12/7/13

திறப்பின்வழியே வெளியேறும் பாம்பு


           
பொறிக்குள் அகப்பட்டிருந்த பாம்பு ஒரு திறப்பின் வழியே வெளியேறிக்கொண்டிருந்தது. பழுத்து சுருங்கியிருந்த பாம்பு தடதடக்கும் ரெயில்வண்டியின் உருவை அடையும்வரை பார்த்தபடி நகரும் கண்கள் மௌனத்தின் ஆன்மாவை கொத்தத்துவங்கின. பேரிரைச்சலுக்கு நடனமிடாத பாம்புகள் இவ்வுலகில் உண்டோ? பச்சை ரத்தத்தில் கொதிக்கும் மூங்கில் பாலை ஊறிஞ்சும் வயதில் இனப்பெருக்கம்கொள்ளும் பாம்புகளின் தலைப்பிரட்டைகளை சுண்ணாம்பு தடவிய ஈக்கலில் சூண்டையிடும் சாகசங்கள் அறியா நெருப்பின் அருகே பூத்திருக்கின்றன.

Read more »

7/7/13

அவர்களிடையே காதல் இருந்தது



போலீஸ் வேலை கிடைத்ததும் திவ்யா திரும்பி வந்துவிடுவாளென்று காதலை நம்பிய இளவரசனின் மரணம் வழக்கமான அரசியலுக்குள் சிக்கியிருக்கிறது. நாகரீக காலத்தில்(!) சாதியில்லை யென்ற தொடர் நாகரீக மௌனங்களையெல்லாம் தர்மபுரி செயல்பாடுகள் சற்றே முகர்ந்து பார்த்திருக்கின்றன. 

வடஇந்திய ஊடகங்கள் இடஒதுக்கீட்டை ஒழிக்கும் பாரியச்செயல்பாட்டை யுத்தத்தின் சாயல்களுடன் நடத்திக்கொண்டிருக்கின்றன. திறமையை குழித்தோண்டிப் புதைக்கும் ஆயுதமாக ரூபங்கொண்டிருக்கிற இடஒதுக்கீட்டை காப்பாற்ற எந்த ஜீவனும் முன்வந்திருக்கவில்லை. இடஒதுக்கீட்டால் பாரிய பொருளாதார வேட்கைகளை ஒடுக்கப்பட்ட சமூகம் பெற்றதாவென்பதே அபத்தகேள்வியாக உருமாறி வேப்பிலைகளுடன் ஊரைச்சுற்றி ஓடிக்கொண்டிருக்கிறது. 

இந்து மதத்தின் ஆன்மாவாக மாறிப்போன சாதியை ஒழிக்க பலருக்கும் தயக்கமிருக்கிறது. சாதியை ஒழிப்பவர்கள் இந்துமதத்தைதான் ஒழிக்கிறார்களென்பதை நம்புகிறார்களா யென்ன? சாதியை மாத்திரம் பேசும் தந்திரங்கள் மெல்வதற்கான சூயிங்கங்களை தொடர்ந்து உற்பத்தி செய்யும் சாகசங்களை கைவசம் வைத்திருக்கிறது.

பொருளாதார வேட்கைகள் ஈடேறாத சமூகம் தலித்துக்களின் வளர்ச்சியை சகித்துக்கொள்ளும் மனநிலைக்கொண்டதல்ல. தர்மபுரி காதலும் திவ்யாவின் தகப்பனின் தற்கொலையும் கலவரத்துக்கான தூண்டுதலை உருவாக்கியது உண்மைதான். பெருமக்களின் மனநிலையை சீசனல் சின்ட்ரோமாக தான் கவனப்படுத்தவேண்டும். கலவரத்தில் நத்தைபிடிக்க கிளம்பிய சில ஊடகவியலாளர்கள் சாதி ஒழிப்பாக தங்கள் நிலைப்பாட்டை வண்ணம் மாற்றிக்கொண்டது தனிவரலாறு. 

சாதி ஒழிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் குட்டிப்பூர்ஷ்வாக்கள் தான் எல்லாவற்றுக்கும் காரணமென்று ஆழமான சிந்தனைகளையெல்லாம் அகப்பட்ட மொழியில் வாந்தியெடுத்தார்கள். ஒற்றைப்பார்வைகொண்ட வர்க்கவியலாளர்களுக்கும் சாதி ஒழிப்பு ஊடகவியலாளர்களுக்கும் அதிகாரத்தின் குவிமையம் கண்ணுக்கு தென்பட்டிருக்கவில்லை. அரசர்களும் அரசிகளும் குறுநில மன்னர்களும் நவீன அரசியல்வாதிகளுமே சமூகபிரச்சனைகளுக்கெல்லாம் காரணமென்று பெரிய கண்டுபிடிப்புகளை நூதனமாக உருவிக்காண்பிப்பதை சமூகம் மன்னிக்க பிரார்த்திக்கிறேன். 

உஷ்ணம் பொங்கும் அதிகாரம் தன்னைதக்கவைத்துக்கொள்ள மதத்தையும் சாதியையும் மொழியையும் விரித்துப்பிடிக்கும் வல்லமை கொண்டது. சித்துவிளையாட்டின் பொறிகள் பலிபீடங்களுக்கு முன்பேதான் பொருத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு செய்தி தொகுப்பிற்கும் புதிய பலி தேவைப்படும் செய்திசேனல்களின் வேட்கையை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. 

இடஒதுக்கீட்டின் அந்திம காலத்தில் உலவுகிற நமக்கு சாதிய விளையாட்டுக்கள் அதிர்ச்சியான செய்திகளாக பரிமாறப்படும். சாதியை பெருமையான விஷயமாக மாற்றும் குழுக்களும் எல்லா செயல்பாடுகளின் பின்னாலும் மோப்பம் பிடிக்கும்.

தென்மாவட்டங்களில் ரகசியமாக கொல்லப்படுகிற காதலர்களுக்கு அஞ்சலி செய்ய கிளம்பினால் உங்களால் களைப்படையவே முடியாது. தனிச்சொத்துசார் சிந்தனைமுறைக்கும் சாதிய அடுக்குமுறைக்கும் தனிப்பட்ட பந்தமேதுமில்லை. பெண்களை தனிச்சொத்தாக பாவிக்கும் வழக்கம் மறைந்துவிட்டதா யென்ன?  

Read more »

23/6/13

நிலக்கண்ணிவெடிகளின் சொந்தமுகம்


எதிரிக்காக காத்திருத்தல் என்று கண்ணிவெடிகளை புகழ கவிஞர்கள் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். எதிரிகளை பலஹீனப்படுத்த நிலக்கண்ணிவெடிகளை உபயோகிப்பதாக நம்பிக்கைகள் உலவுகின்றன. 

எதிரிகளின் நகர்வை தாமதப்படுத்தவே பெரும்பாலும் நிலக்கண்ணிவெடிகள் உதவிச்செய்யக்கூடும். 

பூமியெங்கும் உலவிக்கொண்டிருந்த நானூறு மில்லியன் கண்ணிவெடிகளும் புதைக்கப்பட்டிருப்பதாக நம்பிக்கையூட்டும் தகவல்கள் புள்ளிவிவரங்களின் பெயரில் உலவவிடப்பட்டிருக்கின்றன. யுத்த எதிர்ப்பாளர்களின் சார்புகொண்ட புள்ளிவிவரங்கள் என்பதை அறிவுஜீவிகள் நம்ப மறுக்கிறார்கள்.

 நானூறு மில்லியன் கண்ணிவெடிகளை உற்பத்தி செய்ய எத்தனை காலம் பிடித்திருக்குமென்பதை கேள்விகேட்க துவங்கினால் ஆயுத சந்தையின் பலமுகங்களும் நொறுங்கிவிடும் ஆபத்துகளுண்டு. கண்ணிவெடிகளை பயன்படுத்திய யுத்தகுழுக்கள் எவ்வகையான பொறுப்புணர்வை நிலங்களின் மீது செலுத்தியிருப்பார்கள்.

நாற்பத்தி நான்கு மில்லியன் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதை சாதனையாக சொல்பவர்களும் அக்கூட்டத்தில் உண்டு. புள்ளிவிவரங்களின் சார்புதன்மையை பரிசீலிக்கவேண்டிய நேரமிது. புள்ளிவிவரங்களின் அரசியல் படுபயங்கரமான வெண்ணெய் முகத்தை தோற்றுவித்திருக்கிறது. புள்ளிவிவரங்கள் பெரும்பாலும் நம்பிக்கைகளின் மேல் கட்டப்பட்டிருக்கின்றன அவநம்பிக்கைகளின் மேலல்ல. 

புதைக்கப்பட்ட ஒவ்வொரு கண்ணிவெடியுமே யுத்தத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகின்றன. 

சமாதானகாலத்திலும் யுத்த ருசிகொண்ட கண்ணிவெடிகள் மனிதர்களுக்காக காத்திருக்கின்றன.

 கண்ணிவெடிகள் மனிதர்களையும் மிருங்களையும் குறிவைப்பதாக ஜதீகம் உலவும் யுத்தபூமியிது. வாகனங்களுக்கு குறிவைக்கப்படும் நிலக்கண்ணிவெடிகள் மனிதர்களை தாக்குவதில்லையென்று சமூக ஆர்வலர்கள் புலம்ப வாய்ப்பிருக்கிறது. 

நானூறு மில்லியன் கண்ணிவெடிகள் உற்பத்தி செய்யப்பட்டிருப்பது விழித்திருக்கும் அரசுயந்திரத்தின் பலஹீனமென்று யாராவது தொடர்ந்து நம்பிக்கைகொள்ள வைக்கலாம். 

யுத்த அரசியலை மறுவாசிப்பு செய்யவேண்டிய அவசியம் அறிவுஜீவிகளுக்கு நேர்ந்திருக்காது. அறிவுஜீவிகளையே மறுவாசிப்பு செய்யவேண்டிய நேரமிது.

சிறைக்கைதிகளின் ஒருவேளை உணவை அலகாககொண்டிருக்கிற செலவின அரசியலை உற்றுநோக்குபவர்களுக்கு நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் செலவின அரசியலும் புள்ளிவிவரங்களின் பின்புலங்களின் உலகமும் சரேலென்று திறந்துகொள்ளும் வாய்ப்புண்டு. 

யுத்தகாலத்திற்கு பிறகான கண்ணிவெடித்தாக்குதல்கள் விபத்தாக பார்க்கப்படுகின்றன. ஊனம் ஏற்படுத்தும் ஒருவிபத்து அவ்வளவுதான். கண்ணிவெடிகளை கண்டடைவதும் எச்சரிக்கை செய்யும் பலகைகளை வைப்பதும் ஒரு சமூகசெயல்பாடாக மாறிவிடுகிறது.

 கண்ணிவெடிகளை அகற்றும் செலவினம் அரசாங்கத்தின் மொத்த இருப்பையும் அடகுவைக்குமளவிற்கான பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கும் வல்லமைகொண்டவை. யுத்தத்திற்கு பிறகான யுத்தமுறைகளில் கண்ணிவெடிகள் தமக்கான இடத்தை உறுதிசெய்துகொண்டுவிடுகின்றன. 

அக்கடமிக் குழுக்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் துவக்க பாரிய பொருளாதார காணிக்கைகளை எதிர்பார்க்கின்றன. 

கண்ணிவெடிகளின் நிறமும் வடிவமும் பள்ளிக்கூட குழந்தைகளின் எதிரிகளாக சுட்டப்படுகின்ற அபாயங்களை கல்விக்குழுக்களால் கட்டுப்படுத்த இயலுவதில்லை. வடிவங்களும் நிறங்களும் காலப்போக்கில் ஏற்படுத்தப்போகிற அரசியலை அறிவுஜீவிகள் கவனப்படுத்த வேண்டிய நேரமிது. 

யுத்தமரணங்களை ஒளிபரப்பும் உரிமங்களை யுத்தகுழுக்களிடமிருந்து வாங்க காட்சி ஊடகங்கள் தயாராய் இருக்கின்றன. பகுதிநேர விளம்பர வருவாய்களை யுத்தகாட்சிகள் பெருக்கி தருமென்ற நம்பிக்கைகள் காட்சிஊடகங்களிடையே அதிகம். அறப்போராட்டங்கள் அசைன்மென்ட்களாக மாறியுள்ள இக்காலத்தில் யுத்தத்தின் தேவை பெருகியுள்ளது. 

இந்தியப்பரப்பில் மாவோயிஸ்ட்களின் யுத்தமுறை பாரிய சமூகத்திற்கு எந்த அச்சுறுத்தல்களையும் உண்டாக்கவில்லை. 
மாவோயிஸ்ட்களால் புதைக்கப்படும் கண்ணிவெடிகள் காலத்தின் தேவைக்கருதி மறைக்கப்பட்டிருக்கின்றன. 

பக்கத்துநாடான இலங்கையில் இஸ்லாமிய சமூகம் அச்சத்தின் வசப்பட்டது யுத்தக்குழுக்களுக்கு பிறகு கண்ணிவெடிகளுக்குத்தான். 

மாவோயிஸ்ட்களால் புதைக்கப்படும் கண்ணிவெடிகளை செயலிழக்க செய்ய இந்திய சமூகம் தயாராய் இல்லை. சர்வதேசத்தின் முன் கண்ணிவெடிகள் புதைக்கப்படாத நிலப்பரப்புகளை வைத்திருப்பதாக காண்பித்துக்கொள்ள இந்தியா கனப்பாடுபடுகிறது. 

மாவோயிஸ்ட்கள் பயன்படுத்தும் கண்ணிவெடிகள் மண்ணில் புதைக்கப்படுவதை நிலத்தை நேசிக்கிற எந்த பழங்குடி சமூகமும் எதிர்க்காதது ஆச்சரியத்தை தருகிறது. 

(நீண்டகட்டுரையென்பதால் சிலவரிகளை மாத்திரம் இங்கே பதிவிடுகிறேன்.)

