பரலோகராஜ்யங்களுக்கு அனுப்பிவிட்டுப் படகை பாகம் பாகமாகப் பிரித்து மீன்பிடிக்கப்பலில் ஏற்ற அதிக நேரமொன்றும் எடுத்திருக்கவில்லை. கிடைத்த மதுவகைகளும் போதுமான சுவையுடன் இருக்கவில்லை. சுட்ட மீன்கள் சுண்டகாய்ச்சிய சாராயத்தின் ருசியை அதிகப்படுத்திவிடுவதை அவர்களால் கற்பனை செய்யமட்டுமே முடிந்தது.

அவள் நிர்வாணமாக்கப்பட்டபோது எழுந்த கூச்சலை அவர்களாலேயே சகித்திருக்க முடியவில்லை. அவளைக் கடத்திவந்த சொகுசுபடகிலிருந்த மூவரும் போதுமான போதையை ஏற்றியிருந்தார்கள். அளவுகடந்த போதையால் அவள் தொடர் உறக்கத்திலிருந்தாள். உடலின் வேதனையில் அவள் முனகினாளவென்பதை யாரும் கவனித்திருக்கவில்லை. போதையில் எதுவும் அறிந்திருக்கமாட்டாளென்ற நம்பிக்கையிருந்தது. அவளைக் குளிப்பாட்டும் போது விழிப்பாளென்ற நம்பிக்கையைப் பலமுறை பொய்ப்பித்திருந்தாள். பதப்படுத்தப்பட்ட மீனின் கதியை அவள் அடைந்திருக்கவேண்டும்.

காலமற்ற வேட்டையை அம்மீன்கள் கொண்டலைந்தன. ஒரு காலின் பெரும்பகுதி சதைகளைத் தின்றுவிட்டிருந்தன. மீன்கள் ஆவேசத்தையொன்றும் காண்பித்திருக்கவில்லை. ருசித்து உண்ணவும் கூட்டத்திற்கு வழிவிடவும் மீன்கள் பயிற்சி பெற்றிருந்தன. மிகச்சோம்பேறியான மீன்கள் குழந்தை தவழுவதுபோல நரங்கி நீந்தின.

பைபர் படகுகளை இழக்க அவர்களுக்கு விருப்பமில்லாதிருந்தது. அதற்கான முயற்சிகளில் இன்னொருவனையும் பலியிட அவர்களது புத்திசாலித்தனம் தடுத்தது. மீன்கள் கொத்துவதை வேடிக்கைப்பார்க்க அவர்கள் விருப்பங்கொண்டிருக்கவில்லை.

அவனது அலறலுக்கு ஏற்ப தொற்றிக்கொண்டிருந்த பதற்றம் தண்ணீரெங்கும் பரவிக்கொண்டிருந்தது. ரகசியங்களிலிருந்து பிறப்பிக்கப்பட்ட மீன்வகைகளைக் குறித்துக் கொள்ளையர்கள் அறிய முயன்றார்கள். கடலின் மறைந்துவிட்ட குணாம்சங்களை மீட்டெடுக்க அம்மீன்கள் முயற்சித்திருக்க வேண்டும்.

மீன்பிடிக்கப்பலை திருப்பி நீரோட்டங்களில் பயணித்துக்கொண்டிருந்த பைபர்படகுகளை மீட்க அவர்கள் காண்பித்த கூத்துகளைக் கண்டு கடல் சிரித்தது. மீன்பிடி டெக்கில் வெட்டுபட்டுகிடந்த தைவானிகளை ஷவலால் கோரி வெளியே எறிந்தார்கள். கடல்பரப்பில் அநாவசியமாக மிதந்துகொண்டிருந்த உடற்பாகங்களை மீன்கள் கண்டுகொள்ளவில்லை.

கொள்ளையர்கள் மறைந்து வாழ தோதாக நீர்விலகிய பவளத்தீவுகள் நிகோபாரின் அருகே இருந்தன. தற்காலிக ஓய்விற்கும் பதுங்கிப்பாயும் வேட்டைகளுக்கும் பவளப்பாறைகள் வசதியை தக்கவைத்திருந்தன. அங்கேயிருந்த நண்டு இன பழங்குடிகளும் அவர்களைத் தொந்தரவு செய்வதில்லை. நண்டு இன பழங்குடிகளுக்கு ஆராய்ச்சிகூடங்களில் நல்ல விலை கிடைத்து வந்தது. நண்டு இன பழங்குடிகளைப் பிடித்துபோக வரும் ஏஜென்றுகளின் கப்பல்களை வேட்டையாட கொள்ளையர்கள் கடல்பரப்பெங்கும் பொறிகளை வைத்திருந்தார்கள். மிருககாட்சிசாலைகளில் நண்டு இன பழங்குடிகளின் வித்தைகளைக் காட்சிபடுத்த முயற்சித்துகொண்டிந்த குழுக்கள் வந்துபோன கப்பல்கள் கசியவிட்டிருந்த எண்ணைபிசுக்குகள் பவளப்பாறைகளில் மினுமினுப்பை ஏற்றியிருந்தது. எண்ணைபிசுக்களை உறிஞ்சிவிடும் பாசிகள் தென்கடலில் இருந்தன.

நண்டு தீவுகள் அந்தமானுக்கு வடக்கே பர்மாவின் கடலோர கால்மாட்டிற்குத் தென்மேற்கே இருந்தன. நண்டுகளின் பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்த பழங்குடிகள் நீர் சூழும் காலங்களில் பாறை மாற்ற பெருங்கூட்டமாக வெளியே வருகிறபோது வேட்டைக்கு வாய்ப்பிருந்தது. சரக்குகப்பல்களின் நீர்தடங்களுக்கு வெளியே வெகுதொலையில் நண்டுதீவுகள் இருந்தன. வடக்கிலிருந்து பதினைந்து டிகிரி நாற்பத்தியொன்று மினிட்டுகளும் கிழக்கிலிருந்து எண்பத்தி ஒன்பது டிகிரி முப்பத்தி ஏழு மினிட்டுகளையும் பாகைமானியில் யாரும் வைத்தால் நண்டு தீவருகே சுற்றியலையும் கொள்ளையர்களின் வாயில்போய் விழவேண்டியிருக்கும். நண்டுஇன பழங்குடிகளைப் பிடிக்கவரும் ஏஜென்றுகளுக்குக் கொள்ளையர்களைத் தெரிந்தேயிருந்தது. தற்காப்பு ஆயுதங்களின் முன் கொள்ளையர்கள் நடனமிடவே செய்தார்கள். உயிரை மிச்சப்படுத்தவும் வழியற்ற வெறிகொண்ட யுத்தங்களை யாரும் விரும்புவதில்லை. வேட்டை எல்லாப் பக்கங்களிலும் மரணச்சுவையுடன் அலைந்தது. திசைமாறும் டாங்கர்களைக் கொள்ளையர்கள் நெருங்குவதில்லையென்றாலும் அவைகள் அடிக்கடி திசைமாறின. கொள்ளையர்களை நோட்டமிட சாத்தியமற்ற டாங்கர்கள் கசியவிடும் எண்ணையை மோப்பம்பிடித்து ஆராய்ச்சிபடகுகள் வந்துவிடுவதுண்டு.

தைவான் மீன்பிடிக்கப்பலில் இருந்த ரடார் செயலற்றுப் போயிருந்தது. உயிர் மிச்சமிருந்த எக்கோசவுண்டரின் உதவியுடன் மீன்களின் நடமாட்டத்தைக் கணிக்கமுடியவில்லை. அவ்வகை மீன்களைத் தாமிரா கிரவுண்டில் அதற்கு முன் யாரும் கண்டிருக்கவில்லை. இரால்கள் குஞ்சுபொரிக்கும் காலங்களில் வந்துபோகும் மீன்களாயிருக்கலாம். பருவசுழற்சி கடலின் நிரோட்டங்களை அடிக்கடி மாற்றிவிடுகிறது. நீரோட்டத்தில் இடம்பெயரும் மீன் இனம்போலத் தோற்றம் தந்திராத அவைகளைக் கண்டுகொண்டிருக்கக் கொள்ளையர்களுக்குத் துளியும் விருப்பமில்லை. அவன் முழுதாகச் சிதையுமுன்னே மீன்பிடிக்கப்பலை திசைமாற்றியிருந்தார்கள்.