Read more »

4/3/13

தினம் மரிக்கும் செதில்களோடு உயிர்த்தெழுகிறது காலம்



நிழல் உள்வாங்கும் தருணத்தில்
தீபிடித்து எரியும் என் உடல்

களைத்த ஒட்டகங்கள் கடந்துபோகின்றன

சதா கலைக்கவும் இடம்பெயர்க்கவும்
பயமுறுத்தும் மணற்குன்றுகள்

சுவாசப்பை நிரப்பும் மணல் துகளில்
கலந்துவரும் உன்னையும் எதிர்கொள்கிறேன்

மெல்லயெழும் வாதைகளின் நடனத்தின்
கச்சிதம் ஈர்க்கையில்
ஒப்பந்த விதிகளை புறந்தள்ளுகிறாய்

வெளிறிய பிசாசுகள் களைந்த உடைகள்
நாட்டப்பட்ட சிலுவைகளில் தொங்குகிறது

நாடோடிப்பெண்களை கொள்ளையிடுகையில்
இடம்பெயர்ந்தன ரோகிகளின் உடல்கள்

வாழ்வதென்பதே இப்பாலையை கடந்துவிடுவது

மணல்வெளியில் கைநீட்டும்
உயிரற்ற உடல்களை எரியூட்டுகிறேன்

அடையாளங்களை சேகரிக்கையில்
எலும்புகூடுகளில் எழுதப்பட்டிரா
தேசங்களை
மொழியை
இனத்தை
தடுமாறும் விவரங்களை
காற்றில் எழுதுகிறேன்

பிரேதங்களின் மறைவில்
நாள்பட்ட உணவுகளை உண்கிறேன்

மணல்வெளி மரணங்களின்
உடைகளை அணிகிறேன்

பிரேதங்களால் எழுப்பிய அரணில்
காற்றுக்கு பதுங்குகிறேன்

வழிபோக்கனுக்குரிய
சகலஅடையாளங்களையும் துறக்கிறேன்

குளிர் வாதைகளை விரட்ட
எரியவிட்ட தீபந்தத்தில்
அவயங்களை வாட்டுகிறேன்

துணைக்கழைத்த தேவதைகள்
எதிர்கொள்ளும்வரை

பயணங்களின் பலஹீனம்
கைகோர்க்கும்வரை

களைப்பில் தடுமாறும்வரை

சலிக்கா பெண்ணுடலால் மரிக்கும்வரை
                                                                              - குருசு.சாக்ரடீஸ் 

Read more »

16/2/13

சந்திரலேகாவின் முகத்தில் வீசப்பட்ட ஆசிட்டும் ஜெயலலிதாவின் துர்சொப்பனங்களும்




ஆசிட் வீச்சால் கொடுமையாக முகம் பாதிக்கப்பட்டிருந்த சந்திரலேகாவின் அம்மா ஒரு எழுத்தாளரென்பது லில்லி தெய்வசிகாமணி நினைவு இலக்கிய பரிசளிப்பு விழாவில் தான் பலருக்கும் தெரியவந்தது.

நீல.பத்மநாபனின் கூடவே உணவிற்கு கிளம்பிப்போனவர்களில் சந்திரலேகாவின் அம்மாவும் இருந்தார். கோவை உணவின் ருசியை அறிவதற்காக கைச்சோற்றை வாய்க்கு கொண்டுபோகும் தருணம் வெட்கங்கெட்ட பிரகிருதி சந்திரலேகாவின் முகத்தில் வீசப்பட்ட ஆசிட் கொடூரத்தை குறித்து விசாரிக்க துவங்கினார்.

சந்திரலேகாவின் அம்மாவின் கண்களிலிருந்து திரண்டு வந்த கண்ணீரை சேகரிக்கும் வலு என் வார்த்தைகளுக்கு இருந்திருக்கவில்லை. அழுகையினுடே ஜெயலலிதாவை தரங்கெட்ட வார்த்தைகளால் திட்டதுவங்கினார். சந்திரலேகாவின் வதைக்கப்பட்ட வாழ்வின் முன்னால் அவ்வார்த்தைகள் மிகச்சாதாரணம். தினம் தினம் அனுபவிக்கும் சந்திரலேகாவின் வேதனைகளை புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் நமக்கு இருக்கிறா என்ன?

அழுகைக்கு பின்னான உணவை உண்ணும் மனநிலைகொண்டவர்கள் அக்கூட்டத்தில் இருந்திருக்கவில்லை. கொடூரமான ஆசிட் தாக்குதலுக்கு ஆளான சந்திரலேகா துடித்த துடிப்பை சந்திரலேகாவின் அம்மா விவரித்தபோது நடுங்கிய ஈரக்கொலையை நிறுத்த தெரிந்திரா மனங்களில் ஒழுகிய குருதியை விநோதினியின் ஆசிட் தாக்குதலுக்கு பிறகு அனேக மனங்களில் காணமுடிந்தது.

ஆசிட்டால் தாக்குவது கலாச்சாரமாக வளர்தெடுக்கப்படுகிறதோவென்ற அச்சம் கொண்ட மனங்களின் கண்ணீரை சமூக வலைதளங்களில் காணும் பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்திருக்கிறது.

பெண்ணுடலை கொடூரமாக வதைப்பதன் மூலமடைகிற குரூர ருசியை அறிந்துகொண்ட மிருகங்களை எந்த வார்த்தைகளால் திட்ட?

Read more »

குட்டை பாவாடையும் குனிந்து விளையாடும் பெண்களும்





துள்ளலில் உயரும் பாவாடையுடன்
நீ விளையாடத்துவங்குகிறாய்

புரண்டெழும் மிருகத்தின் சுவாபங்களுடன்
விழித்தெழுகிறது கடல்

கருகிருட்டில் வீழும் வெண்பறவையாய்
மிருகத்தின் நகங்கள் முளைக்கின்றன

தொலைந்த பயணத்தின் தொலைவை அளவிட
புதிய பயணங்களை துவக்குகிறாய்

ஒருவேளை
நீந்திகடக்க இக்கடல் அனுமதிக்கும்

கடலுக்கும் பயணங்களுக்கும்
உன்னைபோல ஒடுங்கிப்போகும் பாக்கியம் வாய்த்ததில்லை

என்னையும் அலைகளையும்
சிப்பிகள் சேகரிக்கும் குழந்தையாய் மாறிய நீயும்
ஒரு குவளை தேநீருடன் கைநீட்டகூடும்

உன் வீட்டின் கதகதப்பான மூலையில்
நீ தொலைத்த முத்தத்தில்
இடம்பெயர்ந்த குன்னிமுத்துக்களை
சேகரிக்க திரும்பும் பால்யத்தின் நினைவுகளை
அனுப்பமறுத்த வள்ளங்கள்
மணல்வெளியின் கருணையில் துயில்கின்றன

பல்லாங்குழியில் தடுமாறும் காதலை
பல்லாங்குழியின் எதிர்துருவத்திலேயே எதிர்கொள்கிறாய்

உயரதுடித்த அலைகள் மடிந்து பின்வலிகின்றன

சாத்தானின் குழந்தைகள் உன்னோடு பொருதுகின்றன

நீ வரிசைபடுத்திய புகைபடங்களில்
அறியாமையின் திமிர் எட்டிபார்க்கிறது

என் வருகைக்காக தவறவிட்ட உன் இளமையை
கௌவி நீந்தும் மீன்களை

அன்பால் நீ உகுத்த கண்ணீரை உறிஞ்சும் விரால்களை

பத்தாயத்தில் உறங்கும் நம் கடவுளை
இக்கடலுக்குள் கொண்டுவர
நீ உதிர்க்கும் பிரார்த்தனைகளை

களைப்பற்ற தொடர் நீச்சலில்
திணறா சுவாசத்தின் பிடிவாதத்தை

மீன்களின் வயிற்றில்
நெடு உறக்கத்தை துவங்கஇருக்கிற என்னில்

உடைகள் உன் எதிரியைப்போல
துவைத்து எறியும் பந்தின் போக்கில்

யுத்தத்தின் கடைசியில் உடைகளை களைகிறாய்

கேடயங்களில் நீ காயவைத்த உள்ளாடைகள்

வானமும் திசையும் நீங்கா துருவநட்சத்திரமும்
பயணங்களுக்கான திசைகாட்டிகளல்லவென்பதை
தாமதமாக உணரும் உன் புதைவெளி பயணங்கள்

கடித்துபிடித்தபடி தொடரும் மீன்களைபோல
கண்ணாடி பேழைக்குள் நீந்துகிறாய்

உன் சுவாசத்தின் உணர்வில்
மீன்களின் ரத்தவேட்கை படிகிறது

கலங்கரைவிளக்கங்கள் அனுப்புகிற ஒளியில்
உன் வியர்வையின் வசீகரம் கலந்து வருகிறது

வேட்டையாட காத்திருக்கிற மீன்களின்
கண்களில் தெரிகிற வெறிகலந்த ஏளனத்தை

உன் சதைகூடு விசித்திர இரையாக மாறிக்கொண்டிருப்பதை

கடல் விரித்த பொறியிலிருந்து தப்பிக்க
நீரோட்டத்தில் இழுக்கப்படும் அறியாத பயணத்தைபோல

யோனாவின் பேழையில் நிரப்பபட்ட
எனக்கு மறுக்கப்பட்ட இடத்தில்
உதாசீனங்களின் காதலைபோல

புதிய உலகில் பேழையிலிருந்து இறங்கும் உன் பாதங்களில்
முரட்டுபாதரட்சையின் அவசியத்தை

பாவாடைநாடாவில் தொங்கும் மரணதூதர்கள்
விளையாட்டின் விதிமுறைகளை மீறுகையில்

வனாந்தரத்தின் ஒற்றையடி பாதையை
கடல்வெளியில் தேடும் உன் மனஆசைகளை

இரைப்பையில் தங்கிவிட்ட கொடூரபசியை தூண்டுகின்றன
விளையாட்டின் கடைசியில்
நீ பறக்கவிட்ட முத்தங்கள்

குட்டைபாவாடையுடன் குனிந்துவிளையாடும் பெண்கள்
தருவிக்ககூடும்
இக்கடலுக்குள் அமிழ்ந்திடும் உடல்களுக்கான சவப்பெட்டிகளை.

Read more »

நீலவர்ணத்திலிருந்து தப்பித்தல்


                        
                                                                                   
                                                                                  குருசு.சாக்ரடீஸ்

குரோதம் மட்டுமே கொண்டிருந்த கடலினோடு எந்தப் பரிச்சயமுமற்ற நைஷாபோல் புனித ராயப்பரின் வருகைக்காகக் கடலுக்குச் சற்றும் பொருத்தமற்ற மிகச்சிறிய பைபர் படகில் காற்று ரீங்கரிக்கும் நடுக்கடலில் காத்திருந்தான்.

பயணியைப்போலவோ மீன்பிடிப்பவனைப்போலவோ தோற்றம் தந்திராத நைஷாபோலை பலகாலம் கரையொதுங்கி கிடந்த படகு நீலவர்ணத்திற்குள் அழைத்துவந்திருந்தது. பெரும் அலைக்குத் தாங்காத இற்றுப்போன பைபர் படகென்றாலும் மிதக்கும் தன்மை கொண்டிருந்ததால் அது கடலில் மிதந்துகொண்டிருந்தது.

பாதை மாறாத சரக்குகப்பல்களுக்கான நீர்வழித்தடத்திற்கு வெகுதொலைவில் அப்படகு மிதந்துகொண்டிருந்ததால் எந்த ரடாரிலும் ஒரு புள்ளியைக்கூடக் காண்பித்திருக்கவில்லை. படகிலிருந்து குதித்து இறங்கிய நைலான் கயிற்றில் மிககனங்குறைந்த நங்கூரத்தை நைஷாபோல் கடலுக்குள் இறக்கியிருந்தான். நீளங்குறைந்த நைலான் கயிற்றில் தொங்கிகொண்டிருந்த நங்கூரம் பதினைந்து கிலோவிற்கு மேல் எடையில்லாத கான்கிரீட் பிளாக் தானென்றாலும் அது கடலின் ஆழத்திற்குள் இறங்கியிருக்கவில்லை. நங்கூரமாகப் பயன்படுத்த அதுதான் அவசரத்திற்குக் கிடைத்திருந்தது. கடல்நீரால் ஒவ்வாமை கொண்டிருந்த கான்கிரீட்டால் செய்யப்பட்டிருந்த பிளாக் உதிரும்தன்மையை அடைந்திருந்தது.

நீர் விளையாட்டு பயிற்சிக்காகப் பயன்பட்டு வந்த படகு பேரலையில் திசைமாறி நண்பனின் கைக்கு அதிர்ஷ்டம்போல வந்தடைந்திருந்தது. கரை ஒதுங்கி கிடந்த படகை சொந்தம் கொண்டாடி யாரும் வந்திருக்காததால் நெடுங்காலம் கைவிடப்பட்டிருந்த அப்படகை மிகசொற்ப விலைக்கு நைஷாபோலின் தலையில் தென்னாட்டைச் சேர்ந்த நண்பன் கைமாற்றியிருந்தான். படகின் நீர்கசிவு பிரதேசங்களில் எம் ஸீலைக்கொண்டு அடைத்திருந்ததால் கடலில் மிதக்கும் தன்மையை அப்படகு மிச்சம் வைத்திருந்தது. தென்னாட்டைச் சேர்ந்தவனும் பல பெயர்களைக் கொண்டிருந்தவனுமான நைஷாபோலின் நண்பன் சவுதி அரேபியாவிலிருந்து வெளியேறுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்திருந்தான்.

பிளாஸ்டிக் கூடுகளில் கட்டப்பட்ட உணவுபொட்டலங்களும் காலி பெட்ரோல் கேன்களும் படகின் உள்பரப்பை விழுங்கியிருந்தன. தலையில் ஒரு கனமான தொப்பியை எலாஸ்டிக் வாரின் உதவியில் நிறுத்தி சுற்றுலாதனத்தை உருவாக்கும் கற்பனைகளை நைஷாபோல் கொண்டிருந்தான். தொப்பிக் கச்சத்திலிருந்து தலையைப் பாதுகாக்கும் தகுதியை அவன் படகில் ஏறிய துர்பாக்கியம் நிறைந்த அக்கணத்திலேயே கைவிட்டிருந்தது. கச்சத்தால் படகின் உள்கூட்டில் நிறையும் தண்ணீரை வெளியேற்ற எந்தக் கைப்பம்பும் பொருத்தப்பட்டிருக்காத அப்படகு நீண்ட பயணத்திற்கான எந்தச் சௌகரியங்களையும் கொண்டிருக்கவில்லை.

நைஷாபோலின் படகு மிதந்துகொண்டிருந்த கடல்பரப்பை அடைய புனித ராயப்பருக்கு அதிகக் காலம் எடுக்காதென்றாலும் அதிக விபத்துக்களால் சிதைந்திருந்த கடல்பிரதேசத்தில் அவர் மட்டுமே கடலோடிகளுக்கு உதவிக்கொண்டிருந்தார். ஏற்பாடு செய்திருந்த தென்னாட்டைச் சேர்ந்த நண்பன் மூன்று நாட்களுக்கு ஒருமுறையேனும் புனித ராயப்பர் அப்பிராந்தியத்தினுள் வந்துசெல்லும் வழக்கம் உண்டென்று நம்பிக்கையூட்டியிருந்தான்.

சவுதி அரேபிய பாலையில் நைஷாபோலுக்குத் தெரிந்த ஒரே முகம் அவன் தானென்பதால் நம்புவதைத் தவிர வேறுவழி தென்பட்டிருக்கவில்லை. தென்னாட்டைச் சேர்ந்த நண்பன் நெடுங்காலம் சவுதியில் வாழ்ந்து வந்திருந்தாலும் அதிகத் தொடர்புகளைக் கொண்ட அவனுக்கும் எந்தக் காதலியும் அப்பாலையில் இருந்திருக்காதது நைஷாபோலை ஆறுதல்படுத்தியிருந்தது. சவுதி அரேபியாவிற்கே நைஷாபோலின் நண்பன் மாத்திரம்தான் நம்பிக்கைகளை ஏற்றுமதி செய்துகொண்டிருந்ததால் அப்பாலை நம்பிக்கைகளால் நிரம்பியிருந்ததைக் கவனித்திருந்தான்.

நெடும்பயணம் வந்த வழியெங்கும் பூப்பெய்திய மீன்கள் இயந்திரம் உந்திக்கொண்டிருந்த படகை கடந்து போனது அவனைத் தற்செயலான பிரம்மைக்குள் தள்ளியிருந்தது. பலவர்ணங்களைகொண்டிருந்த அவைகள் நீலவர்ணத்திற்குள் நீந்திக்கொண்டிருப்பதைக் கவனிக்கும் வாய்ப்புகளைக் கடல்நோய்பீடித்திருந்த உடம்பு தந்திருக்காதது அவனைத் துரதிர்ஷ்டத்திற்குள் தள்ளியிருந்தது.

வலங்கம்பாறை மீன்களும் வழியெங்கும் தென்பட்டிருந்தாலும் அவைகளிடம் புயலுக்கான எந்தப் பதட்டமும் இருந்திருக்கவில்லை. பெட்ரோல் தீர்ந்த படகு ஜீவனை இழந்து நீரோட்டத்தில் இழுபடும்வரை பொறுமைகொண்டிருந்த உடம்பு வாந்தியை துவக்கியிருந்தது.

தனிமையைக்கொல்ல ஒரு மண்புழுக்கூடக் கோர்க்கப்பட்டிராத தூண்டிலை கடலில் வீசியிருந்தான். பிளாஸ்டிக்பொம்மையிலிருந்து திருடப்பட்ட மினுங்கும் துணியைத் தூண்டிலில் கட்டியிருந்தானென்றாலும் பரந்தகடலில் அது தன் பொருத்தத்தை இழந்திருந்தது. மினுங்கும் துணி மீன்களை வசீகரிக்கப்போதுமான குணங்கொண்டிருந்தாலும் மீன்களின் பரிதாபப்பார்வையைச் சகிக்கும் பக்குவம் அவனுக்கு இருந்திருக்கவில்லை. தூண்டிலைசுற்றி நீந்திக்கொண்டிருந்த திருக்கை மீன்கள் அவனது சாமர்த்தியங்களுக்கு வெளியே இருந்தன.

வளைகுடாவின் கடற்பரப்பில் தாக்கும் திறன்கொண்ட திருக்கை மீன்களே பலகுறும்புகளையும் செய்து புனித ராயப்பரின் அன்பை இழந்திருந்தன. பதட்டங்கொண்டு நீந்திக்கொண்டிருந்த திருக்கை மீன்கள் இந்தியப்பெருங்கடலில் உருவாகியிருந்த கோனுபுயலின் திசையை உணர்ந்திருந்ததால் இடம்பெயர்வதற்கான ஆலோசனையில் இருந்தபோதுதான் நைஷாபோலின் கேணத்தனமான வருகையைக் கண்டு கவலையடைந்திருந்தன.

கையடக்க ஜிபிஎஸில் அடிக்கடி பரிசோதித்துகொண்டிருந்த நைஷாபோல் அப்பொருட்களை அடைய அதிக விலையைக் கொடுத்திருந்தான். சரியான பாகையில் பயணித்திருந்தாலும் அவனுக்குச் சொல்லப்பட்ட இடத்தை அடையுமுன்னே பெட்ரோல் தீர்ந்திருந்தது. மிககுறைவான திறனுள்ள இயந்திரத்தை படகில் பொருத்த கழுத்தில் கிடந்த மூன்றுபவுன் தங்கசங்கிலியை கொடுத்திருந்தான்.

அவனது நிச்சயார்த்தத்திற்காகப் பெண்வீட்டிலிருந்து தங்கசங்கிலியை அணிவித்திருந்தார்கள். சவுதி அரேபியாவிற்குக் கிளம்பிக்கொண்டிருந்த அவனுக்கு அவசரம் நிரம்பிய நிச்சயதார்த்தம் பெருங்கூச்சத்துடன் நடந்திருந்தது. பொறாமையுடன் வழியனுப்ப வந்த சொந்தங்களிடையே அப்பெண்ணும் நின்று கொண்டிருந்ததை நைஷாபோல் கவனித்திருந்தான். தன் காதலிக்கு கொண்டுவந்த கடைசி முத்தத்தை விமானத்தில் பறந்தபடி வெளியே வீசியெறிந்ததை யாரும் கவனித்திருக்காதது பயணத்தைச் சௌகரியமாக்கியிருந்தது. கர்ப்பம் கலைக்கப்பட்டிருந்ததால் உடல் சோர்வுற்றிருந்த அவனது காதலி வழியனுப்ப வந்திருக்கவில்லை.

பயணத்திற்குப் போதுமான பெட்ரோல் நிரப்பியிருந்தானென்றாலும் கடற்பயணத்திற்குப் பொருத்தமற்ற அவனைப் போலவே இயந்திரமும் இருந்தது. அதிகமான பெட்ரோலை செலவழித்திருந்த இயந்திரம் அவனைப் பெருவழியில் கொண்டாக்கியிருந்தது.

அதிர்ஷ்டத்தைத் தருவிக்கும் கோல்மீன்களை வேட்டையாட வருபவர்களே அப்பிரதேசத்தினுள் வந்துபோவது வழக்கத்தில் இருந்ததை அவனது நண்பனுங்கூட அறிந்திருக்கவில்லை. அபாயகரமான வேட்டைபிரதேசமாக அறிவிக்கப்பட்டிருந்த கோல் கிரவுண்டை வந்தடைய வேட்டையர்கள் பெரும்பாலும் விரும்புவதுண்டென்றாலும் கோனுபுயலின் திசையிலிருந்து விலகிக்கொள்வதற்காக அப்பிரதேசத்தைவிட்டு வெளியேறியிருந்தார்கள். ஓமானின் தெற்கே பல நாட்டிக்கல் மைல் தொலைவில் கோல் கிரவுண்ட் இருந்தது.

இரவிலும் பகலிலும் தண்ணீரின் ஏக்கத்தை வாரியிறைத்த காற்றை எதிர்கொள்ளச் சதா ஜெபித்துகொண்டிருந்த அவனைநோக்கி புனித ராயப்பர் வந்துவிடுவாரென்ற நம்பிக்கை நீலவர்ணத்தைபோல எல்லாப் பரப்பிலும் இருந்தது. வளைகுடாவிலிருந்து தப்பித்து வருபவர்களை அவரவர் நாட்டிற்குகொண்டு சேர்ப்பிக்கும் வெட்கங்கெட்ட வேலையையும் புனித ராயப்பரே செய்து கொண்டிருந்ததால் அவரது நேரமின்மையைகுறித்துக் கடலோடிகளிடையே முணுமுணுப்பு இருந்தது. மனிதர்கள் நீந்துவதற்குத் தோதற்ற அப்பிரதேசத்தில் பிணங்களுக்குக் கவனிப்பு கிடைத்துவந்ததை யாரும் விரும்பியிருக்கவில்லை.

வழிதவறிய யாத்திரீகனின் தோற்றத்தில் உலவிய புனித ராயப்பரை கப்பலின் தலைமை அதிகாரிகள் அறிந்துவைத்திருந்தார்கள். புனித ராயப்பரின் பயணதிசையோடு எந்தக் கப்பலும் குறுக்கிடுவதில்லையென்பதால் தங்குதடையற்ற பயணியான அவரால் கடலின் எல்லாப்பரப்பிலும் யாத்திரை செய்ய முடிந்தது. கடலில் மிதக்கும் பிணங்களை மீட்கவும் அடக்கம் செய்யவும் பிரார்த்திக்கவும் எந்தத் துணையுமில்லாமல் அவராகவே செய்துவந்தார். அதற்கான பிரத்தேக அனுமதிக்கு சவுதி அரேபியாவோடு எந்த ஒப்பந்தமும் செய்திருக்கவில்லையென்றாலும் புனித ராயப்பர் அனுப்பிய விண்ணப்பம் நிலுவையில் இருந்தது. வளைகுடாவில் மரிக்கும் வேலையாட்களைக் கடலில் வீசும் வழக்கத்தை மாற்றிக்கொள்ள வேறுமார்க்கங்கள் வளைகுடாவாசிகளுக்குத் தென்பட்டிருக்காததால் பிணங்களைக் கடலில் வீசிக்கொண்டிருந்தார்கள்.

சவுதி அரேபியாவிலிருந்து வெளியேறும் மனித உடல்கள் பொதுவே அக்கடல் பரப்பை வந்தடைவதற்குள் உருகுலைந்துவிடுவதால் அப்பரப்பில் எந்தப் பிணங்களும் அதிககாலம் மிதப்பதில்லை. மிதக்கும் பிணங்களைக் கைப்பற்றி அடக்கம் செய்வது சரிவர நடந்து வந்ததால் அக்கடல் பிரதேசத்தில் கைவிடப்பட்ட பிணங்களை வளைகுடாவாசிகள் வீசுவதற்கு எந்த முணுமுணுப்பும் எழுந்திருக்கவில்லை.

புனித ராயப்பர் அக்கடலில் மிதக்கும் உடைந்த பொருட்களைக் கரையேற்றும் ஆட்களோடு எந்த ஒப்பந்தமும் செய்திருக்காததால் அவர்களுக்குள் லேசான வாக்குவாதங்கள் நிகழ்வதுண்டு. அவர்கள் கப்பல்களிலிருந்து கசிந்த கச்சாஎண்ணைய் கழிவுகளை மாற்றுவதிலேயே பெருங்கவனங்கொண்டிருந்தார்கள். மனித உடல்களை அவர்கள் மிதக்கும் பொருளாகக் கருதியிருக்காததால் ஆங்காங்கே வீசப்பட்ட உடல்கள் புனித ராயப்பரை நம்பியே மிதக்கும் வழக்கத்தை வைத்திருந்தன.

கச்சாஎண்ணைய் கழிவுகளால் எரிச்சலுற்ற கூட்டமான மீன்கள் தற்கொலை செய்வது அடிக்கடி நிகழ்ந்து வந்த அப்பிரதேசத்தில் அவைகளைக் கரையேற்ற யாரும் ஒப்பந்தங்கள் செய்திருக்கவில்லை. சுயபாதுகாப்பிற்காகத் தற்கொலை செய்யும் மீன்களைப்போலத் தற்கொலை செய்யும் மனிதர்கள் அக்கடல் பிராந்தியத்தினுள் வராதது புனித ராயப்பருக்கு ஆறுதலை தந்திருந்தது.

கொடுப்பினைபோல வழங்கப்பட்டிருந்த படகில் நைஷாபோல் அதிரும்காற்றைப் புறங்கையால் விலக்கியபடி பெருங்கடலில் நுழைந்திருந்தான். கோனுபுயலின் அதிர்ஷ்டம்கெட்ட முகத்திற்குப் பயந்து சரக்குக் கப்பல்கள் வளைகுடா பிரதேசத்திலிருந்து வெளியேறியிருந்தன. சரக்குகப்பல்களின் நீர்வழிதடத்திற்குள் நுழையும் படகுகள் கவிழ்ந்துவிடுவது சகஜமாயிருந்த வளைகுடா பிரதேசத்தில் அச்சிறிய படகு எச்சேதமும் இல்லாமல் மிதந்துவந்திருந்தது. சரக்குக் கப்பல்கள் கிளப்புகிற அலைகளில் சிறிய படகுகள் தாக்குபிடிக்க முடியாதென்றாலும் அவனது படகு தளும்பி தளும்பி நகர்ந்து வந்திருந்தது. சரக்குகப்பல்கள் புயல் திசையிலிருந்து வெளியேறியிருந்ததால் எந்தத் தொந்தரவுகளும் இல்லாமல் அவன் பயணப்பட்டிருந்தான்.

ஈரானின் கிஷ் தீவின் அருகே பயணிக்கும்படி நண்பன் வற்புறுத்தியிருந்ததால் நைஷாபோல் ஜிபிஎஸ் நேவிகேட்டரில் பாகையைக் கவனமாகக் கையாண்டிருந்தான். சரக்குகப்பல்களின் தொந்தரவுகளிலிருந்து தப்பிக்கவே உயிர் பயமற்றவர்கள் அவ்வழியைப் பயன்படுத்தும் வழக்கமிருந்தது. பாகிஸ்தானின் கடற்பிரதேசங்கள் வழி இந்தியாவை அடைவது அவ்வளவு எளிதல்லவென்றாலும் சவுதியிலிருந்து கடலில் குதிப்பவர்கள் அவ்வழியைப் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

நட்சத்திர ஒளிக்கு அவசியமற்ற அப்பிராந்தியத்தில் நீரோட்டத்தில் இடம்பெயர்ந்துகொண்டிருந்த மீன்களின் செதில்களிலிருந்து கிளர்ந்த ஒளியே போதுமானதாயிருந்தது. சுருட்டி மீன்களைப்போன்ற தோற்றம் கொண்டிருந்த அவைகள் மருத்துவகுணங்கொண்ட கணவாய்மீன்வகையைச் சார்ந்தவை.
பரிபூர்ண சுதந்திரம் கொண்டிருந்த அவைகளும் கோனுபுயலுக்குப் பயந்து இடம்பெயர்ந்து கொண்டிருந்தன. புயல்கொண்டு வரப்போகிற அதிமழைக்குப் பயந்து அல்ஹலானியத் தீவிலிருந்து ஆட்கள் வெளியேறியிருந்தார்கள். மசீரா தீவில் மிச்சமிருந்தவர்கள் காற்றுத் தங்களைத் தூக்கிப்போகாமல் இருக்க மரங்களோடு தங்களைக் கயிறுகளால் பிணைத்திருந்தார்கள்.

அப்பிரதேசத்தைக் கடந்த நீரோட்டங்கள் எல்லாக் கடல்பரப்புகளையும் கண்டங்களையும் சுற்றி வந்ததைப் புனித ராயப்பரும் ஆமைகளுமே பயன்படுத்துவது வழக்கத்தில் இருந்தது. பல நீரோட்டங்கள் மோதிக்கொண்ட அவ்விடத்தில் கொடூரமற்ற மீன்களும் வாழிடத்தை வைத்திருந்தன. முடிவற்றதும் தொடக்கமற்றதுமான நீரோட்டத்தில் ஆமைகளும் பயணதடங்களை வைத்திருந்ததால் கனத்த ஹிருதயங்கொண்ட வேட்டையர்கள் புனித ராயப்பருக்குத் தெரியாமல் அப்பிரதேசத்தினுள் அடிக்கடி வந்துபோகும் வழக்கமிருந்தது.