தைவான் மீன்பிடிக்கப்பலின் விஹச்எப் ரேடியோ உயிரோடிருந்தபோதும் யாரும் தொடர்பு கொண்டிருக்கவில்லை. தைவானிகளைக் குறித்த அக்கறை கரையிலிருந்தவர்களுக்கும் இருந்திருக்கவில்லை. தகவலற்ற விஹச்எப் ரேடியோ தைவானிகளின் மேல் இனம்புரியாத பாசத்தைக் கசியவிட்டது. கொள்ளையர்களிலொருவன் பல வித்தைகளையும் விஹச்எப் ரேடியோவின் மேல் பிரயோகித்துப் பார்த்தான். சுக்குநூறாக்கப்பட்ட விஹச்எப் ரேடியோ கடலில் எறியப்பட்டதை மீன்பிடிக்கப்பலின் சுக்கானை இயக்கிகொண்டிருந்த இரவுகடவுள்கூட அறிந்திருக்கவில்லை. மூழ்கடித்த கப்பல்குறித்த தகவல்களைக் கசியவிடும் வழக்கத்தை கொள்ளையர்கள் வைத்திருந்தார்கள். தைவானிகளுக்கு அப்பாக்கியம் கிட்டியிருக்கவில்லை. தைவான் மீன்பிடிகப்பலில் இருந்த பொருட்கள் தந்த ஆசுவாசம் எல்லாவற்றையும் மறக்கவைத்தது.

மீன்பிடிபொருட்களையெல்லாம் தைவானிகள் ஏற்கெனவே காயலான்கடைக்குப் போட்டிருந்தார்கள். இன்ஜின் ரூமில் யாரும் கைவைத்திருக்கவில்லை. இரண்டு ஜெனரேட்டர்களும் நல்லநிலையிலேயே இருந்தன. மீன்களைப் பதப்படுத்தும் கூலர்களும் உயிரோடு இருந்தன. மெயின் இன்ஜினை பாகம்பாகமாகத்தான் பிரித்து வெளியே கொண்டுபோகமுடியும். செயின்பிளாக் வைத்து தூக்கிவிட வாய்ப்புண்டென்றாலும் இன்ஜின் ரூமை உடைக்கவேண்டியிருக்கும். நெடுங்காலக் கடலோடிகளின் விருப்பங்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட இயந்திரங்கள். இன்ஜினை கூல் செய்ய வைக்கப்பட்டிருந்த பம்புகளே பெருந்தொகைக்குப் போகும். ஆறுமாதங்களுக்கு விற்றுதின்ன போதுமான புரபெல்லர் ராடு மரணபயங்களை விரட்டியிருந்தது. ராட்சஸ புரபெல்லரில் கொள்ளையர்கள் முகம் பார்த்துகொள்ளுமளவு பிரகாசத்தைத் தண்ணீரிலிருந்தபடி காண்பித்துகொண்டிருந்தது. உட்புறங்களில் தவிர்க்கஇயலா நீர்கசிவுகள் இருந்தன. ரசனையுள்ள யார்டில் போனால் அவைகளை ரிப்பேர் செய்துவிட முடியும்.

உறங்க சௌகரியமுள்ள கேபின் இருந்தது. மிகசிறிய கிச்சனில் வாழ்க்கையில் ஒருமுறையேனும் கழுவப்பட்டிராத ஸிங்கும் சில காஸ் சிலிண்டர்களும் தென்பட்டன. நண்டுஇன பழங்குடிகளைப் போல மீன்களைப் பச்சையாக உண்ண கொள்ளையர்கள் பழகியிருக்கவில்லை. வெண்ணைத் தடவிய அரைவேக்காட்டு மீன்களை மரணத்தின் முன் உண்ண தைவானிகள் விட்டுபோயிருந்தார்கள்.

மூழ்கடிக்கக் கொண்டுவரப்பட்ட தைவான் கப்பலில் இருந்தவர்கள் எதற்காக யுத்தத்தைத் துவக்கினார்களென்பதை கொள்ளையர்களால் கணிக்கமுடியவில்லை. உயிர் பயத்தின் துவக்கத்திலேயே யுத்தத்தில் குதிப்பது முறையல்ல. நெறியற்ற யுத்த தந்திரத்தின் முன் தைவானிகளின் உடற்பாகங்களே எஞ்சின. தைவானிகள் கொடூரசாவை குறித்து அறிந்தேயிருந்தார்கள். ஆயுதம் தீர்ந்துவிட்ட நிலையிலும் யுத்தம்செய்த அவர்களைக் கண்டு கொள்ளையர்களுக்கு ஆச்சரியமொன்றுமில்லை.

மீன்பிடி டெக்கில் அவளுடலை தொடர்ந்து வைத்திருக்கும் விருப்பம் வடியத்துவங்கியது. சீட்டுக்குலுக்கலில் பிழைத்த உயிரை மீன்களுக்கு ஊட்ட முயற்சித்தார்கள். அம்மீன்கள் தாமிரா கிரவுண்டிலேயே நிரந்தரமாகியிருக்கவேண்டும். மாறிவிட்டிருந்த நீரோட்டத்தின் முகங்களை நீர்ப்பரப்பு அறிவித்திருக்கவில்லை. சதையுண்ண காத்திருக்கும் மீன்கள் பதுங்கிய இடம் எக்கோசவுண்டருக்கு தெரிந்திருக்கவில்லை. எக்கோசவுண்டர் பச்சோந்திபோலக் காலை வாரியிருந்தது. மின்னணுப்பொருட்களோடு அவர்களுக்குப் போதுமான பயிற்சியுண்டென்றாலும் பதட்டம் சகோதரனைப்போல முன்நின்றது. தாமிரா கிரவுண்டு முழுவதும் பரவிய எக்கோசவுண்டரின் அலைகற்றைக்கு வெளியே மீன்கள் இருந்தன. சீட்டுகுலுக்கலில் தப்பிக்கும் அதிர்ஷ்டத்தின் உயிரை மீன்கள் விரும்பின.

கூந்தலால் அவளது கைகள் கட்டப்பட்டிருந்தாலும் வீசப்பட்ட வேகத்தில் கடலின் அடிப்பரப்பு வரை போய்விட்டு மேலே வந்திருந்தாள். போதம் தெளிந்திராத அவளுடல் கடலை கிழித்தபடி தண்ணீர் பரப்பிற்கு ஏறியிருந்தது. கொள்ளையர்களின் ஆச்சரிய முணுமுணுப்புகள் கடற்சாபத்தின் தன்மையை அடைந்திருந்தன. அவளது நுரையீரல்களில் தண்ணீர் ஏறியிருந்தாலும் மருத்துவ விதிகளுக்கு உட்படாமல் சுவாசித்துக்கொண்டிருந்தாள். சீழ்கையடித்து மீன்களைத் தருவிக்கும் முயற்சிகள் பலித்திருக்கவில்லை. கொள்ளையர்களின் சீழ்கை ஒலிக்கு புதிய அலைகளை எழுப்பும் சாத்தியமிருந்தாலும் மீன்களை வசீகரிக்கப் போதுமானதாயில்லை. கால்களை அகட்டியபடி மிதக்கும் அவளுடலை சபித்தபடி தாமிராகிரவுண்டிலிருந்து அவர்கள் விலகிக்கொண்டிருந்தார்கள். வெகுதூரம் வந்தபின்னும் அவளுடல் கொள்ளையர்களின் முன்னில் மிதந்துகொண்டிருந்தது. அவளுடலை தீண்ட எந்த மீன்களும் வந்திருக்கவில்லை.
                                                                                                         ----குருசு.சாக்ரடீஸ்

Read more »

வருகை


                                                                                                 -  குருசு.சாக்ரடீஸ்

பேருந்தில் நெருக்கியடிக்கும் கூட்டமிருந்தது. யாவோவை தவிர அனைவரும் போப் இரண்டாம் ஜாண்பாலை காணவந்த புனித யாத்ரீகர்கள். விமான நிலையத்தின் சில அடி தூரங்களில் பேருந்து நிறுத்தபட்டது. அதற்கு மேல் பேருந்தை நகர்த்த ரோட்டை அடைத்துகொண்ட திருவிழா தனம் சம்மதிக்கவில்லை.

யாவோவின் உடமைகளையும் பேருந்திலிருந்து இறங்கிய யாத்ரீகர்கள் கால்களால் உதைத்து தள்ளினார்கள். ஒரு தகர டிரங்கு பெட்டியும் கயிறுகளால் பிணைக்கப்பட்டிருந்த இரண்டு அட்டைபெட்டிகளும் ரோட்டில் உருண்டன. ரோட்டு ஓரமாக அவைகளை எடுத்து வைக்க கூட அவகாசம் தராத கூட்டமான மக்கள் வெளிச்சம் மங்கி விழத்துவங்கிய மழைசாரலுக்கு சிதறி ஓடியது.