சொற்ப வழிகாட்டி தன்மைகொண்ட அவனது ஜிபிஎஸ் நேவிகேட்டர் எந்நேரத்திலும் தன் இரக்கத்தை இழந்துவிடும் நிலையை அடைந்திருந்தது. ஒருபகலும் ஒரு இரவும் உயிரை தக்கவைத்திருந்த அதன் குணத்தைப் பாராட்ட தன் சுயநினைவை தக்கவைத்திருந்தான். கடலும் அடிவானமும் மணல்திட்டுக்களோடு முடிவடைவதான அவனது நம்பிக்கைகளை நீரோட்டம் குலைத்திருந்தது. எந்த மணல் திட்டுக்களுமே அக்கடலில் இருந்திருக்கவில்லை. தூரத்தில் தெரியும் மணல்திட்டுகளெல்லாம் கானல் என்பதை நம்பப் போதுமான மனப்பக்குவத்தையும் உடற்பலத்தையும் நைஷாபோல் இழந்திருந்தான்.
புனித ராயப்பர் சாதாரணமாய்ப் பயணிக்கும் திசைக்கும் அவனுக்கும் பல நாட்டிக்கல் மைல் தொலைவிருந்தது. அத்தொலைவை எரிபொருளற்ற அப்படகால் கடக்க முடியாததை நைஷாபோல் அறிந்தேயிருந்தான். கைகளால் துளாவியும் அடைந்துவிட முடியாத நீரோட்டத்தில் அவன் சிக்கிகொண்டதை கடவுள் மட்டுமே அறிந்திருந்தார்.

நீல நிறமென்பது கடலையும் காற்றையும் போல ஆறாவது பூதமென்று வழியனுப்பும் போது நண்பன் சொன்னதை நைஷாபோல் நம்பியிருக்கவில்லை. இருளிலும் நீலநிறம் அலையடித்துகொண்டிருந்தது. அவனைசுற்றியிருந்த நீலவர்ணத்தையும் தண்ணீரையும் பார்த்தபடியிருந்தான்.

ஒட்டகப்பண்ணைப்போல நிர்வகிக்கப்பட்டிருந்த கம்பனியில் இணைந்துகொள்ள இந்தியாவிலிருந்து நைஷாபோல் கிளம்பி வந்தபோது அதிசயம் நிரம்பியதாய் நம்பப்பட்டிருந்த அரேபிய பிரதேசம் மணற்புயலில் சிக்கியிருந்தது.

பணிவும் அதிஅக்கறைகளும் கற்றிருந்த அவனை ஒட்டகமாய் மாறப்போதுமான அவகாசத்தைக் கம்பனிக்குள் உலவிக்கொண்டிருந்த சகஒட்டகங்கள் வழங்கியிருக்காததால் நைஷாபோல் ஒட்டகமாக மாறும் படலத்தைத் தவறவிட்டிருந்தான்.

ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எண்பதில் பிறந்த நைஷாபோலின் மேல் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பத்தி ஏழிலிருந்து தீர்க்கப்பட்டிராத கம்பனி வழக்குகள் சுமத்தப்பட்டிருந்தன. ஒரு எலக்ட்ரிக்கல் இன்ஜினியராகச் சவுதி அரேபியாவிற்குள் வந்திறங்கியபோது இருந்த மிடுக்கை ஒருசில நாட்களிலேயே தொலைத்திருந்தான். இரக்கமற்ற வார்த்தைகளும் விற்றுதின்னே சுவாசிக்கும் மிருகங்களும் கம்பனியில் உலாவந்தன. அவ்வுலகத்தின் பொருத்தமற்ற நபராகத் தோற்றம்கொண்டிருந்த நைஷாபோல் தாக்குபிடிப்பதற்காகப் பல குழறுபடிகளையும் பொற்காசான வார்த்தைகளையும் செலவழித்திருந்தான். நைஷாபோலின் ஒவ்வொரு அசைவுகளுக்கும் கம்பனி அவனுக்கான சவக்குழியின் ஆழத்தை அதிகமாக்கிகொண்டிருந்தது.

ராக்காவில் வாடகை கட்டடத்தில் கடைப்பரப்பியிருந்த அவனது கம்பனி ஒட்டகம் மாத்திரம் வளர்த்துவந்த சவுதிகளின் கட்டுப்பாட்டில் இயங்கிக்கொண்டிருந்தது. பாஸ்போர்டை பிடிங்கிக்கொண்ட கம்பனி தப்பிக்கும் வாய்ப்புள்ள வழிகளையெல்லாம் தன் அகலகரங்களால் அடைத்திருந்தது. பச்சைக்குழந்தையைபோல அல் கோபாரில் இருந்த வெட்கங்கெட்ட நண்பர்களை நோக்கி ஓடுவதைதவிர நைஷாபோலுக்கு வேறுவழி தென்பட்டிருக்கவில்லை.

இந்தியாவிற்குப் போவதற்கான சாத்தியமுள்ள வேறுவழிகளைத் தெரிவிக்க எந்த மனிதனும் அவனிடம் வந்திருக்கவில்லை. நிலம்வழி இந்தியாவை அடையும் திட்டத்தைக் கற்பனைசெய்வதற்கு முன்னமே கைவிட்டிருந்தான். நிலம்வழி இந்தியாவை அடையும் சவால்களைப் பயமுறுத்தும் குரங்குகளாய் உலவவிட ஆட்கள் இருந்தார்கள். மரணப்பள்ளத்தாக்குகள்போல் வர்ணிக்கப்பட்டிருந்த வழியில் ஈரானின் நிலப்பரப்பும் ஆப்கானிஸ்தானின் மிருகங்களும் மனிதர்களைப் பயமுறுத்தப்போதுமான குணங்கொண்டிருந்தன. எல்லோரையும் நம்பும் இயல்பை கொண்டிருந்த நைஷாபோல் தன் குணங்களை உதறிவிடும் பருவத்தை அடைந்திருக்கவில்லை.

இந்தியாவிற்குப் போவதற்கான எல்லாப் பாதைகளையும் பிடிவாதம் மட்டுமே கொண்டிருந்த அவனது கம்பனி கண்காணித்துக்கொண்டிருந்தது. காவல் நாய்களாய் ஜெனித்திருந்த சவுதிகள் எல்லாக் கதவுகளின் அருகிலும் தெருவோர விளக்குகம்பங்களிலும் இருந்தார்கள். பிச்சையெடுக்கப் பயிற்றுவிக்கப்பட்டிருந்த பெண்கள் எல்லாச் சிக்னலிலும் தகவல்களைத் திரட்டிக்கொண்டிருப்பதாக நம்பிக்கொண்டிருந்தவர்கள் வளைகுடாவில் உலவிக்கொண்டிருந்தார்கள்.

பரிச்சயமற்ற பாலையைப்போலக் கடலும் இருந்தது. பாலையோடும் கடலோடும் உறவற்ற ஒருவனின் கதி எந்த விசித்திரங்களுக்குள்ளும் போய்ச் சிக்கிவிடாமல் தடுக்கப் பிரபல ஏஜென்றுகள் பாலை முழுவதும் சுற்றிவந்தார்கள். மனிதர்களையும் ஒட்டகங்களையும் கடல்வழியே வெளி உலகுக்கு அனுப்பும் கெட்டிக்காரதனம் கொண்டிருந்த ஏஜென்றுகளிடம் நைஷாபோலும் அடைக்கலமாகியிருந்தான். சொற்ப விலைக்கு நண்பனாகியிருந்த ஏஜென்றிடம் தன்னைக் கையளிக்க நைஷாபோல் எந்தத் தயக்கமும் கொண்டிருக்கவில்லை.

தேனீக்களாய் மாறிவிட்டிருந்த நீர்துளிகள் காற்றில் வந்தன. அவைகள் எந்தக் கொடூரத்தையும் கொண்டிருக்கவில்லையென்றாலும் நீர்துளிகள் தொடர்ந்து அவனைச் செதுக்கிகொண்டிருந்தன. கடலின் வர்ணத்தைக் குலைக்கும் வலு காற்றிற்கு இல்லாததால் அது தொடர்ந்து நைஷாபோலின் முகத்தில் வர்ணங்களை வீசியடித்தது.

கடற்திரவியங்களைத் தேடும் குழுக்களே வரத்தயங்கும் தண்ணீர் பாலையினுள் நைஷாபோல் ஒரு உல்லாசப்பயணியைப்போலக் கடல்நோயிலிருந்து தப்பிக்கும் மாத்திரைகளுடன் மிதந்துகொண்டிருந்த ஆச்சரியத்தை மீன்கள் எட்டிப்பார்க்க விரும்பாதது அவனைப் பெருஞ்சாபத்தினுள் தள்ளிவிடும் வலிமைகொண்டிருந்தது.

அவன் வீசியிருந்த தூண்டிலை சுற்றி மிதந்த மீன்களின் பளபளப்பு வெறுப்பை மட்டுமே மிச்சம் வைத்திருந்த காதலியின் சருமத்தை நினைவூட்டியிருக்கவில்லை. அருவெறுப்பான பரப்பில் அவன் மிதந்துகொண்டிருப்பதிலிருந்து விடுவிக்கும் முயற்சியை அக்காட்சி கொண்டிருக்கவில்லை.

நிலைகொள்ளாத அலைகளும் நினைவுகளும் கடல்நோயின் உச்சத்தில் அவனைத் தள்ளியிருந்தன. தான் ஒரு வாந்தியெடுக்கும் இயந்திரமாக மாறிவிட்டிருந்த நிலையில் புனித ராயப்பரை சந்திக்கும் கூச்சம் அவனிடம் அதிகமாகிகொண்டிருந்தது.

நீரோட்டங்களில் மாத்திரமே பயணிக்கும் புனித ராயப்பர் கண்டங்களைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலங்களை நைஷாபோல் அறிந்துகொள்ளும் விருப்பத்துடன் செவிமடுத்திருக்கவில்லை. அனேக படிப்பினைகளைத் தென்னாட்டைச் சேர்ந்த நண்பன் தூவியிருந்தாலும் ஜீரணிக்கத்தக்க அவைகளின் சுவாபத்தை வெறுக்கும் பருவத்தை நைஷாபோல் அடைந்திருந்தான். மனங்களுக்கு வெளியே இருந்த கடவுளோடு அடிக்கடி பேசும் சந்தர்ப்பத்தைக் கடல்பரப்பு தந்திருந்தபோதும் அவன் எல்லாச் சந்தர்ப்பங்களையும் வாந்தியெடுக்கவும் மீன்களைக் கவனிக்கவும் செலவழித்திருந்தான். நேரமற்ற கடவுள் நைஷாபோலுக்காகத் தன் நேரங்களை ஒதுக்கி நீலவர்ணமாக மாறியிருந்ததாக நம்பிக்கொள்வதைத் தவிர அவனுக்கு வேறுவழி தென்பட்டிருக்கவில்லை.

நீலவர்ணம் அவனது சுவாசத்தினுள்ளும் நுழைந்து புதிய அவஸ்த்தைகளை உருவாக்கியிருந்தது. கடலில் இருந்தும் நீலவர்ணத்திலிருந்தும் தனிமையிலிருந்தும் தப்பித்துக்கொள்ளத் தற்கொலையைத் தவிர வேறுமார்க்கங்கள் மிதக்கும் அப்பிராந்தியத்தில் இருந்திருக்கவில்லை.

சவுதிக்குள் வந்திறங்கிய சொற்ப காலத்தில் நைஷாபோலுக்குக் கிடைத்திருந்த நண்பர்களும் பொருத்தமானவர்கள் இல்லையென்பதை நிரூபிக்க ஓடிஒளிந்திருந்தார்கள். கேடுகெட்ட தூதரகத்தை அடையும்முன்னம் அவன்மேல் சுமத்தப்பட்டிருந்த வழக்குகளுக்காகப் போலீஸ் தேடிவந்திருந்தது.

மரணம்வரை ஜீவிக்கப்போதுமான நைன்டிஒன் சிறையை விவரித்த நண்பர்களின் உடம்பு சிலிர்த்துகொள்வதை நைஷாபோல் கவனித்திருந்தான். மளமளவென்று தகவல்களை விரிக்கும் வளைகுடாவின் ஜாம்பவான்கள் கம்பனியினுள் இருந்ததால் குறுகிய காலத்தில் சவுதி அரேபியாவை அரைகுறையாக அறிந்துகொண்டிருந்தான். துன்புறுத்தலற்ற வாழிடம்போல இருந்த நைன்டிஒன் சிறை தமாமின் சுற்றுலாதலங்களில் ஒன்றாக மாறிவிட்டிருந்தாலும் அரைக் குப்பூசும் கப்சாசோறும் கைதிகளுக்கு வழங்குவதை அவர்கள் நிறுத்தியிருக்கவில்லை.

நைஷாபோலின் உயிர்நீட்சியைக் கைப்பற்ற கம்பனி பகீரத முயற்சிகளைத் துவக்கியிருந்தது. உதவும் மனிதர்களற்ற அவ்வெளியில் அனேக மனிதர்கள் முகங்களைத் திருப்பியபடி அவனைக் கடந்துபோனார்கள். புணர்ச்சிக்கு ஒட்டகமும் குடிப்பதற்குப் பெப்சியும் தாராளமாய்க் கிடைத்து வந்த பாலையில் எந்தப் பொருத்தனையுமற்ற மனிதர்களே அப்பிரதேசமெங்கும் உலவிக்கொண்டிருப்பதாக முணுமுணுப்புகள் இருந்தன. ஏற்றுமதி முட்டைகளாய் உருமாறியிருந்த மனிதர்கள் வந்திறங்கிய அப்பிரதேசம் வாழ்வதற்கான எல்லாச் சௌகரியங்களையும் கொண்டிருந்ததால் அவனிடம் தப்பிக்கும் எந்தத் தகவலையும் யாரும் கையளித்திருக்கவில்லை.

ஒரு முழு இரவை கடந்திருந்த அவனைப் பகல்பொழுதை ரம்மியமாக்க வீசியிருந்த வெயிலோடு கதகதப்பும் கௌவியிருந்தன. கச்சத்தில் நனைந்து துருப்பிடித்திருந்த கொடிமரமாய் அவன் படகில் சாய்ந்திருந்தான். நெடுநாளாய்க் கொண்டு நடந்த கச்சித உருவத்தைக் கடல் உருகுலைத்துவிட்டிருந்ததை அவன் அறிந்திருக்கவில்லை.
காதலியைப்போல மாறிவிட்டிருந்த ஜிபிஎஸ் நேவிக்கேட்டர் தன்னைப்பழிவாங்கப்போகும் தருணத்தை அவன் எதிர்பார்த்துகொண்டிருந்தான். மயங்கிவிடாமல் இருக்கக் கடலோடு புதிய ஒப்பந்தங்கள் செய்திருக்காத அவனுக்கு விழித்திருந்து செய்யவும் ஒன்றுமிருந்திருக்கவில்லை.