போப் இரண்டாம் ஜாண்பாலை வரவேற்க புதிதாக வந்தவர்கள் மழைதுளிகளை கொண்டுவந்திருக்க வேண்டும். சிலர் மழையோடு போப்பாண்டவர்க்கு தொடர்பு இருப்பதுபோல நம்மவைத்துகொண்டிருந்தார்கள். திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர்கள் அம்மழையை எதிர்பார்த்திருக்கவில்லை. போப்பாண்டவரின் வருகைக்கான மழைபோல மக்கள் அதை வரவேற்றிருக்கவில்லை. கலைந்து ஓடிய பதற்றத்தால் மழையை மிரள   வைத்தார்கள்.

யாவோவிற்கு மழை துளிகள் புதிய சந்தோஷத்தை தந்தன. தூத்துக்குடியில் எட்டுவருடங்களாக மழை பெய்திருக்கவில்லை. யாவோவின் நிலமும் பாளம்பாளமாய் வெடித்துபோயிருந்தது. அப்பிரதேசங்களில் எருக்குகூட முளைத்திருக்கவில்லை.

 உடமைகளை சேகரிக்க யாவோ ஓடியது ஒரு குழப்பமான சூழலை ஏற்பெடுத்துமென அஞ்சினான். உடமைகளின் மேல் ஏறிஓட யாரும் முயலாதது அவனது அற்ப சந்தோஷத்தை அதிகமாக்கியது.

விமான நிலையத்தின் பின்புறமாக போப் இரண்டாம் ஜாண்பால் மக்களுக்கு தரிசனம் தர பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. பிரம்புகளால் பாரம்பரிய அடையாளங்களுடன் மேடையிருந்தது. போப்பாண்டவர் மக்களுக்கு ஆசிவழங்க குண்டுதுளைக்காத கண்ணாடியால் செய்யப்பட்டிருந்த கூண்டு ஒன்று மேடையின் முன்புறமாக நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

 கடற்கரை முழுவதையும் நிறைத்திருந்த மக்கள் விமான நிலைய ரோட்டையும் நிறைக்க முயற்சித்தார்கள். மக்கள் வெள்ளம் போல எங்கும் பரவிகொண்டிருந்தார்கள்.

மழைதூறலுக்கு சிதறி ஓடிய மக்களை நனையாமல் பாதுகாக்க இடமில்லாதிருந்தது.

 யாவோவின் தோளில் தொங்கிகொண்டிருந்த ரெக்சின் பை மழையில் நனைய துவங்கியது. சவுதி அரேபிய பயணத்திற்காக அதை புதிதாக வாங்கியிருந்தான். விமான பயணத்திற்கு ஏற்ற பையென்று அதை விற்பனை செய்த கடைக்காரன் சத்தியம் செய்திருந்தான். பையிலிருந்த பொருட்களின் கனம் தாங்காமல் ரெக்சினில் ஏறியிருந்த தையல் பிரிந்து இளிக்க துவங்கியது. மிக சொற்ப விலைக்கு கடைக்காரனோடு மல்லுக்கட்டி வாங்கியிருந்தான்.

டிரங்கு பெட்டியை அம்மா தன் ஞாபகமாய் விட்டுபோயிருந்தாள். திருச்செந்தூர் திருவிழா கடையில் அவள் அதை வாங்கியிருக்கவேண்டும். தன் உடைகளை திணிக்கும் போது அதனுள்ளிருந்து அம்மா வெளியேறி போவதை யாவோ கவனித்திருந்தான்.

தூத்துகுடியிலிருந்து திருவனந்தபுரத்தை அடைய யாவோவிற்கு பதினெட்டு மணிநேரமாகியிருந்தது. எல்லா பேருந்துகளும் வழக்கமற்ற பிடிவாதங்களுடன் ஆட்களை நிறைத்து போயின. திருநெல்வேலியிலும் நாகர்கோயிலிலேயும் பேருந்து நிலையங்களில் வழக்கத்து மாறான கூட்டத்தை கண்டு யாவோ கொஞ்சம் மிரண்டுபோயிருந்தான். நாகர்கோயில் பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்டிருந்தன. பேருந்துகளின் நடத்துனர்கள் யாவோவை சல்லிதனமான காரியங்களை சொல்லி பேருந்தில் ஏறவிடாமல் செய்தார்கள். கூட்டம் குறைந்திருக்கவில்லை. யாவோ தன்னிடம் திருவிழாதனம் இல்லாததை கண்டுகொண்ட தருணமது.

நீண்ட பிரயாணத்தின் களைப்பு அவன் முகத்தில் காளானைபோல முளைத்திருந்தது. யாவோவின் உடைகள் பிரயாணத்தின் கசங்கலை கொண்டிருந்தன. தூத்துகுடியில் வழியனுப்ப எந்த சொந்தங்களும் வந்திருக்கவில்லை. வழியனுப்பாத பயணத்தைபற்றி அவன் சிந்தித்ததுமில்லை. சுமைகூடிய தன் உடமைகளை நினைத்து பயமிருந்தாலும் அதை தாங்கிகொள்ள எந்த நண்பர்களையும் அவன் அழைத்திருக்கவில்லை.

சொந்தங்களில் பலரும் யாவோவை எச்சரித்திருந்தார்கள். நண்பர்கள் ஏதேனும் குளறுபடி செய்து பிரயாணத்தை தடுத்துவிடுவார்களென்ற பயமுறுத்தலும் அவனை எட்டியிருந்தது. தன் ஒரு கண் போனாலும் பரவாயில்லை அடுத்தவனின் இரண்டு கண்களும் போய்விடவேண்டுமென்கிற கிராம மனபாவத்தை அறிந்தேயிருந்தான். பல பயணதடைகள் அவனது நண்பர்களுக்கு ஏற்பட்டதை கண்டிருக்கிறான். ஊரிலுள்ளவர்கள் வேலைதேடி பெருவாரியாக இடம்பெயர்ந்திருந்தார்கள்.

பயிரேற்ற முடியாத வயற்காட்டையே ஏஜென்றுக்கு பணம் கொடுக்க அவனது தந்தை சொற்பவிலைக்கு விற்றிருந்தார். வாங்குவதற்கு யாரும் இல்லாதிருந்தார்கள். விற்பனை செய்ய பலரது கையையும் காலையும் பிடிக்கவேண்டியிருந்தது.

சென்னையைவிட திருவனந்தபுரம் விமான நிலையமே அவனுக்கு பொருத்தமாயிருக்குமென ஏஜென்று தீர்மானித்திருக்கவேண்டும். ஏஜென்றுகளுக்கு அபத்தம் ஏற்படுவது சகஜம்தான்.

சவுதி அரேபியாவிற்கான பயணத்தை தூத்துகுடியில் துவங்கியபோது எந்த நண்பனும் வந்து எட்டிபார்த்திருக்கவில்லை. அது என்னவிதமான மனோபாவமென அவனுக்கு ஒரு பிடியும் இல்லை.

விமான நிலைய முன்புற கேட் சில அடி தூரத்தில் யாவோவை எதிர்பார்த்தபடி இருந்தது. உணரமுடியாத ஆவேசத்தில் தன் உடமைகளை  தூக்கிகொண்டு சுமட்டுகாரனைபோல நடந்தான்.

மழைதூறல் விழுந்திருக்காவிட்டால் அங்கேயுள்ள சுமட்டு தொழிலாளர்கள் அவனது குடலை உருவியிருப்பார்கள். உடமைகளை தூக்கிகொண்டுபோக அங்கே பல நியமங்கள் நிலுவையிலிருந்தன. அதற்கு கிட்டதட்ட சவுதிக்கான விமான கட்டணத்தை கொடுக்கவேண்டியிருந்திருக்கும். யாவோவிற்கு குருட்டு அதிர்ஷ்டமிருந்தது. மழையையோ போப் இரண்டாம் ஜாண்பாலையோ வரவேற்க சுமட்டு தொழிலாளர்கள் கூட்டத்தில் கரைந்துவிட்டிருந்தார்கள்.

 சுமட்டு கூலிகள் சவாலான விஷயமாக மாறிவிட்டிருந்தன. கொண்டுவரும் பொருள் துரும்பா சுமடாவென்பதை தீர்மானிக்க துண்டுசீட்டில் எழுதி குலுக்கும் வழக்கமிருந்தது. அங்கேயிருந்த சுமட்டுதொழிலாளர் சங்கங்கள் பொருள் கொண்டுவரும் ஆட்களை எடைபோட விஷேச கருவிகளை பயன்படுத்தின.

தலைசுமட்டுடன் நடந்துகொண்டிருந்த அவனை மழைதுளிகளும் போப்பாண்டவரை வரவேற்க வந்தவர்களும் தேசாந்திரியைபோல உருமாற்றியிருந்தார்கள். மழைக்கு சிதறி ஓடிய மக்கள் எழுப்பிய கூச்சல் மழையின் இரைச்சலை அமுக்கியிருந்தது. அவர்கள் கூச்சலிட வந்திருக்கவில்லை என்றாலும் மழை கூச்சலிட வைத்தது. மழை வலுத்திருக்கவில்லை.

போப்ஆண்டவரை காண இவ்வளவு கூட்டம் வருமென்று யாரும் எதிற்பார்த்திருக்கவில்லை. திரண்டிருந்த கூட்டம் அண்ணாதுரையின் மரணத்திற்கு வந்த கூட்டத்தைவிட அதிகமென்று பலரும் சொல்லிகொண்டிருந்தார்கள்.

கத்தோலிக்க திருசபை வழக்கத்தைவிட அதிகமாக களமிறங்கி மக்களை திரட்டியிருந்தது. ரோமில் போய் போப்பாண்டவரை தரிசிக்கும் பாக்கியத்தை திருவனந்தபுரத்து வருகை எளிதாக்கிவிட்டிருந்தது. புனித தரிசனத்திற்காக மக்களை பல ஞாயிற்றுகிழமை திருப்பலிகளில் தயார்படுத்தியிருந்தார்கள். திரும்ப திரும்ப புகுத்தபட்ட வார்த்தைகளின் வசீகரம் மக்களை இழுத்துவந்திருந்தது. கேரளாவிலிருந்தும் தமழ்நாட்டிலிருந்தும் திருச்சபை செலவில் லாரிகள் விடப்பட்டிருந்தன.

நாகர்கோவிலிலிருந்து விஷேச ரயில் ஒன்றும் கிளம்பி வந்திருந்தது. தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரிந்து வந்தபோதே ரயிலுக்கான கனவுகள் எழும்பிவிட்டிருந்தன. போப் இரண்டாம் ஜாண்பாலின் வருகை  ரயில்பாதைகளின் பணியை விரைவுபடுத்தியிருக்கவேண்டுமென மக்கள் நம்பினார்கள். முதல் ரயிலில் ஏற முண்டியடித்த மக்கள் தள்ளுமுள்ளுவிலும் இறங்கியிருந்தார்கள். திணிக்கப்பட்டிருந்த மக்களை புதிய குகை தாண்டி ரயில் இழுத்து வந்திருந்தது. பலரும் அன்றுதான் ரயிலை பார்க்கவும் பயணிக்கவும் செய்திருந்தார்கள். திருவிழாதனத்தை பேருந்துகளும் ரயிலும் கொண்டுவந்து நிறைத்திருந்தது. நூற்றாண்டின் புதிய ரயிலாக அது அறிவிக்கப்பட்டிருந்தது.

ஞாயிறு திருப்பலிகளில் ரயில் பாடலாக மாறியிருந்தது. போப் இரண்டாம் ஜாண்பாலை வாழ்த்தும் அட்டைகளின் பின்புறம் ரயிலைபற்றிய புதிய செய்திகளும் இருந்தன.

விமானநிலையத்தை சுற்றிலும் பரப்பட்டிருந்த திருவிழா கடைகள் மழையில் நனைய துவங்கின. அணிந்திருந்த புத்தாடைகளின் புதுகருக்கை மழை மெல்ல உறிஞ்ச துவங்கியது. பழந்துணிகளை போல மக்கள் உருகுலைந்து கொண்டிருந்தார்கள். விமான நிலையத்தை சுற்றிலுமிருந்த திருவிழாதனம் மழையில் கரை துவங்கியதை யாராலும் சகிக்க இயலவில்லை.

கடற்கரையில் நனையாமல் தடுக்க போதிய ஏற்பாடுகள் இல்லாதிருந்தது. யானைபாகன்கள் யானையின் அடிவயிற்றில் மறைய முயற்சித்தார்கள். மேடையில் பாடப்பட்டு கொண்டிருந்த வாழ்த்து பாடல்களும் பிரார்த்தனைகளும் மக்களின் இடைவிடா கூச்சலில் அமுங்கிபோயிருந்தன.

போப் இரண்டாம் ஜாண்பாலின் உருவம் பொறிக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகளிலிருந்து மழைக்கு பயந்த சில பறவைகள் காணாமல் போயிருந்தன. அத்தப்பூ கோலங்கள் மிதிபட்டு சேறாகி கொண்டிருந்தன. தென்னை மர குருத்தோலை அலங்காரங்கள் சாலை நெடுகிலுமிருந்தன. உலத்தியும் சள ஓலையும் கொண்ட அலங்காரங்களில் யாவோ சற்று மனதை பறிகொடுத்திருந்தான். செவ்வாழை குலைகளிலிருந்த மினுமினுப்பு அவனை அச்சமூட்டியது. எத்தனை வாழைமர தோப்புகளை அழித்திருப்பார்களென்ற கணக்கை யாவோவால் கணிக்க இயலவில்லை.

யாவோவின் கசங்கிய உடையும் தலைசுமட்டு சாமான்களும் விமானநிலைய வாசலில் நின்ற ஜவான்களை கலவரபடுத்தியது. அவனது முகத்து புன்னகையை ஜவான்கள் தங்கள் வாழ்நாளில் கண்டதேயில்லை. யாவோவை மழைக்கு ஒதுங்கும் புனித யாத்திரிகன் என்றே ஜவான்கள் கணித்திருக்க வேண்டும். அதனால் தான் போக அனுமதித்தார்கள்.

மழை வலுக்க துவங்கியது. பெருங்கூட்டம் கட்டுபாடற்று விமானநிலையத்தின் பரந்துவிரிந்திருந்த முன்கூரைஅடியில் தஞ்சமடைய துவங்கியது.

 மறுபடியும் யாவோ பெருங்கூட்டத்தில் சிக்கிகொண்டிருந்தான். தன் உடமைகளை இறக்கிவைக்க டிராலியை கண்டடைவது பெரும்பாடாயிருந்தது. போடப்பட்டிருந்த இருக்கைகளில் மக்கள் ஏறி நின்றுகொண்டிருந்தார்கள்.

கார் பார்க்கிங் இடத்தில் கிடந்த டிராலியில் தன் உடமைகளை இறக்கி வைத்தான். முழுக்க நனைந்திருந்தான். போப் இரண்டாம் ஜாண்பால் அனுப்பியிருந்த மழையில் நனைவது யாவோவிற்கு பிடித்திருந்தது.

பாஸ்போர்ட்டும் விமான டிக்கெட்டும் ரெக்ஸின் பையினுள் பாதுகாப்பாய் இருந்திருக்கவேண்டும். பாஸ்போர்டின் உணர்வு பதைபதைப்பை அவனுக்குள் கொண்டுவந்திருந்தது. நனைந்து கொண்டிருக்கும் விருப்பம் முற்றாக போயிருந்தது.

அகன்ற முன்கூரையில் ஒண்டிகொள்ள டிராலியை தள்ளிகொண்டு ஓடினான். மக்கள் நெரிசல் அவனை மழைக்குள் மீண்டும் மீண்டும் தள்ளிவிட்டது. நனைந்து கொண்டிருப்பதை தவிர அவனுக்கு செய்ய ஒன்றுமில்லை.

பெருமழையாக மாறிகொண்டிருந்ததில் நனைந்துகொண்டிருப்பது பெரு ஆசீர்வாதமென பலரும் சொல்லிகொண்டிருந்தார்கள். அப்படியான மனப்பதிவுகள் அவனுக்கு எட்டியிருக்கவில்லை. யாவோவின் அலையுற்ற எண்ணங்களை போல மழைதுளிகளும் அலையுற துவங்கின.

 மழைகச்சம் விமானநிலைய கூரையின் கீழ் ஒண்டிகொண்டிருந்தவர்களையும் நனைத்தது. 

விமானபயணத்திற்கான டிரங்குபெட்டியைபோல தோற்றம் தந்திராத அது மழையில் எச்சேதத்தையும் அடைந்திருக்கவில்லை. அட்டைபெட்டிகள் ஈரத்தில் ஊறிபோயிருந்தன. உடமைகளின் பொருத்தமின்மையை மழைகச்சத்தில் நனைந்துகொண்டிருந்த புனிதயாத்ரீகர்களின் கூட்டம் கலைத்துவிட்டிருந்தது.