நகரும் மணல்திட்டுக்கள் அந்நீரோட்டத்தில் இருப்பதான நம்பிக்கைகளை விதைத்தவர்கள் நீலவர்ண தண்ணீர் பரப்புக்கு வெளியே இருந்தார்கள். சர்வதேச எல்கைகளுக்கு வெளியே இருந்த நீரோட்டத்தில் மிதந்த படகில் நைஷாபோல் ஒரு பரதேசியின் முழுகுணங்களையும் அடைந்திருந்தான். தோற்றத்திற்கும் குணங்களுக்கும் சம்மந்தமற்ற மனிதர்களோடு மட்டுமே பரிச்சயம் கொண்டிருந்த அவனைக் கடல் தன் பரலோகராஜ்யத்தின் கடைசிப் படியில் கொண்டு சேர்த்திருந்தது.

கர்ப்பத்தைக் கலைத்திருந்த நைஷாபோலின் காதலி சீந்தியெறிந்த அழுகை அவனது ஸ்பரிசத்தின் அவசியம் அவளுக்குத் தேவைப்பட்டிருக்காததை அறிவித்திருந்தது. அவளைப்பிரிந்திருக்கவே சவுதிக்கு வந்ததாக அவளிடமே நாக்குக் குழறியிருந்தான். அவனது உறவினர்களுக்கு அவள் கர்ப்பமாய் இருந்ததை யாரும் அறிவித்திருக்கவில்லை. காதலை தொலைத்திருந்த அவனைசுற்றி எல்லா வகை மீன்களும் மனநோய்களும் வலம் வந்தன. காதலைப்போல நீலவர்ணமும் எல்லாவற்றிலும் கலந்திருந்தது. காத்திருப்பின் வர்ணத்தை அவன் விசித்திரமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். ஆறாவதுபூதமாய் மாறியிருந்த நீலவர்ணத்தின் குணம் வியாபித்திருந்த கடலோடு அவன் பேச முயன்றாலும் வாந்தியால் சுருண்டிருந்த உடலில் குரல் ஜெனித்திருக்கவில்லை. கடலோடு பேசுவதற்குக் குரலுக்கான அவசியமில்லையென்றாலும் தன் குரலில் பேச விரும்பிய அவனுக்குக் குரல்யெழும்பியிருக்கவில்லை.

அழகான பெண்களைக் காதலித்துக்கொண்டிருந்த உலகத்தில் ஜெனித்திருந்த அவன் அழகற்ற விசித்திர குணங்கொண்ட கடலோடு மன்றாடிக்கொண்டிருக்க ஏதுவற்ற உடல் நிலையால் புதிய வெறுப்பை உற்பத்தி செய்யத் துவங்கியிருந்தான்.

கடல்நீரோட்டத்தில் நகர்ந்துவரும் மணல்திட்டுக்களைப்போலவே பெண்களும் அவனைக்கடந்து போயிருந்தார்கள். மிதக்கும் குணங்கொண்டிருந்த மணல்திட்டுக்கள் வலிமையான மனிதனையும் கவிழ்ந்த படகுகளையும் தாங்கும் திறன்கொண்டிருந்தன. மணற்திட்டுக்களைத் திருடிவரும் திறன்கொண்டிருந்த நீரோட்டத்திலேயே அவனது படகும் இழுபட்டிருந்தது. அவன் பார்க்க விரும்பியிருந்த மணல்திட்டுகளைப்பற்றி நண்பனிடம் சேகரித்த தகவல்கள் போதுமானவையல்லவென்றாலும் அவனுக்குள்ளிருந்த மணல் திட்டுக்கள் மிதந்து வரப்போகிற மணல்திட்டுக்களை எதிர்நோக்கியிருந்தன.
காதலியின் ஹிருதயம்போல நம்பப்பட்டிருந்த மணல்திட்டுக்கள் அந்நீரோட்டத்தில் மிதந்துவருவது அபூர்வமாக நிகழ்வதுண்டு.

மணற்திட்டுகள் நகர்ந்து வருவதைக் காணும் பாக்கியம் அவனுக்குக் கிடைக்குமென நண்பன் சொன்னதின் அர்த்தத்தைப் பரிசீலிக்கத்தொடங்கியிருந்தான். காதலியின் ஹிருதயம்போல உயிரற்றுப்போன மணல்திட்டை கண்குளிர பார்க்கும் பெருவிருப்பம் அவனைச் சுற்றியலைந்தது.

கடல்பரப்பிலும் மீன்கள் கொத்தியிராத உடல்களிலும் நீலவர்ணங்களைப் புனித ராயப்பர் தூவிக்கொண்டிருந்ததாக ரகசியமாக உலவிக்கொண்டிருந்த புரளியை நண்பன் தெரிவிக்க மறந்திருந்தான்.

மூழ்கும் கப்பலில் உள்ள ஆட்களைக் கரையேற்ற அவருக்குப் பிரத்தேக அனுமதியிருந்தாலும் மரணத்திற்குப் பின்னேதான் உடல்கள் புனித ராயப்பரை தரிசிக்கும் பாக்கியத்தை அடைந்திருந்தன. வானத்து நட்சத்திரங்களோடு சதா பொருதிக்கொண்டிருக்கும் அவரைக் கண்காணிக்கச் சவுதி புதிய கடலோடிகளை அனுப்பியிருந்தது. கண்காணிக்க அனுப்பபட்டிருந்த படகுகளின் ரடார்களில் ஒரு புள்ளியாய்கூடப் புனித ராயப்பர் தென்பட்டிருக்கவில்லை.

நீலவர்ணம் மட்டுமே பெருந்துணையாய் படகை பின்தொடர்வதை அவன் அனிச்சையாககூடத் திரும்பி பார்த்திருக்கவில்லை. கடலெங்கும் பிரம்மைபோலப் பரவியிருந்த நீலவர்ணத்திற்கும் அவனுக்கும் எந்தத் தொடர்புமில்லையென்றே அவனும் தொடர்ந்து நம்பிக்கொண்டிருந்தான்.

பூமிப்பந்தை சுழன்றுவரும் விசித்திர நீரோட்டத்தில் இழுபட்டிருந்த படகு புனித ராயப்பரின் தரிசனத்திற்காக மிதந்துகொண்டிருந்த தகவல் கடவுளை அடைவதற்காக அவன் ஓய்வில்லாமல் வாந்தியெடுத்துகொண்டிருந்தான். கடல்நீரையே கடலினுள் மறுபடியும் மறுபடியும் வாந்தியெடுப்பதான பிரமை விலகாததால் பெருஞ்சோர்வை அடைந்திருந்த அவனுக்கு நீண்ட மயக்கம் தேவைப்பட்டது. ரத்தவாந்தியெடுக்கும் அளவிற்கு அவனது நிலைமை மோசமடைந்திருக்கவில்லை.

கடலோடு ஒவ்வாமைகொண்டிருந்த அவனது ஹிருதயபலஹீனத்தைப் பரிசோதிக்கப் புனித ராயப்பர் வந்துவிடுவாரென்ற நம்பிக்கை அவனிடம் மிச்சமிருந்ததால் பறிபோக இருந்த சுரணையைக் கெட்டியாகப் பிடித்திருந்தான். நீண்ட மயக்கத்திற்குத் தயாரான உடல் இயந்திரமாய் மாறி கடலைநோக்கி வாந்தியெடுத்துக்கொண்டிருந்ததை மீன்கள் கவனித்து விலகிப்போயின. அதிக நாகரீகம் கொண்டிருந்த திருக்கைமீன்களே அவ்வேட்டை பிரதேசத்தில் அவன் வாந்தியெடுத்துக்கொண்டிருந்ததை விரும்பியிருக்கவில்லை. சவக்களைமிக்கக் கடல் ஹிமோகுளோபின் அதிகமுள்ள ரத்தமனிதர்களோடு மட்டுமே உறவுகளைச் சதா புதுப்பித்துகொண்டிருந்ததை யாரும் கசியவிட்டிருக்காததால் அவன் வாந்தியோடு மன்றாடிக்கொண்டிருந்தான்.

உண்ணப்பட்டிராத உணவுவகைகளைக் கண்திறந்து பார்க்கும் விருப்பங்களைத் தேனீக்களாய் மாறியிருந்த நீர் துளிகள் அவனிடமிருந்து திருடிவிட்டிருந்தன. எந்த அதிசயங்களையும் நிகழ்த்தியிராத படகோடு ஓங்கரிப்பின் சகல குணங்களும் வதைப்பதை தாங்கிகொண்டிருந்த உடலோடு காத்திருக்க விரும்பினானென்றாலும் மணிக்கு நூற்று எழுபது கிலோமீட்டர் வேகங்கொண்டிருந்த கோனு புயல் அக்கடல் பிராந்தியத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது.

நீரோட்டத்திலிருந்து நகர்ந்து தப்பித்துக்கொள்ளப் பயனற்றுப் போயிருந்த படகை கெட்டியாகப் பிடித்திருந்த நங்கூரத்தை வெட்டிவிடகூடத் திராணியற்றுப்போயிருந்த தன் உடல் நிலையை நினைத்து வெட்கப்பட அவனுக்குச் சந்தர்ப்பம் வாய்த்திருக்கவில்லை.

கைவிடப்பட்ட சவப்பெட்டியின் கதியை அடைந்துவிட்டிருந்த படகு நீரோட்டத்தில் பயணித்தபடியிருந்தது. சவுதி நகர வீரர்கள் நிரம்பிய கப்பலொன்று உதிர்த்துவிட்டுபோன இந்திய வேலையாட்கள் மூழ்கி மரித்தஇடத்தைப் படகு அடைந்தபோது நைஷாபோல் அரைமயக்கத்தைக் கடந்திருந்தான். கண்திறந்து பாகைமானியில் பரிசோதிக்கும் முன்னே அவனது படகு அப்பிரதேசத்தைச் சுலபமாகக் கடந்திருந்தது. அவனைப் பயமுறுத்தும் குணங்கொண்டிருந்த மூழ்கி மரித்தவர்களின் சவக்களையைத் தக்கவைத்திருந்த அப்பிரதேசத்தில் ஜீவித்த மீன்கள் வாழிடத்தை நிரந்தரமாக மாற்றிவிட்டிருந்தன.

நீலவர்ணத்தைப் புனித ராயப்பர் தன்னுடைய அடையாளமாக எல்லா இடங்களிலும் விட்டுப்போயிருப்பதாகக் கடலோடிகளின் நம்பிக்கைகளை நண்பன் நைஷாபோலுக்குக் கைமாற்றியிருந்தான். வெளிறிய நீலவர்ணத்தோடும் நம்பிக்கைகளோடும் இடைவிடாமல் பொருதி கொண்டிருந்த அவனுக்குப் புயலைப்பற்றிய எந்தத் தகவலையும் சவுதியிலிருந்து கிளம்பும்பொழுது நண்பன் கைமாற்றியிருக்கவில்லை.

சவுதி அரேபியாவிலிருந்தும் ஒட்டகவாசிகளிடமிருந்தும் வெளியேறியிருந்தாலும் நீலவர்ணத்திலிருந்தும் நீரோட்டத்திலிருந்தும் அவனால் வெளியேற இயலவில்லை. அதற்கான எந்த முயற்சியையும் நைஷாபோல் செய்திருக்காததால் படகு ஒவ்வொரு கணத்திலும் அதற்கான வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தது. கோனுபுயல் வடமேற்காக நகர்ந்து ஓமன் நாட்டின் கிழக்கிலுள்ள சூர் கடற்கரையைநோக்கி உக்கிரமாய் வந்துகொண்டிருந்த தகவல் அவனுக்குத் தேவைப்பட்டிருக்கவில்லை. எந்தப் பிரதேசமும் சொந்தம் கொண்டிராத நீலவர்ணத்திலும் புயலின் பாதையிலும் நைஷாபோல் மிதந்துகொண்டிருந்தான். 

Read more »

4/1/13

தீவிர இதழின் தயவில் பாலியல்தொழிலாளியாய் சித்தரிக்கப்பட்ட இரு பெண்கள்



தீவிர இதழின் நாகர்கோயில் அலுவலகத்தில் டி.டி.பி ஆப்ரேட்டர் பணியில் புதிதாய் இணைந்த பெண்கள் தங்கள் நெற்றியில் ஒட்டப்படப்போகும் வாழ்நாள் லேபிளைக்குறித்து அறிந்திருக்கவில்லை. உற்சாகம் நிரம்பிய அவ்விரு பெண்களும் பொருளாதார நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மீனாட்சிபுரம் பகுதியில் இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்பதை பகுதிநேரமாக செய்துவந்தாலும் டிடிபி ஆப்ரேட்டர் பணியை திறமையாகவே செய்துவந்தார்கள். 

பத்திரிகை அலுவலகத்துக்கு வந்துபோகும் படைப்பாளிகளிடையேயும் இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்றது தலையெழுத்தை மாற்றிவிடுமென்று அவ்விரு பெண்களும் எதிர்பார்த்திருக்கவில்லை. 

தீவிர இதழின் முதலாளியம்மா ஒரு பிரபல இன்சூரன்ஸ் ஏஜென்ட் என்பது குமரிமாவட்ட மக்களும் புத்தகம் பதிப்பித்த படைப்பாளிகளும் அறிந்திருந்த செய்தியை அவ்விருபெண்களும் கவனத்தில் எடுத்திருக்காததால் தங்கள் வாழ்நாளின் எந்த கணத்திலும் அழிக்கமுடியாத பழியை சுமக்கப்போவதை எதிர்பார்த்திருக்கவில்லை.

 பொங்கியெழுந்த தீவிர இதழின் முதலாளியம்மா அவ்விரு பெண்களையும் பாலியல்தொழிலாளிகளாய் சித்தரித்து
காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். 

பாலியல்தொழிலாளிகளாய் குற்றம்சாட்டப்பட்ட இருபெண்களையும் பரிதாபமாய் எதிர்கொண்ட பெண் சப் இன்ஸ்பெக்டரின் இரக்கத்தின் செவிகளை கண்ணடிப்பவர் சரிகட்டியதால் இரக்கம் குப்பையில் வீசப்பட்டது. 

இவ்விரு பெண்களின் நலிவடைந்த பெற்றோர்களைநெய்தல் கிருஷ்ணன் தன் சாக்கு குடோனில் வைத்து சமாதானப்படுத்தினார். 