திருவிழா கடைகளிலிருந்து மிதந்துவந்த பொட்டிய பலூன்கள் அவன் காலடியை கடந்துபோய்கொண்டிருந்தன. நெருக்கி தள்ளும் பெருங்கூட்டத்தில் தன்னைதானே அடையாளம் கண்டுகொள்ள யாவோ சிரமபட்டான்.

 யாவோ பயணம் செய்யவேண்டிய விமானம் சவுதியிலிருந்து இன்னும் வந்திருக்கவில்லை. சவுதிவிமானம் புறப்படுவதற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்பே அவன் விமான நிலையத்தை வந்தடைந்திருந்தான். அது சரியான நேரமும்கூட.

 பரபரத்து ஓடும் மக்களை மழைதுளிகள் கோரகாட்சியிலிருந்து விடுவித்துகொண்டிருந்தது. 

குச்சிஜஸ் விற்றுகொண்டிருந்தவர்கள் போப் இரண்டாம் ஜாண்பாலை திட்டியபடியே குச்சிஜஸ்களை மழையில் வாரி எறிந்தார்கள்.

 அவனது வயற்காட்டில் அம்மழை பெய்திருக்குமெனில் சவுதி அரேபியாவிற்கு போக வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது.

புனித யாத்திரிகர்களை வாழ்த்த பெய்த மழை தன்னையும் வாழ்த்துவதாக தன் கற்பனைகளை விரிவாக்கிகொண்டிருந்தான். கிட்டதட்ட எட்டுவருடங்களாக யாவோ மழையை பார்த்திருக்கவில்லை. மழை அவனை ஆசுவாசபடுத்திகொண்டிருந்ததை அவன் உணர்ந்திருக்கவில்லை. திருவனந்தபுரத்தில் பேருந்து ஏறும்போது இருந்த வெக்கையை மழை களைந்து விட்டிருந்தது.

என்றுமில்லா சந்தோஷத்துடன் குழந்தைகள் இரண்டாம் ஜாண்பாலை வரவேற்க பெய்த மழையில் விளையாட துவங்கியிருந்தன. மழைகாலமில்லை அது. எதிர்பாரா மழைவெள்ளத்தில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன.

மழை காலமில்லாததால் யாரும் குடைகளை கொண்டுவந்திருக்கவில்லை. சில கிழவிகளும் பொருத்தமற்று உடையணிந்திருந்த கன்னியாஸ்திரிகளும் குடைகளை விரித்து பிடித்திருந்தார்கள். குடைகளை வாழ்வு துணைபோல கொண்டு நடப்பவர்களாயிருக்கலாம்.

 மழைக்காலமற்ற பொழுதில் பெய்த மழையை திருவிழா கடை விரித்திருந்தவர்கள் விரும்பியிருக்கவில்லை. மழையில் இங்கேயும் அங்கேயும் ஓடிகொண்டிருந்தவர்கள் புதிய நாடக பயிற்சியிலிருப்பதாக யாவோ எண்ணியிருந்தான்.

 போப் இரண்டாம் ஜாண்பாலை குறித்து அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. நாகர்கோயில் பேருந்து நிலையத்தில் ஓடிதிரிந்தபோது தான் போப்பாண்டவரின் புகைப்பட சுவரொட்டிகளை அவன் கண்டது. தன் ஏஜென்டின் முகமும் போப் இரண்டாம் ஜாண்பாலின் முகமும் ஒத்திருப்பதை தற்செயலாக கவனித்தான்.

விமான நிலைய சுவையுடனிருந்த காபியின் விலையை கண்டு யாவோ திகைத்து போயிருந்தாலும் மழை தன் சுவையை உள்ளே நுழைத்திருந்ததை கண்டு ஆசுவாசங்கொள்ள துவங்கினான்.

 கடற்கரையில் முழுக்க நனைந்த கூட்டம் விமானநிலையத்தை நோக்கி வர துவங்கியது. விமானநிலையத்தின் கண்ணாடி கதவுகளையும் உடைத்துகொண்டு மக்கள் உள்ளே நுழைந்துவிடும் சாத்தியமிருந்தது.

 போப் இரண்டாம் ஜான்பால் தரிசனம் தர அமைக்கப்பட்டிருந்த மேடை முண்டியடித்து ஏறிய கூட்டத்தின் பாரம் தாங்காமல் சரிந்து விழுந்து சில மரணங்களையும் ஏற்படுத்தியிருந்தது. உணர்வற்ற மழை வெட்கம்கெட்டு பெய்துகொண்டிருந்தது. அவ்விடம் கலவரத்தின் கடைசி ஓலங்களை எழுப்பிகொண்டிருந்தது. அழுகுரல்கள் மழையில் கரைய மறுத்தன.

பயணகளைப்பை போக்க யாவோ தன் முகத்தையும் உடம்பையும் கழுவிகொள்ள துவங்கினான். அதற்கான அவசியமில்லாததிருந்தது. நனைந்த உடை காய்வதற்கான அவகாசத்தை அப்பெருங்கூட்டத்தில் சாத்தியமில்லாததை அவன் உணர்ந்திருந்தான். உடம்பு குளிர்ந்து சிலிர்த்தது. வயற்காடு மழைவெள்ளத்தில் சிலிர்ப்பதை காணவிரும்பினான். அது அவனுக்கு ஒரு போதும் வாய்க்கபோவதில்லை. நிலம் கைவிட்டுபோயிருந்தது. யாரும் வழியனுப்ப வந்திருக்காத அவனை மானசீகமாய் மழை வழியனுப்பியது.

விமானம் ஏற வந்துகொண்டிருந்தவர்களின் வாகனங்கள் சலசலப்பை ஏற்படுத்தின. மேடை அருகே நுழைந்துகொண்டிருந்த ஆம்புலன்ஸ்களுக்கு ஏற்பட்ட கதியே அவ்வாகனங்களுக்கும் ஏற்பட்டது.

செக்யூரிட்டிகளால் வாகனங்களை ஒழுங்கமைக்க முடியவில்லை. பிடிவாதமான கூட்டம் மழையில் நனைந்துகொண்டிருந்தது. காலங்காலமாய் கூடவே கொண்டு நடந்த பிடிவாதமாய் இருக்கவேண்டும். பெருங்கூட்டத்தின் கூச்சலின் முன் செக்யூரிட்டிகளின் எச்சரிக்கை சப்தங்கள் அமுங்கி கொண்டிருந்தன.

 போதுமான அவகாசத்தை டிராலியில் சுமந்தபடி ஏர்போர்டின் கண்ணாடி கதவருகே வந்து நின்றான். கூட்டத்திலிருந்து சில வசவுகளை டிராலி அவனுக்கு பெற்றுதந்திருந்தது. வசவுகள் புனித சாபங்களை போல தோன்றின.

 விமானமும் போப் இரண்டாம் ஜாண்பாலும் மிகச்சரியான நேரத்திற்கு வந்துவிடுவார்களென கூட்டத்தில் யாரோ உரக்க சொல்லியது அவனுக்கும் கேட்டது. போப்பாண்டவர் ஏற்கெனவே திருவனந்தபுரத்து பிஷப் மாளிகையில் வந்து இறங்கியிருக்க வேண்டும். போப்பாண்டவருக்கென புதிய ஓய்வறை புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

முழுக்க நனைந்திருந்த கன்னியாஸ்திரி ஒருத்தி இன்று ஆத்மாக்களின் திருநாள் என்பதை கிழவிகளுக்கு மறுபடியும் மறுபடியும் அழுத்தமான குரலில் சொல்லிகொண்டிருந்தாள். மழை இரைச்சலில் அவளது குரல் யாருக்கும் கேட்டிருக்கவில்லை.

கொந்தளிக்க துவங்கிய கடலைவிட மழை இரைச்சலே அதிகமாக கேட்டது.

பிளாட்பார திருவிழா கடையில் வாங்கிய ஜெபமாலையை உருட்டியபடி பாம்படங்களை ஆட்டிகொண்டிருந்த கிழவி மழையை நிறுத்த பெருமுயற்சி செய்து கொண்டிருந்தாள்.

 கண்ணாடி கதவருகே இருந்த ஜவான்கள் கூட்டம் உள்ளே நுழைந்துவிடாமல் தடுக்க மிகுந்த கவனமெடுத்தார்கள். யாவோவின் பாஸ்போர்ட்டை ஜவான்களில் ஒருவன் பரிசோதிக்க துவங்கினான். பாஸ்போர்டில் இருந்த முகமும் நிகழ்முகமும் ஒத்துபோயிருக்கவில்லை. நெடுங்காலத்திற்கு முன்னுள்ள புகைப்படம். பாஸ்போர்ட் எடுத்த பின் ஆறுவருடங்கள் வெளிநாட்டு வேலைக்காக காத்திருந்தது ஜவான்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

அசுவாரஸ்யமான காட்சியிலிருந்து ஜவான்கள் அவனை மீட்டெடுத்து உள்ளே அனுப்பினார்கள்.

விமான நிலையத்தின் உள்கூட்டின் காட்சியில் திகைத்த டிராலி நகர மறுத்தது. பிடிவாதத்துடனிருந்த டிரங்குபெட்டியை அச்சத்துடன் பார்த்துகொண்டிருந்தான். ஸ்கேனிங்கில் யாவோ தன் உடமைகளை தள்ளியபோது ஏற்பட்ட அதிர்வு ஏர்போர்ட்டை ஒருகணம் சிலிர்க்க வைத்தது. தன் பொருத்தமின்மை உடைந்து சிதறுவதை அவன் கண்கூடாக கண்டான். தன் நிலத்திலிருந்து கசிந்து கொண்டிருந்த ஏக்கம் உடம்பிலிருந்து வெளியேறிகொண்டிருந்தது.

போர்டிங் பாஸ் கொடுத்து கொண்டிருந்த பெண்ணின் வரவேற்பு வார்த்தைகள் யாவோவை திணற செய்தன. அவள் போதுமான அழகாய் இருந்தாள். அவளை தேர்ந்தெடுத்த முகமறியா ஆளின் ரசனையை யாவோ யோசிக்க நேரமில்லாததிருந்தது. அவள் சில மனப்பாடமான வரவேற்பு வார்த்தைகளை உதிர்த்ததை தவிர வேறுவொன்றும் செய்திருக்கவில்லை.

 யாதாரு பந்தமுமற்ற ஒருவனின் நிலையை அவன் அடைந்திருந்தான். மரமண்டைபோல நிற்பதைதான் அவளது உலகமும் விரும்பியது. அவனது உடமைகளை எடைபோட்டு கன்வேயர் பெல்ட்டில் அவள் அனுப்புவதற்குள் டிரங்குபெட்டி சந்தைகூடத்தின் சப்தத்தை அங்கு உண்டுசெய்தது.

வேடிக்கை பார்க்க ஒன்றுமில்லையென்றாலும் அனேகரின் கண்களும் அவன் மேல் இருந்தன.

தன் தோள்பையுடன் கையில் திணிக்கப்பட்ட போர்டிங் பாஸையும் குடியேற்ற பாரத்தையும் கொண்டு நடந்தான். அவனது உடம்பின் மேல் மழைதுளிகள் மிச்சமிருந்தன. அவைகளும் ரகசியமாக ஏர்போர்டின் உட்புறத்தை பார்க்க விரும்பியிருக்கவேண்டும். மழையை திருடி வந்தது போல அவன் நடக்குமிடமெங்கும் ஈரம் ஒழுகிகொண்டிருந்தது. உடைகள் தானே உலருமென தன்னை சமாதானபடுத்தி கொண்டான்.

குடியேற்ற பாரத்தை பூர்த்தி செய்ய பலரையும் அணுகவேண்டியிருந்தது. போப் இரண்டாம் ஜாண்பாலை ஒத்திருந்த வயதானவன் இரக்கத்தை பாரத்தில் பூர்த்தி செய்ய துவங்கினான். அவர்கள் சைகைகளிலேயே பேசிகொண்டார்கள். சைகை மொழியே போதுமானதாகியிருந்தது. பாரத்தை பூர்த்தி செய்ய யாதொரு இன்னலும் ஏற்பட்டிருக்கவில்லை. பாஸ்போர்டில் இருந்த விவரங்களே பாரத்தை பூர்த்தி செய்ய போதுமானதாயிருந்தது.

மழையின் சப்தம் கூட அங்கே எட்டிபார்த்திருக்கவில்லை. மழை வேறு உலகத்தில் பெய்து கொண்டிருப்பதாகவே அவர்கள் நம்பிகொண்டிருந்தார்கள். எல்லோரும் போப் இரண்டாம் ஜாண்பாலின் வருகையை  பேசிகொண்டிருந்தார்கள். பாஷைகள் புரியவில்லையென்றாலும் அவதானிக்க கற்றுகொண்டிருந்தான்.

யாவோவின் உலகத்தில் அன்பை பரிமாறி போக யாரும் வந்திருக்கவில்லை. ஏர்போர்ட்டினுள் அவனுக்கு தனி உலகமிருந்தது. குடியேற்று பாரத்தின் வார்த்தைகள் தன்னை புதுப்பித்து கொண்டிருந்ததை யாவோ உணரலாமலில்லை. பாரத்தின் வார்த்தைகளில் சிக்குண்டிருந்த கருணை வெளியேற துடித்து கொண்டிருந்தது.

குடியேற்று அதிகாரிகள் யாவோவை அங்குலம் அங்குலமாய் அளவெடுத்தார்கள். அதற்கான தேவையில்லையென்றாலும் அவர்களிடமிருந்த இளகாரத்தின் முகம் எட்டிபார்த்தது. கட்டணபாக்கிக்காக மின்சாரத்தை துண்டிக்க வந்த அலுவலர்களை போலவே கருதிகொள்ள பழகியிருந்தான்.

 சுங்க பரிசோதனையில் சில பெண்களே நின்றிருந்தார்கள். புதிதாக சேர்ந்தவர்களாய் இருக்கவேண்டும். அதிகார மிடுக்கு இன்னும் வந்திருக்கவில்லை. யாவோவை அவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தோள்பையுடன் படிக்கட்டு வழி மேற்புறம் போனான்.

புது உலகத்தின் கதவுகள் திறந்தன. வயற்காட்டிலிருந்து அவனது தந்தை வானத்தையே பார்த்துகொண்டிருந்தார். எட்டுவருடங்களாக அதையே தான் செய்துகொண்டிருக்கிறார். புது உலகத்தின் டியூட்டி ப்ரீ சாராய கடைகள் யாவோயை கொஞ்சின. அங்கேயிருந்த சேரில் ஆசுவாசபடுத்துமளவு வசீகரித்தன.

 செக்யூரிட்டு செக்கிங்கில் யாவோவின் பையை தலைகீழாக புரட்டி தேடினார்கள். அவர்கள் எதிர்பார்த்த எப்பொருளும் அதனுள் கிடைக்கவில்லை. ஏமாற்றத்தை அவர்கள் பகிர துவங்கியது நளினமாயிருந்தது.

கண்ணாடியில் தெரிந்த மழைக்காட்சி யாவோவை ஈர்க்க துவங்கியது. குழந்தை தனத்தை அவன் மீட்டெடுக்க துவங்கியிருக்க வேண்டும். ஓடுபாதைகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன.

 அங்கே எந்த விமானமும் இருக்கவில்லை. விமானத்தை மிக அருகே பார்க்க வேண்டுமென்கிற ஆசையை அவன் அவிழ்க்கவேயில்லை. மழையின் ஆனந்த தாண்டவம் ஓடுபாதைகளை சிதைத்திருக்க வேண்டும்.

 மழை வெள்ளத்தை பொருட்படுத்தாமல் போப் இரண்டாம் ஜாண்பால் சரியான நேரத்திற்கு வந்துவிடுவாரென மக்கள் நம்பி கொண்டிருந்தார்கள்.

 மழையின் துளி ஈரம் கூட உட்புறத்தை தொடமுடியாமல் தடுத்துகொண்டிருந்த கண்ணாடி சுவரை அவன் ஆச்சரியத்துடன் கவனித்துகொண்டிருந்தான்.

 கிராமங்கள் வரை புகழ்பெற்றிருந்த அண்ணாதுரை அளவிற்கோ இளைஞர்களின் மாரடோனா அளவிற்கோ போப்பாண்டவர் புகழ்பெற்றிருக்கவில்லையென்றாலும் மக்கள் கலைந்துபோய்விடாமல் மழையில் காத்திருக்க விரும்பினார்கள்.

மழை தன் சுபாவத்தை ராட்சஸனின் பலத்திற்கு மாற்றியிருந்தது.