விஷயமறிந்த பத்திரிகையாளர்கள் மனிதர்களாக இருந்ததால் வேடிக்கைமட்டுமே பார்த்தார்கள். டெல்லியின் கடுங்குளிர் சாலையில் தன்னைக்காத்துக்கொள்ள போராடிக்கொண்டிருந்த பெண்ணை வேடிக்கைப்பார்த்தபடி கடந்துபோனதும் மனிதர்கள் தானே.

Read more »

31/12/12

காதறுந்த ஊசி



நேற்று பெய்தது பாலைவனத்து மழை
என் பால்யம் விரட்டி சேகரிக்கிறது

மழை சிரட்டையில் நிரம்புகிறது

ஏக்கத்தில் ததும்பும் துளிகளாய்

நீ கொண்டுதந்த ஈரத்தில்
வெக்கையின் உதிர்ந்த சிறகுகள்

பூப்பெய்திய பெண்ணின்
தொடக்க பருவத்திலிருக்கிறது பாலை

நான் புரண்ட மணல்வெளிகளில்
ஈரம் தருவித்த பெண்ணின் வாசம்

வந்துபோன தடங்களற்ற பாலைமழையை கொண்டாட
நீ அனுப்பி தந்த
பைரிகள்
உச்சந்தலையை கொத்துகின்றன

தப்பித்தோடும் மணல்வெளியில்
தனிமையின் கதவுகளை
என் மரணத்தின் முன் தட்டுவேன்

அது தன் முகங்களை
பெயர்த்துகொண்டிருக்கையில்

திரும்பத்தரும் முத்தங்களின்
எண்ணிக்கையை நீ தவறவிடுகிறாய்

வஞ்சித்த உறைவிடத்தில் பூத்திருக்கின்றன
பாலைமலர்கள்
சிரட்டையில் நான் சேகரித்த
மழையை பார்க்க

துயரத்தால் வீசியெறிந்த வெட்கத்தை
மறுபடியும் தூவிபோகிறது
மழை

மறப்பதற்காக கொண்டலையும்
தூரதேச ஞாபகங்களை
தன் துளிகளால் கொத்தியெறிகிறது

மணல்சூட்டில் பொள்ளும் பாதங்களை
இதமாக்குகிறது

தண்ணீரால் அபிசேகம் செய்யப்பட்ட
கானான் தேசம்
சூட்டில் விழுந்த முதல் துளிபோல
ஆவியாகிகொண்டிருக்கிறது

என் தனிமையின் கதவுகளை
திறக்கும் பெண்களிடம் காணிக்கையாக்க
என்னிடமிருப்பதெல்லாம்
காதறுந்த ஊசியும்
ஒரு சிரட்டை மழையும்

Read more »

ஜெயமோகன் ஆஸ்ரம குழந்தை தொழிலாளர்


உற்பத்திக்கும் எழுத்திற்கும் இடையில் இலக்கியவாதி தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறான். பாரிய அரசியலில் நுழைந்தவன் எழுத்திற்கு திரும்புவதில்லை. இலக்கிய பரிச்சையத்தை வைத்து வினவு பாணியில் கட்டுரை மட்டுமே எழுத முடியும். ஒரு கதையோ கவிதையோ எழுத குறைந்த பட்சம் மூன்று நாட்கள் சாதாரணமாக தேவைப்படுகிறது. உற்பத்தியாளர்களை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.  லௌகீக வாழ்விற்கான பொருளீட்டுவதில் தொலைந்துவிடும் கால அளவு. இலக்கியவாதிகள் கட்டுரை எழுத துவங்கிவிட்டால் அப்பாதிப்பு படைப்பிலும் தலைகாட்டிவிடும். புறக்கணிப்பின் அவஸ்த்தையில் குழுக்களுக்குள் சிக்கிகொள்வதும் கட்சிக்கு வாழ்த்துபா எழுதுவதும் ஆளுமைகளுக்கு வாரிசாக அறிவிக்க கோரி ரகசிய கடிதங்கள் எழுதுவதும் சொந்த சாதிக்கு திரும்புவதும் பல விஷயங்களை நான் இங்கே முன்வைக்க முடியும். இதில் இலக்கியத்தில் இயங்குபவன் எப்படி ஆபத்தானவனாக மாறுகிறான்? பாலா தெளிவுபடுத்த வேண்டும். இலக்கியவாதி என்று யாரை கருதுகிறீர்கள்? பெரும்பத்திரிகைகளை நோக்கி தரை நீச்சல் அடிக்கும் பெரும் கவிஞர்களையா? வறட்டு இருமல்வாதிகளையா? ஜெயமோகன் ஆஸ்ரம குழந்தை தொழிலாளர்களையா?

Read more »

விஷச்சாராய வழக்கு


காலச்சுவடு ஆசிரியர் குழுவில் இருந்த லஷ்மி மணிவண்ணனுக்கு என்ன பரிசு கிடைத்திருக்குமென்று கற்பனை செய்யமுடியாமல் போனவர்கள் கனவுகளுக்கு வெளியேகூட ஜீவிக்க தகுதியுண்டாவென்று நான் ஊர்வலத்தை ஆரம்பிக்கிறேன்.

விஷச்சாராய வழக்கு பதியப்பட்டு கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்ட லஷ்மி மணிவண்ணன் என்கிற கலைஞனை ஞாபக அடுக்கில் புதைக்காதவர்கள் இலக்கியத்தின் பக்கங்களை புரட்டிப்பார்க்கும் அனுமதியுடன் இன்னுமா அலைகிறார்கள். வரலாற்றுக்கொடுமையென்னவென்றால் விஷச்சாராய வழக்கில் லஷ்மி மணிவண்ணனுக்கு தண்டனை விதிக்கப்பட்டது தான்.

என் ரத்தநாளங்களின் சுருதி மாறியது அத்தருணத்தில் தான். கைவிடப்பட்ட கலைஞர்களின் குமுறல்கள் என் செவிப்பறையில் புதிய துளையை உண்டுசெய்தன. வார்த்தைகளையே உயிலாக எழுதிவைத்துவிட்டுப்போன காநாசுகளும் பசியால் செத்துப்போன புதுமைப்பித்தன்களும் இளமையோடு தற்கொலை செய்துகொண்ட சில்வியாபிளாத்துகளும் கைவிலங்கிட்டு கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்ட லஷ்மி மணிவண்ணனின் கண்களில் வந்துபோன அக்கணத்தில் உயிர்த்தவன் தான் குருசு.சாக்ரடீஸ்.

Read more »

கோணங்கியை நான் பார்த்ததேயில்லை




நாலு அப்பமும் எள்ளுபோல தேங்காபாலும் காலை சாப்பாட்டுக்கு போதுமென்றாலும் பத்துநாள் விடுமுறையில் வந்தவனுக்கு போதாதென்று வீட்டிலுள்ளவர்கள் நினைத்ததற்கு என்னிடம் எந்த மறுமொழியும் இருக்கவில்லை.
படபடவென்று சைக்கிளை வெளியே எடுத்துக்கொண்டு சாடிவிட்டேன். மகள் வாசலில் நின்று கையாட்டுவாளென்று பார்த்தால் டபுள்ஸ் ஏற்றக்கூடாதென்று எச்சரித்துவிட்டாள்.

 வழக்கம்போல தொலைக்காட்சியிலிருந்து வந்ததும் வராததுமாய் கிளம்பிறனும். பத்துநாளுல ஒரு நாளாவது வீட்ல இருக்கப்படாதா? காலை ஒளிபரப்பே இப்படிதான் என்பதால் என் சைக்கிளுக்கு வேகம் கூடியிருக்கவில்லை.

ஞாயிற்றுகிழமையென்பதால் காலை வழிபாட்டுக்கு போய்கொண்டிருந்த மக்கள் எப்ப மக்கா வந்த கேட்டுக்கொண்டிருந்தது எனக்கு கேட்டிருக்கவில்லை.

 எங்கே போவதென்பது மகாகுழப்பமாயிருந்தாலும் கலைவாணன் இஎம்எஸ் வீட்டுக்கு போவதென கொஞ்சம் தெளிவிருந்தது. கிருஷ்ணன்கோவில் வழியாக கிறிஸ்துநகருக்குள் நுழைந்து ஆட்டுசிலுப்பியை வீட்டுக்கு அனுப்பசொல்லிவிட்டு பார்வதிபுரத்துக்கு முங்கிவிட்டேன்.

பிஎஸ்என்எல் தொகுப்பாளரின் வீட்டுக்கு அடுத்ததெருவில் வாரியலோடு நின்றுகொண்டிருந்த கலைவாணன் வெட்கத்தில் லுங்கியை கட்டிக்கொண்டு வந்தான். அங்கேயிருந்த தொலைக்காட்சியில் விடியண்டா என்ற தொடர் ஓடிக்கொண்டிருந்தது.

சுங்கான்கடை பொத்தையில் தடஊறுகாயே போதுமென்றாலும் கொறிப்பான்களை கலைவாணன் சுட்டு வந்தது தனிச்சுவைதான்.

அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகுமுன்னம் எங்கே மக்கா போகலாம். கோணங்கியை நான் பார்த்ததேயில்லையென்றேன். கோவில்பட்டிக்கு சைக்கிளிலேயே போய்விடலாமென்றேன்.

'மக்கா கேட்டியா நீ ஒரு வருஷம் கோவில்பட்டி முழுக்க கடலைமிட்டாய் வித்தாலும் கோணங்கியை பாக்க முடியாது.'

பேயறைந்தது போல் பார்த்துக்கொண்டிருந்தேன். பல நண்பர்கள் நலம் விசாரித்துவிட்டு போனார்கள். மத்தியான சாப்பாடு அம்பேல். பல ரவுண்டு பேச்சுவார்த்தை நகர்ந்தாலும் மனதில் ஒன்றும் இறங்கவில்லை. சைக்கிளை தள்ளிக்கொண்டு வீடுவந்து இணையத்தில் வீழ்வது வரை கலைவாணனின் வார்த்தைகள்தான் ஓடிக்கொண்டிருந்தது.

கோணங்கியையெல்லாம் பார்க்கமுடியாது சுவாசிக்கதான் முடியும். இன்று சபதமே எடுத்துவிட்டேன் கோணங்கியை பார்த்துவிடுவதென்று கடலைமிட்டாய் வித்தாலும் பரவாயில்லை. 14-10-2012

Read more »

அனாதைகள் தமிழ் இலக்கியத்தில்தான் அதிகம்


யூனிக்கோடின் வருகைக்கு பின்னான காலச்சூழலில் இலக்கிய ஆளுமைகள் தாங்கள் வாசித்த புத்தகங்களின் எண்ணிக்கையில் நூறுபுத்தகங்களை சிறந்த புத்தகங்களாக அறிவிப்பது வழக்கத்திலிருந்து வருகிறது. கூகுள் தேடலில் ஒரு வார்த்தையை கொடுத்தால் அவ்வார்த்தையை பயன்படுத்தியுள்ள அத்தனை இணையத்தளங்களையும் நம்முன்னே வரிசைப்படுத்திவிடும். அவ்வார்த்தை சார்ந்த விஷயத்தை நீங்கள் கண்டடைய விரும்பினால் கூகுள் வரிசைப்படுத்தியுள்ள பல்லாயிரம் இணையத்தளங்களை திறந்து வாசிக்க வேண்டியிருக்கும். பெரும்பாலும் பத்துபதினைந்து அணையத்தளங்களை திறந்துவிடும் போது சோர்வடைந்து கடைத்ததை பயன்படுத்திக்கொள்ள பழகிவிடுவது சகஜமாகி வருகிறது. கூகுள் தேடுபொறியினுள் இயங்கும் ரோபாட் எல்லா இணையத்தளங்களுக்குள்ளும் போய் தகவல்களை சேகரிக்கும் வழக்கத்தை வைத்திருக்கிறது. ரோபாட் புகுந்து தகவல்களை திரட்டுவதை தடைசெய்யும் இணையத்தளங்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. இந்த web crawler ரோபாட்டுகள் meta tag க்கு  ஏற்பவும் rich content க்கு ஏற்பவும் இயங்குவதாக தொழில்நுட்ப தகவல்களை நான் கேள்விபட்டிருக்கிறேன். ஒரு வார்த்தைக்கான தேடலுக்கே இவ்வளவு நீளமான செயல்பாடு நடைபெறுகிறது. தமிழ் சூழலில் குவிந்துவரும் புத்தகங்களிலிருந்து இலக்கிய ஆளுமைகள் சிறந்த புத்தகங்களை தேடிதருவதாக புதியவாசகப்பரப்பில் ஒரு நம்பிக்கை துளிர் விட்டிருக்கிறது.

இணையத்தாலும் மாற்று ஊடகங்களாலும் சினிமாவில் நுழைவதற்கு முன்னுள்ள பயிற்சிக்காகவும் உருவான வாசகப்பரப்பு புதிய புத்தககுவிலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கிராமங்கள் வரை பரவியிருந்த முற்போக்கு முகாம்களே வாசகர்களை உருவாக்கிகொண்டிருந்ததும் அங்கே பயின்றவர்கள் சிறுபத்திரிகைகளால் ஈர்க்கப்படுவதும் வழக்கொழிந்துவிட்டது. இன்று முற்போக்கு முகாம்களே வாசகர்கள் இல்லாமல் புதிய படைப்பாளிகள் இல்லாமல் சினிமா கலைஞர்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது.

புதிய வாசகப்பரப்பு பட்டியலிடப்பட்ட சிறந்த புத்தகங்களை அப்படியே கண்ணை மூடி ஏற்றுக்கொள்கிறது. கூகுள் வரிசைப்படுத்தியுள்ள இணையத்தளங்களை அப்படியே நம்புவதுபோல. பட்டியலுக்குள் வருவதற்காக பலரும் எடுத்துவரும் முயற்சிகளை நான் கேள்விப்பட்டதுண்டு. கூகுள் தேடுதலில் மேலே வருவதற்காக meta tag  களை உருவாக்குபவர்களை பல இணையத்தளங்கள் பயன்படுத்துவதுபோல. பெருவெளி தேடுபொறியினுள் வராதவர்கள் விருப்பமற்றவர்கள் இலக்கிய செயல்பாடுகளை இன்னும் நம்பிக்கொண்டிருப்பவர்கள்  இவர்களுக்கு meta tag  கிடையாது.