ஓடுபாதை கண்ணுக்கு தெரிந்திருக்கவில்லை. ஒரு ஏரியின் மேற்பரப்பை போல விமானதளம் மாறி கொண்டிருந்தது. விமானதளத்தின் கடைசி காட்சிகளை மௌன சாட்சிகளை போல எல்லோரும் பார்த்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கான சவுதி விமானம் இன்னும் வந்திருக்கவில்லை. இறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்து கொண்டிருப்பதாக அரசல்புரசலாக தகவல்கள் சுழன்றன. விமானம் அருகிலுள்ள நகரத்து விமானநிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டதாக கசிந்த தகவல்கள் அவனுக்கு எட்டியிருக்கவில்லை.

 யாவோ மழையையும் அங்கேயிருந்தவர்களின் முகங்களையும் மாறி மாறி கவனித்தபடியிருந்தான். நெடுநேர காத்திருப்பின் கடைசியில் பயணத்தில் தொலைத்த தன் சுபாவங்களை மழையிடமிருந்து திரும்ப மீட்டிருந்தான். தன் வயற்காட்டையும் மீட்டுவிடலாமென்ற நம்பிக்கை சம்மந்தமில்லாமல் துளிர்விட்டது.

 விமானத்தில் வருபவர்களை வரவேற்க வந்தவர்களும் போப் இரண்டாம் ஜாண்பாலை காண வந்த புனித யாத்ரீகர்களும் தள்ளுமுள்ளுவில் இறங்கியிருந்தார்கள்.

 விமானம் வராது என்பதை அறிவிக்காமலே சில இனிப்பான வார்த்தைகளுடன் போர்டிங் பாஸை விமான அதிகாரிகள் பிடுங்க துவங்கினார்கள். அதற்கென சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். எவ்வளவு திட்டினாலும் முகச்சிரிப்பை துளிகூட மாற்றாதவர்கள்.

 அவனது கையிலிருந்த போர்டிங் கார்டை பிடுங்குவதற்கு யாதொரு வார்த்தைகளும் விமான அதிகாரிக்கு தேவைப்பட்டிருக்கவில்லை. யாவோ அவரை மறித்தபடி நின்று சற்று முன் கற்றிருந்த மலையாளத்தில்

போப் ஆண்டவர் வந்துவிட்டாரா?” என்று கேட்டான்.

அதிகாரி உறைந்து போய் நின்றிருந்தார்.

Read more »

யகோவாவின் வருகை



அறிவிக்கப்பட்டிராத பாடலின்
மௌனத்தை திறப்பதுபோல்
அலுவலகக்கதவை
திறந்து நுழையும்
யகோவாவின் வருகையை

மஸ்கட்டின் மூடிய தெருக்களை
லாவகமாக திறந்து கடக்கும்
யகோவாவின் வருகையை

ஓமனின் வனாந்தரத்தில்
தொலைந்த இளமையை
கைகளில் ஏந்தி வருகிற
யகோவாவின் வருகையை

பிலிப்பினோ பெண் பிருஷ்டங்களின்
புன்னகையை சுமந்துவருகிற
யகோவாவின் வருகையை

ரஷ்யப்பெண்களின்
கூந்தலில் சூடிய நடனத்தின் அழைப்பை
கக்கத்தில் இடுக்கியபடி வருகிற
யகோவாவின் வருகையை

தாய்லாந்து உடல்சுளுக்கு
அழைப்புசீட்டுடன் வருகிற
யகோவாவின் வருகையை

இத்தாலிய திராட்சை ரசங்களின் கனிவை
குவளைகளில் ஏந்திவருகிற
யகோவாவின் வருகையை

நேப்பாள நடனக்கதைகளை
கைமாற்ற வருகிற
யகோவாவின் வருகையை

இந்திய வேலைக்காரிகளின்
அழைப்பு எண்களை
மேகமூட்டத்தில் தூவுகிற
யகோவாவின் வருகையை

வாரக்கடைசிக்கான
இந்தோனேசிய கனவுகளை
அள்ளியெறிகிற
யகோவாவின் வருகையை

பாலைவனத்து மலையாள நடனங்களை
பரவசத்துடன் அறிவிக்கிற
யகோவாவின் வருகையை

ஏதேன் தோட்டத்து
கசப்பான காடியை தருகிற
யகோவாவின் வருகையை


மரப்பீப்பாய்களில் தருவிக்கப்பட்ட
நூற்றாண்டு காதல்களை
சுருக்குபைகளில் விநியோகிக்கிற
யகோவாவின் வருகையை


மரியாகேரியின் நாளைய பாடலின் வரிகளை
தூரத்துசொந்தங்களின் வழி தருவிக்கிற
யகோவாவின் வருகையை

கடைத்தெருவில் தொலைத்த
கடவுளின் கைபேசி அட்டையை
பரிசளிக்கிற
யகோவாவின் வருகையை

அலுவலகத்து இருக்கைகள்
உடை களைந்து வரவேற்கின்றன
எவ்வித அதிர்வையும் தந்திராத
யகோவாவின் வருகையை


Read more »

25/8/11

ஒரு சாயங்காலம்


ஒரு சுலைமானி
சில கவிதைகள்
மழையின் முதல் துளி போல கொஞ்சம் கண்ணீர்
சாயங்காலம் நன்றாயிருக்கிறது
துணியுலர்த்தும் காதலிகள் எட்டிப் பார்க்காதவரை.

Read more »

பாலைவன நடனத்திற்கான ஒத்திகை


ரத்தம் உறிஞ்சும்
அரேபிய பாலையின்
மணல் வெளிகளில்
நீ தேடுகிறாய்
தொலைத்ததை.

அனல் வீசும்
ராத்திரியிலும்
மூச்சுத்திணறலுடன்
உன் தேடல் நீள்கிறது.

தாவீதின் குமாரர்கள்
பரிகாச சிரிப்புடன் மறைகிறார்கள்.

குமாரத்திகள் நிர்வாண
நடனத்திற்கான ஒத்திகையில்.

மோயிசனின்
வழிகாட்டலில்
பெயரற்ற பாலையில்
நீ எழுதிய பெயர்களை
அழித்தபடி
மணல்சுமக்கும் காற்று.

கானான் தேசத்து
பாற்கடலின்
பேரிரைச்சல் உன்னை நெருங்குகிறது.

ஊதாரிகளின்
கூடாரத்து வெளிச்சத்தில்
நீ தவறவிட்ட
பாஸ்போர்டில்
கைக்குழந்தையின்
கடைசி புன்னகை
அச்சுப்பிழையுடன்.

யெகோவாவின் பிள்ளைகள்
திருடிய
அடையாள அட்டையில்
ஒட்டப்பட்ட
உன் மனைவியின் நெற்றிப்பொட்டு.

கம்மாய்கரை கேவல்கள்
தூதரகங்களின்
நெஞ்சுக் கூட்டில்
நிரம்பி வழிகிறது.

செங்கடலின் தாலாட்டில்
பயணதிசையை தொலைத்த
தூதரகத்து கப்பல் கேவல்களை சுமக்குகிறது.

உன் தேடல் நின்றபாடில்லை.
தொலைத்ததும்
தேடுவதும வெவ்வேறாக இருந்தபோதிலும்.

Read more »

23/8/11

நகுலனின் உலகம்

நகுலனின் உலகம் நான்கு அறைகளுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. நேற்று ஒரு கவிதை கதவை திறந்து நகுலனை தேடிக்கொண்டிருந்தபோது அவர் வேறு கதவு வழியே வெளியேறிக்கொண்டிருந்தார். நகுலன் எந்த அறையிலும் இல்லையென்பது கவிதைக்கு ஒருபொழுதும் தெரியபோவதில்லை. நகுலன் அப்பத்தை பிட்டு திராட்சை ரசத்தை பருகத்துவங்கினார் ஆமென்.

Read more »

21/8/11

கோணங்கியும் நானும்

கோணங்கியும் நானும் நகுலனின் வீடு நோக்கி நடந்த பாதைகளை கிட்டதட்ட பதினாறு வருடங்களுக்கு பிறகு பார்க்க நேர்ந்தது.

நான் பார்த்தபோது நகுலனை பாதையும் கவனித்திருக்கவேண்டும் ஏனென்றால் பாதைக்கு வெளியே இருந்த கோணங்கி சிலிர்த்துக்கொள்வதை பதினாறு வருடங்களாக வெளி கவனித்துக்கொண்டிருந்தது.