கவிதை ஒரு வாழ்வியலாக மாறிக்கொண்டிருக்கிறதோ என்று அச்சப்படும் அளவில் கவி ஆளுமைகளின் எண்ணிக்கை இருந்து வருகிறது. தமிழில் சுமார் அறுநூற்றி முப்பத்திமூன்று கவிஞர்களின் பெயர்களை நண்பர்களின் உதவியுடன் பலமாத தேடலில் திரட்டினேன். (பல பெயர்கள் இன்னும் கிடைக்கவில்லை.)வாசிக்க தகுந்த கவிதைகளை எழுதியுள்ள இந்த அறுநூற்றி முப்பத்திமூன்று பேரும் பலவிதமான பார்வைகளையும் நிலப்பரப்புகளையும்  வாழ்நிலைகளையும் கொண்டவர்கள் அதை கவிதையிலும் பார்க்க முடிகிறது. ஆளுக்கு ஒரு தொகுப்பு என்று பார்த்தாலும் அறுநூற்றி முப்பத்திமூன்று புத்தகங்கள் வருகின்றன. இதில் பலர் தொகுப்பு போட்டிருக்கவில்லை. ஒரு உதாரணத்திற்காக அனைவரும் தொகுப்பு போட்டிருந்தாலென்று எடுத்துக்கொள்ளவும். ஒரு கவிதைப்புத்தகத்தை படிக்க  அவ்வார்த்தைகளிலிருந்து விடுபட சுமார் பத்து நாட்கள் தேவைப்படும். மொத்தத்தொகுப்புகளையும் படித்து முடிக்க சுமார் பதினேழு வருடங்கள் தேவைப்படும். இத்தனைகாலம் உழைத்தால் தான் சிறந்த புத்தகங்களை பட்டியலிடமுடியும். இதுபோல சிறுகதை நாவலென்று படித்து பட்டியலிட எவ்வளவு உழைப்பு தேவைப்படும். குருட்டாம் போக்கில் பட்டியலிடும் ஆளுமைகளை என்ன பெயர் சொல்லி அழைக்க

இன்றைய சூழலில் வாசித்தப்புத்தகங்களைப்பற்றி சிறு குறிப்பு வரைந்தாலே சிறந்த இலக்கிய செயல்பாடுதான். தேடுபொறிகளைப்போல ஆளுமைகள் மாறுவது தவிர்க்கப்பட வேண்டுமோ? எந்த எந்த புத்தகங்களை படித்துவிட்டு இந்த பட்டியல்களை தருகிறார்களென்றாவது தெளிவுபடுத்துவது குறைந்தபட்ச நாகரீகம். இல்லையென்றால் வாசகர்களே புத்தகப்பட்டியல்களை பார்த்து சிரிக்க தொடங்கிவிடுவார்களோ

கடைசி கேள்வி. புத்தக சந்தை விரிந்திருக்கிற அளவிற்கு வாசகப்பரப்பு விரிந்திருக்கிறதா? கடைசி கேள்விக்கு விடைதெரியாவிட்டால் ஸ்காரியோத் சொன்னது உண்மையாகிவிடும்.

Read more »

தாலியறுத்தான் சந்தையும் ரீவேலிவ் உள்ள பொண்டாட்டியும்


என் நண்பன் புதுவண்டி வாங்க என்னையும் 
அழைத்துக்கொண்டுபோனான். சனியன் சகடையை
 யாரேனும் கூடகொண்டுநடப்பார்களா? எந்தவண்டி 
கொள்ளாம் மக்காவென்று 
பதிமூன்று முறை கேட்டிருப்பான். நான் ஞானசூன்யமென்பதை 
இருபத்தோறு தடவை  விளக்கினேன். ஹீரோஹோண்டா ஸ்பௌண்டர் 
உடனே கிடைக்காதென்பதால் டிவிஎஸ் 
ஸ்டார்சிட்டி வாங்கினான். சூடம் எலுமிச்சம்பழம் 
மாலை எதையும் கிட்ட நெருங்கவிடவில்லை. 
ஷோரூமிலிருந்த அனைவரும் 
ஒரு கேணயனைப்போல பார்த்தார்கள்.
பெட்டிக்கடையில் நிறுத்தி தம் வாங்கியபோது
 அவனை ஒரு கொலைகுற்றவாளியாக்கிருந்தார் பெட்டிக்கடைக்காரர்.
 அவனை ஒரு வடிகட்டின முட்டாளாக 
மக்கள் ஆக்கிக்கொண்டிருந்தார்கள். வருவோர்போவோர் 
அவனை விசாரித்தே கொன்றார்கள். வாங்கினால் 
ஹீரோஹோண்டா ஸ்பௌண்டர் போல 
ரீவேலிவ் உள்ள வண்டிதான் வாங்கவேண்டுமென்பது
 அவனுக்கும் சற்று புரிந்திருந்தது. 
அரசாங்க உத்தியோகமும் ஹீரோஹோண்டா
 ஸ்பௌண்டர் வண்டியும் ரீவேலிவ் உள்ள
 பொண்டாட்டியும உள்ளவன்தான் புத்திசாலி.

Read more »

தீவிர இதழ் நடத்துவது மாபியா காரியமா


 தீவிர இதழ் நடத்துவது சுலபமான காரியமென பலர் நினைக்கிறார்கள். கூடங்குளத்தை சுற்றி ஏக்கர் கணக்கிலே இடம் வாங்கிப்போடவேண்டும். வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்ட நிலத்தை பார்வையிடப்போகும் போது உதயக்குமார் அவர்களை ஒரு பேட்டி எடுக்க வேண்டும். அட்டைப்படத்தை கவனமாக தயாரிக்க வேண்டும். 


கைவசம் இருக்கிற பதிப்பகத்தில் வெளிநாட்டு எழுத்து பயிற்சியகத்தில் கர்சிவ் ரைட்டிங் பயின்ற ஆசிரியர்களின் புத்தகங்களை பதிப்பிக்கும் போதே எத்தனை பிளாட் வாங்கும் சக்தியிருக்கிறதென கணிக்க தெரியவேண்டும். 


அனுசரித்து கண்ணடித்து கெடுத்துவிடாமல் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வேண்டும். இதில் வீட்டுமனை வாங்கும் தமிழ்நாட்டு எழுத்தாளர்களை போராட்டம் பிசு பிசுத்துவிடுமென நம்ப செய்ய வேண்டும். 


எங்காவது பிரச்சனையென்றால் பிரதிநிதிகளை ரயிலின் முன்புறமாக ஒரு புகைப்படமும் சம்பவ இடத்தில் கிராபிக்ஸ் துணையில்லாமல் கண்ணீர்மல்கும் சில படங்களும் எடுத்துக்கொள்ள கட்டாயபடுத்த வேண்டும். விற்பனை மையங்களின் முன்புற பேனருக்கு அது உதவக்கூடும். 


இரண்டு கவிதைகளை ஒரே கவிதையாக மொழிபெயர்க்கும் திறன்வாய்ந்த மொழிபெயர்ப்பாளர்களை அருகில் வைத்துக்கொள்வது தீவிர தன்மையை இன்னும் அதிகமாக்கும். 


அறுபத்தி ஆறாம் நம்பர் பேருந்தில் அடையாறுக்கு தினமும் பயணிக்கும் நபர்களை உடுதுணியில்லாமல் ஆடவிட வேண்டியது கட்டாயமான செயல். 


தீவிர இதழ் நடத்துவது மாபியா காரியமா அதுவொரு கூட்டு முயற்சி.

Read more »

12/12/12

முச்சந்தியில் தூக்கிலிடுதல்

                                      - குருசு.சாக்ரடீஸ்

தூக்குதண்டனை விதிக்கப்பட்டிருந்த பனிரெண்டு அப்போஸ்தலர்களும் விளக்குகம்பத்தில் தொங்கிகொண்டிருந்த தூக்குகயிற்றின் முன்னால் நிறுத்தப்பட்டபோது எந்த புலம்பலையும் கொண்டிராத அவர்களுக்கு தூக்குகயிறுகளை வேடிக்கைப் பார்க்க நேரம் கிடைத்திருந்தது.
பலநாடுகளை சேர்ந்த பனிரெண்டு அப்போஸ்தலர்களை ஒரே நேரத்தில் தூக்கிலிடப்படுவது இதுதான் முதன்முறையென்பதால் வேடிக்கைப் பார்க்க எந்த மனிதர்களும் வந்திருக்கவில்லை.

நியமன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பனிரெண்டு அப்போஸ்தலர்களையும் கைகளை பின்புறமாக கட்டி விளக்குகம்பத்தில் தொங்கவிட்டிருந்த தூக்குகயிறுகளின் முன்னால் நிறுத்த தரதரவென்று இழுத்துவந்திருந்தார்கள். சடங்குகள் இல்லையென்றாலும் மரணதண்டனையை நிறைவேற்றுவது சுலபமான காரியமல்லவென்பதை அறிந்திருந்த நியமன அதிகாரிகள் குறுக்கும் நெடுக்கும் ஓடியது பயிற்சியின்மையை அப்பட்டமாக்கியது.

இளவயது நியமன அதிகாரிகளே அதிகமிருந்தாலும் கிழடுகட்டை நியமன அதிகாரிகளின் வார்த்தைகளுக்கு மவுசிருந்ததை அறிந்தவர்களே இளவயதில் நீடித்துக்கொண்டிருந்தார்கள்.

தந்திரங்கள் அறியாததால் நியமன அதிகாரிகளிடம் சிக்கியிருந்த பனிரெண்டு அப்போஸ்தலர்களுக்கும் எந்த தொந்தரவையும் நியமன அதிகாரிகள் தந்திருக்கவில்லை.

வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும் சுவையான தேநீருடன் கூடிய காலைஉணவையும் நியமன அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள். சுவையுள்ள சுலைமானி வகையை சேர்ந்த தேநீர் பருவங்கெட்ட வெயிலுக்கான தெம்பை பனிரெண்டு அப்போஸ்தலர்களுக்கும் தந்திருந்தது.

பனிரெண்டு அப்போஸ்தலர்களுமே வெண்மையான குர்தாக்களை அணிந்திருந்தார்கள். மத்தியான வெயிலுக்கு அது பொருத்தமான உடையில்லையென்றாலும் தூக்குகயிறில் தொங்கும்போது பொருத்தமான உடையாக மாறிவிடுமென்று நியமன அதிகாரிகள் அறிவித்திருந்ததால் பனிரெண்டு அப்போஸ்தலர்களும் எந்த தயக்கமுமில்லாமல் அவ்வுடைகளை அணிந்திருந்தார்கள். வெண்உடைகள் மரணத்திற்கு பொருத்தமான நிறமல்லவென்று நியமன அதிகாரிகளிடம் யாரும் தெரியப்படுத்தியிருக்கவில்லை. கொடூரங்களுடன் பொருத்தமுடியாத வெண்மையை மனிதர்கள் விரும்பியதை பந்தயத்திற்கு தயாராய் இருந்த ஒட்டகங்கள் ஆச்சரியத்துடன் பார்த்தன.

பனிரெண்டு அப்போஸ்தலர்கள் தூக்கிலிடப்படுவதை மக்களுக்கு கச்சிதமான ஓலைத்தொப்பி மட்டுமே அணிந்திருந்த நியமன அதிகாரிகள் முன்கூட்டியே அறிவித்திருந்ததால் தீவுப்பிரதேசத்திலுள்ளவர்களுக்கு தீப்பிடித்திருந்த அச்செய்தி போதுமான அளவு எட்டியிருந்தது. வீடு வீடாக நடனமாடி அறிவிக்கவேண்டிய அவசியம் நியமன அதிகாரிகளுக்கு நேர்ந்திருக்கவில்லை.

சனிக்கிழமை திருப்பலி முடிந்து வந்தவர்கள் முச்சந்தி தூக்கு கயிறுகளை அசுவாரஸ்யமாக பார்த்தபடியே ஒட்டகப்பந்தய மைதானத்திற்குள் நுழைந்து விட்டிருந்தார்கள். சுட்ட கோழியும் நீண்ட அரிசிசோறும் உண்பதற்கு அவகாசமிருந்தபோதும் பந்தய மைதானத்தில் ராசியான இடங்களை பிடிப்பதற்காக மக்கள் திரளாக நுழைந்திருந்தார்கள்.

அகலமான சாலையின் குறுக்கே இருந்த சிக்னல் விளக்கில் தூக்குகயிறுகள் பிடிவாதமாய் தொங்கிகொண்டிருந்தன. பயமுறுத்தும் குணங்களை இழந்திருந்த கயிறுகளின் முன்னே நிறுத்தப்பட்டிருந்த பனிரெண்டு அப்போஸ்தலர்களின் முகங்களும் பார்க்க சகிக்காதவையென்றாலும் பார்த்தவர்கள் விறுவிறுவென்று மைதானத்திற்குள் இறங்குவதை துரிதப்படுத்தினார்கள்.

 ஒட்டகப்பந்தய மைதானம் முச்சந்தியிலிருந்து நூறடிக்குள்ளான தூரத்திலேயே இருந்தது. ஒட்டகப்பந்தயத்திற்காக மிஸ்பா தீவிலிருந்த ஜெனம் முழுவதும் எந்த அழைப்பும் இல்லாமலே மைதானத்தை ஆக்ரமித்திருந்தது. பரந்த பிரதேசத்தில் பலநாட்டு ஜெனமும் நிரம்பி சகிக்க இயலாத நெரிசலை உண்டுசெய்திருந்தது.

திருப்பலிக்கு போயிராத சில பரதேசி இந்தியர்கள் ஏற்கெனவே மைதானத்தின் முன்புறமாக குழுமியிருந்தார்கள். போக்கிடமற்றவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த பலரும் கார்களை கழுவும் பேரத்திலும் இளஞ்சூடான குதர்க்கத்திலும் இறங்கியிருந்தார்கள். பெப்சி டின்களை கீழே விழுமுன்னம் பாய்ந்து பிடிக்கும் பெங்காலிகளும் சில நேப்பாளி குண்டுருளிகளும் அவ்விடத்தின் திருவிழாத்தனத்தை உயிர்பித்துகொண்டிருந்தார்கள்.

 மிஸ்பா தீவின் பாலைவெளியில் அதுபோன்ற சமவெளியும் சதுப்புநிலங்களும் வேறு எங்கும் கிடையாதென்பதால் விமானதளத்தின் பின்புறத்திலேயே பந்தய மைதானம் அமைக்கப்பட்டிருந்தது. கடல்நீர் ஊறிக்கொண்டிருக்கும் சதுப்புவெளி நிறைந்த பாலையில் மணல்கூட மண்டியிராத அத்தீவு பிரதேசம் ஓமானிலிருந்து வெகுதொலைவில் இருந்தது.

வருடத்தின் மூன்றுமாதங்கள் கடல்நீரில் மூழ்கிவிடும் காட்சியை சகிக்க விரும்பாத மனிதர்கள் அத்தீவில் வசிப்பதை பெருமையாக அறிவித்திருந்தார்கள். அரபிக்கடலின் அடியாழத்தில் பைப்லைன்களை அமைத்திருந்த கம்பனிகள் வால்வு ஸ்டேஷன்களை அமைக்க பொருத்தமான இடத்தை கடலில் தேடும் தொல்லைகளை அத்தீவு நிரந்தரமாக களைந்திருந்தது.