Read more »

7/8/11

மாமல்லனும் மாஞ்சாசோறும்


இலக்கிய ரவுடி மாமல்லனை பற்றி சமீபத்தில் அறிந்தேன்.
அவரை பலரும் பல காரணங்களுக்காக கொண்டாடுகிறார்கள்.
அவருடைய வசனங்களை பலரும் உருப்போடுகிறார்கள்.
எதிரியை நிலைகுலைய வைத்து வயிற்றில் பலமுறை குத்துவதன் மூலம் 
மாஞ்சா சோற்றை வெளியே கொண்டுவரும் கலையில் மாமல்லன் 
வல்லவர். எனக்கு அவர் மேல் பயபக்தியே உண்டாகிவிட்டது.
 மேலும் அறிய ஆவலுடன் சில கேள்விகள்.

 எத்தனை பேருக்கு மாஞ்சா சோற்றை 
எடுத்திருக்கிறார்?

அதனால் வழக்குகள் பதிவாகியுள்ளதா?

எத்தனை வருடங்களாக?

மாஞ்சா சோற்றை எடுத்தபிறகு வில்லனை போல மாமல்லன் நடனமிடுவாரா?

மாஞ்சா சோற்றை இழந்தவர்கள் மரணமடைவார்களா?

வெற்றி கொண்டாட்டங்களை மாமல்லன் 
புகைபடம் எடுத்து வைத்ததுண்டா?

மாஞ்சா சோற்றை மாமல்லன் சேகரித்து வைத்திருக்கிறாரா?

Read more »

29/7/11

மனநோய்களுடன் சுற்றிதிரிகிற கடவுள்

பிணைக்கப்பட்ட சங்கிலிகள் 
நீ சிரிக்கையில் குலுங்குகின்றன 

உன் கூவலில் வந்திறங்கிய பட்டாளம் 
மனவெளியை சிதைக்கின்றன

யாருமற்ற ராத்திரிகளில்
உன் அலறல்களின் பாடல்
தொலைத்த திறவுகோல்கள்
மந்திரவாதிகளின் புகைகூட்டில் நடனமிடுகின்றன

உன் தனிமையின் சொப்பனங்கள் 
தருவித்த கடிதவரிகளில்
மலை நகருகிறது

நகரும் மலையால் உன் வீடு 
கடலுள் தள்ளப்படுகிறது

நீ சுற்றிதிரிந்த
பிரேதேசங்களின் கடவுள்
அலைகளின் கடவுளோடு புணர்கையில்
தாளம்பூக்களின்
வியாபகத்தில் விடிகிறது உனக்கான காலை

மனவெளியின் காட்சியில் திகைத்தபடி
நீ விட்டெறிந்த வார்த்தைகள் எழுதுகின்றன
உனக்கான மனநோய்களை

சொப்பனகூட்டில் என்னை கனிந்த போது
துவக்குகளால் பிளந்த
கதவுகள் வழி நுழைகின்றன
உன் வளர்ப்பு மாடுகளின் பிளிறல்கள்

கருப்பட்டிச்சில்லுகளால்
எறிந்து விரட்டும்  காலத்தின் கதவுகள்
சாத்திக்கொள்கின்றன
உனக்கும் எனக்குமான பெருவெளியில்

மனக்கொப்புளங்களில்
நான் தீட்டிய அருவாள்கள்

புரண்டெழும் பனையின் சீற்றங்களில்
வெருள்கின்றன
பிதாக்களின் களிக்கூட்டங்கள்

சங்கிலிகள் வரைந்த உன் நடை தூரங்களில்
நீ தடுமாறி முத்தமிட்ட தரையெங்கும்
உதிரம் எழுதமறுத்த கனவுகள்

நீந்தியலையும் என் பயணங்களில்
கடலில் தள்ளப்பட்ட வீடு
சுறாக்களின் களிப்புடன் எதிர்கொள்கிறது

ஸ்காரியோத்தின் கடைசிபுத்திரனைப்போல
என்னையும்
சிலுவையில் அறைய துடிக்கிறது
உன் பிறழ்வெளி

பனையின் கொண்டையிலிருந்து
நீ குதிக்கையில்
அறுத்தெறிந்த பாம்படத்தின் சிரிப்பொலிகள்
ஞாபக வடுக்களின்
நடனங்களை ஒழுங்கமைக்கின்றன

இரவு விருந்தின் கடைசியில்
நீ விட்டெறிகிறாய்
வெறுமையின் கடவுளை

காவுகளில் படைத்த படையலை
புறக்கணித்தபடி வெளியேறுகிறாள்
சுவைமொட்டுகள்  கருகிய காளி

சங்கிலியையேனும் வைத்திரு
எனக்கான காலங்களுக்காக

Read more »

என் மலைசரிவு தோட்டம்


என் வேட்டை சாகசங்களில்
வீழ்ந்த பன்றிகளை
மேய்க்கத் துவங்குகிறாள் என் மகள்

உறக்கத்திற்கான கதைகளில்
கோதையாற்று மலைச்சரிவில்
பரந்து விரியும் என் தோட்டம் வந்தமருகிறது

தோட்டசரிவின் உயிர்ப்பை மீட்டும்
என் தாலாட்டுகளில்
கண்ணயர்கிறது என் மனைவிக்கு

வாழைகளை முறிக்கும் யானைகளை
விரட்டியதை
பாலையெங்கும் ஓடிக்காண்பிக்கிறேன்

மிளாக்கள் அலறும் இரவை
பாலைவனக்காற்றில் வரைகிறேன்

நான் கண்டிராத
தோட்டத்தின் காட்சிகள்
பாலை கூடாரத்தை நிறைக்க துவங்குகிறது

என் கடிதங்களில்
முளைத்த தோட்டத்து புற்கள்
எனக்கு தருவித்த கதைகளில்
மலையிறங்கும் காணிகள்
பிடுங்கிய கிழங்குகள்
வாற்றுச்சாராயத்தில் மிதக்கின்றன

கிராம்பு இலை சருகுகளை
சேகரித்து திரும்பும்
என் அம்மாவின் புன்னகையில்
அக்கானி கலயங்கள் சிதறின

சிரட்டைகள் ஏந்தும் மரங்கள்
பரிகசித்தன என்னை

பனைகள் புணர்ந்த
காளிகளின் நடனத்தில்
தம்புரான்கள் உருவிய மாராப்புகளில்
விசிறிய பிரம்பில்
பனம்பட்டை கள்ளில்
கரையத்துவங்குகிறது என் பிம்பம்

அவள் கண்கள் வழியே
என்னுள் இறங்குகிறது
எனக்கே எனக்கான தோட்டம்

உறக்கமற்ற இரவுகளில்
விழித்தெழும் தோட்டத்தின்
சுக்குநாறி புற்களில்
நான் பின்னிய தொட்டில்
ஆடிக்கொண்டிருக்கிறது இரவெங்கும்

Read more »

பார்வையில் அடைந்த கர்ப்பம்


தவிர்க்க இயலாத
நடைபாதையை நிறைத்தபடி
நிகழ்காலத்தின் அழகுபதுமை
என் எதிரே

நவீன உடையினுள்
துள்ளிக்குதிக்கிறது
எனக்கான வாழ்க்கை

சந்தோஷத்தின் ஹைஹீல்கள்
பின்னுகின்றன
என் பார்வையின் உக்கிரத்தில்

உடையை சரிசெய்ய முயலும்
அழகில் கலைகிறது
எனக்கான பெருமூச்சுகள்

வேட்டை தந்திரங்களின்
பார்வையில் விரியும்
கண்ணிகளை
லாவகமாக கடக்கின்றன
உன் முயல்கள்

உன் உடல்மொழியின் நடனம்
பார்வையில் கைகோர்க்கிறது

ஏவாளின் வெட்கங்களை
தொலைத்த உன் முகத்தில்
துளிர்த்த பனிபூக்களில்
தப்பிக்கும் மிருகங்களின் தந்திரங்கள்

கடந்துபோகையில்
நீ அடையும் கர்ப்பம்
எனக்கான சொப்பனத்தின்
திறவுகோலை திருடிக்கொள்கிறது

யாருமற்ற நடைபாதையில்
நீ திருப்பிக்கொள்ளும் பிருஷ்டங்கள்
மீறுகின்றன எழுதப்பட்ட நளினங்களை

இரவுக்கான உணவை பகிர்கையில்
நீ அணியமறுத்த உடைகளில்
தேங்கிநிற்கிற கர்ப்பம்
புணர்ச்சிக்கான ஏக்கத்தில் கலைகிறது

உடல்பாகங்கள் உறைந்த வார்த்தைகளை
வாசிக்கையிலெல்லாம்
உன்னை புணர்கின்ற விழிகளில்
சாத்திக்கொள்கின்றன
உடல் பலஹீனத்தின் கதவுகள்

கர்ப்பம் யாருமறியாமல்
மலர்ந்து கொண்டிருக்கிறது

Read more »