நீள்வட்ட பரப்புகொண்ட அத்தீவில் கச்சா எண்ணெய் கழிவுகளும் சுவாசம் தேடும் ஆமைகளுமே ஒதுங்குவது வழக்கத்திலிருந்தது. நிரந்தர பெயரற்ற அத்தீவின் மணற்ப்பரப்பை அடைய புரதான கசப்பில் மூன்று படகு ஜெட்டிகள் அரை உயிரிலிருந்தன.

ஓய்வெடுக்க வரும் கடற்கொள்ளையர்கள் தெற்குபக்கமிருந்த படகு ஜெட்டியை பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். சுவாசம் தேடி தன்னந்தனியாக கிளம்பி வந்த கன்னியாஸ்திரிகள் கட்டியிருந்த சிறு கெபிகளில் சலிப்பான பிரார்த்தனை எந்நேரமும் நடக்குமென்பதால் இடைவிடா இரைச்சல் அத்தீவை ஆக்ரமித்திருந்தது.

கேஸ்பைப் லைன்கள் கூறுபோட்டிருந்த பாலைத்தீவுப்பிரதேசத்தில் சதுப்பு நிலவெளிகள் பல உண்டென்றாலும் துளிகூட மணல்படிந்திராத அப்பிரதேசம் ஒட்டகப்பந்தயம் நடத்துவதற்கான அசாத்திய பரப்பை கொண்டிருந்தது. தொடர்சியற்ற மணற்குன்றுகள் மைதானத்திற்கு வெளியே இருந்தன. நூற்றாண்டு பழக்கமுள்ள ஒட்டகப்பந்தய மைதானத்தில் ஓடுவதற்கு எந்த கழுதையும் முயற்சித்திருக்காததால் யாரும் கழுதைகளை அழைத்து வந்திருக்கவில்லை.

பனிரெண்டு அப்போஸ்தலர்களும் யாரோடும் பேசிக்கொள்ளவில்லையென்றாலும் நிறைய பேச விரும்பிய அவர்களுக்கு வார்த்தைகள் தடுமாறிக்கொண்டிருந்தன. பனிரெண்டு அப்போஸ்தலர்களுக்காகவும் வந்திறங்கியிருந்த சொற்ப உறவினர்கள் அருகே வந்து பேசுவதற்கு நியமன அதிகாரிகள் அனுமதித்திருந்தபோதும் எந்த உறவினனும் அருகில் வந்திருக்கவில்லை. சாலையின் ஓரத்தில் நின்றபடியே தங்கள் அழுகையை தொடர்ந்துகொண்டிருந்தார்கள். சன்னமாக அழ அனுமதிக்கப்பட்டிருந்த அவ்வெளியில் மைதானத்திலிருந்து கிளர்ந்த கூச்சல் எல்லாவற்றையும் அமுக்கிவிட்டிருந்தது.

உறவினர்கள் அழைத்து வந்திருந்த சில வயதான பெண்கள் கறுப்பு முகத்துணிகளுக்குள் அழுததை யாரும் கவனித்திருக்கவில்லை. மரணமடைந்தபின் உடல்களை அவரவர் நாட்டிற்கு அனுப்ப அனுமதி கிடைத்துவிடுமென்றாலும் அதற்கான அலைச்சலுக்கு தயாராய் இருந்த உறவினர்களே வந்திருந்தார்கள். வேண்டாவெறுப்பாய் வந்திருந்த அவர்களின் முகங்களில் நிரந்திரமாக குடிகொண்டிருந்த எரிச்சல் பிறப்பின் பலஹீனமென எல்லோரையும் நம்பவைக்க உறவினர்கள் எந்த முயற்சியையும் எடுத்திருக்கவில்லை.

வேடிக்கைப்பார்க்க யாருமற்ற முச்சந்தியில் நியமன அதிகாரிகளால் வேகமாக இயங்க போதுமான அவகாசம் இருந்தபோதும் ஒட்டகப்பந்தய மைதானத்தில் திரண்டிருந்த கூட்டம் நியமன அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்திகொண்டிருந்தது.

சாலையின் இருமருங்கிலுமிருந்த தர்பூசணிபழ விற்பனையாளர்களும் வெள்ளரி விற்றுகொண்டிருந்தவர்களும் திரண்டிருந்த கூட்டத்திற்கு பொருத்தமில்லாமல் காய்கறி விற்றுக்கொண்டிருந்தவர்களும் தூக்குகயிறுகளின் பக்கமாக தங்கள் பார்வையை திருப்பியிருக்கவில்லை. காய்கறிகளுக்கான மஸ்ரா அப்பகுதியில் இல்லையென்பதால் அவ்வியாபாரிகள் வெகுதொலைவிலுள்ள தீவுகளிலிருந்து காய்கறிகளை கொண்டு வந்திருந்தார்கள்.

உதிரிகளாக இடம்பெயர்ந்திருந்த வியட்நாமிகள் எந்த வியாபார தந்திரங்களும் தேவைப்பட்டிராத மனிதனை எடைபோடும் இயந்திரங்களை பிளாட்பாரமெங்கும் வைத்திருந்தார்கள். கொரியன்கள் தாங்கள் உண்ணவிரும்பிய நாய்களை அழைத்துவந்து கூட்டத்தின் வியர்வையை மிரளவைத்துக்கொண்டிருந்தார்கள்.

வெட்டிவைத்த தர்பூசணியின் நிறத்திற்கு பிலிப்பினோக்கள் மனதை பறிகொடுத்திருந்தார்கள். தாகம் தீர்ப்பதாக அப்பழத்தின் மீது குருட்டு நம்பிக்கை உருண்டது. ஒரு புரதானசந்தையின் சகலகுணங்களும் நிரம்பி வழிந்த அப்பிரதேசத்தில் கடலோடிகளும் மனிதர்களும் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள். சந்தையின் அழுகிய மணம் நிரந்தரமாக குடிகொண்டிருந்த அத்தீவு பிரதேசத்தில் மனிதர்களின் நிரந்தர வாழிடங்கள் அதிகமொன்றுமில்லை. தீவின் பிரதான மணற்காற்றுக்கு ஒட்டகங்களே புதைந்துவிடுமென்றாலும் பந்தய மைதானத்தில் மணல்படிந்திராத விசித்திரம் காலங்காலமாக மிச்சமிருந்தது.

பெப்சி டின்களும் தண்ணீர் பாட்டில்களும் விற்க பிறந்த பெங்காலிகள் தூக்குகயிற்றின் வழவழப்பை கண்டு மிரண்டு போயிருந்தார்கள்.

பந்தய மைதானத்தில் கூச்சலிட்டுகொண்டிருந்த கூட்டத்திலிருந்து இரண்டொருவரை திரட்ட நியமன அதிகாரிகள் முயன்றது பெருங்குழப்பத்தை உண்டுசெய்திருந்தது. நியமன அதிகாரிகளின் வார்த்தைகளை செவிமடுத்தவர்கள் சாலைவரை போய்விட்டு தப்பித்துக்கொள்ள பழகியிருந்தார்கள்.

வியர்வையும் கூக்குரலும் நிறைந்த அவ்வெளியில் பந்தயங்களே சாத்தியமென்பதால் நியமன அதிகாரிகளால் தூக்கு கயிறுகளை பரிதாபமாக பார்க்கமட்டுமே முடிந்தது. தூக்குதண்டனையை காண விருப்பங்கொண்டிராதவர்களை முச்சந்திக்கு  வலுக்கட்டாயமாக தள்ளிக்கொண்டுபோகவும் நியமன அதிகாரிகள் முயன்றார்கள்.

திருவிழாத்தனமற்ற அக்கூட்டத்தில் தூக்கு கயிறுகளும் ஒட்டகங்களுமே கொண்டாட்டத்திற்கு தயாராய் இருந்தன. பண்டிகை காலமில்லையென்பதால் திருவிழாகடைகள் அப்பிரதேசத்தினுள் நுழைந்திருக்கவில்லை. கோடை முடிந்து துவங்கிய ஒட்டகப்பந்தயம் முடிவற்று நீண்டுகொண்டிருப்பதாக ஒட்டகவாசிகள் கருதியிருக்கவேண்டும். ஒட்டகப்பந்தயத்தை முடிவுக்கு கொண்டுவர அனேகர் முயற்சித்துகொண்டிருந்தார்கள்.

கட்டுமான கம்பனிகள் தங்கள் ஆட்கள் பந்தயங்களில் கலந்துகொள்ள முன்பணங்களை தாராளமாக்கியிருந்தன. கள்ளும் பெண்ணுமற்ற அப்பிரதேசத்தில் ஒட்டகங்கள் மட்டுமே கிடைக்குமென்பதால் கம்பனிகள் தங்கள் தாராள மனதை திறந்திருந்தன.

பழந்துணிகளை விற்க வந்திருந்த வியாபாரிகள் எந்த கூச்சமும் இல்லாமல் ஏலம் நடத்திக்கொண்டிருந்தார்கள். தென்நாட்டவர்களுக்கு மிகப்பிடித்த ஜிகினாத்தனம் அவ்வுடைகளில் இருந்தது. கூச்சலினிடையே ரகசியமாக கைமாறிக்கொண்டிருந்த உடைகளில் குஜராத்திய சேலைகள் வெளிநாட்டு சேலையாக மாறும் வேகத்தை கணக்கிட எந்த கருவியும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.

 கட்டுமான கம்பனிகளின் மூச்சுமுட்டும் கேம்ப்களிலிருந்து சுவாசிப்பதற்காக அழைத்துவரப்பட்ட மனிதர்கள் பேருந்துகளில் அடைக்கப்பட்டு பந்தய மைதானத்தில் இறக்கிவிடப்பட்டிருந்தார்கள்.

நான்கு சனிக்கிழமைகளாக நடந்துவந்த பந்தயம் ஒரு முடிவுக்கு வந்துவிடுமென்பதால் திரண்டிருந்தவர்களிடையே துயரம்தோய்ந்த உற்சாகம் நிலவிக்கொண்டிருந்தது. பலர் ஏற்கெனவே பந்தயத்தில் பெருந்தொகையை இழந்திருந்தார்கள். விமான டிக்கெட்டுகளும் பிருஷ்டங்களும் பந்தயத்தில் கைமாறியிருந்தன.

கூச்சலால் நிரம்பியிருந்த மைதானத்தில் பந்தயத்திற்கு தயாராய் இருந்த ஒட்டகங்களின் மேல் ஜாக்கிகளாய் அமர்த்தப்பட்டிருந்த குழந்தைகள் திமிலோடு சேர்த்துக்கட்டப்பட்டிருப்பதை பரிசோதிக்க நியமிக்கப்பட்டிருந்த அதிகாரி கயிறு அவிழ்ந்து பந்தய ஓட்டத்தின் இடையில் விழுந்து மரிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறைக்கும் தோரணையில் இருந்தார். அதிகாரிக்கான பொருத்தமான குணம் அவரிடமிருந்தாலும் குழந்தைகளின் உயிரை கயிறுகளிடம் ஒப்படைக்கவே அவருக்கு தெரிந்திருந்தது. வயதாகியிருந்தாலும் எமராத்திகளின் கம்பீரத்தை அவர் இழந்திருக்கவில்லை.

திமிலோடு கட்டப்பட்டிருப்பதையும் மீறி பந்தயத்தின் இடையில் குழந்தைகள் குதித்து தற்கொலை செய்வதாக ஒரு வதந்தி உலவியது. வதந்திகளும் கவனமாகவே பரிமாறப்பட்டன. ஒட்டகத் திமிலின் வேகமான குலுக்கலில் கட்டவிழ்ந்துவிடும் தரங்கெட்ட கயிறுகளாலேயே குழந்தைகள் வீழ்ந்து வெட்கங்கெட்ட மரணத்தை அடைந்துவிடுவதை திரண்டிருந்த கூட்டத்தின் முன்னே சொல்ல வலுவற்றிருந்தவர்களே அந்த எமராத்தியை அதிகாரியாக நியமித்திருந்தார்கள்.

நேர்மையானவெரென்று பெயரெடுத்திருந்த அந்த எமராத்திய அதிகாரி குழந்தைகளோடும் கயிறுகளோடும் போராடிக்கொண்டிருந்தார். பிளாஸ்டிக் சரடாலான சாட்டையை கைகளோடு பிணைத்து ஒட்டகத்தின் மேல் அமர்த்தப்பட்டிருந்த குழந்தைகளை கோடைக்காலமில்லையென்றாலும் அடித்துகொண்டிருந்த வெயிலில் சுணங்கிவிடாமல் இருக்க முரட்டு துணிகளால் போர்த்தியிருந்தார்கள்.

வயது நிர்ணயிக்கப்பட்டிராததால் பலநாடுகளிலுமிருந்து வந்திறங்கிய நான்கு வயது குழந்தைகள்கூட சாட்டைகம்புகளுடனும் மூத்திரத்தை உறிஞ்சிக்கொள்ளும் நாப்கின்களுடனும் ஒட்டகத் திமிலோடு கட்டப்பட்டிருந்தன. எமராத்திய அதிகாரியின் பரிசோதனை கெடுபிடியை தாங்கமாட்டாத ஒட்டகவாசிகள் அவரோடு மல்லுகட்டினாலும் கடுமையான உத்தரவுகளை அமல்படுத்தும் நிலைகளை கடந்துவிட்டிருந்தார்கள்.

ஒட்டகப்பந்தய மைதானம் பலநாட்டு குரல்களால் புது உருவை அடைந்திருந்தாலும்  ஒரு பழஞ்சந்தையின் அடையாளங்களை தக்கவைத்துகொள்ள தொங்கவிடப்பட்டிருந்த ஒட்டகப்பெட்டகங்களும் அடுக்கப்பட்டிருந்த காய்ந்த பதமான புற்கட்டுகளும் சனிக்கிழமை மத்தியான வெறிக்கூச்சலில் நடுங்குண்டு ஓரமெடுத்திருந்தன.

கூச்சலிட காரணங்கள் தேவைப்பட்டிராத அவ்வெளியில் நிரம்பியிருந்த பல நாட்டவர்களும் கூச்சலிடுவதை பொதுபாஷையாக மாற்றிவிட்டிருந்தார்கள். கூச்சலிட்ட அவர்கள் யாரும் வெயிலுக்கு பொருத்தமான உடையை அணிந்திருக்கவில்லை. காற்றில் கிளம்பிவரும் தூசுகளுக்கு பயந்து கொடூரமாக முகத்தை மூடிக்கொண்டிருந்தார்கள்.

சந்தையை நிர்வகித்து வந்த மிஸ்பா தீவின் புராதன மனிதர்கள் பந்தயப்பணத்தை ஒட்டகத்தின் சாணத்தை முகர்ந்தபடி அதிகரித்துகொண்டிருந்தார்கள். பால்கலந்த பார்லி மட்டுமே தின்னும் ஒட்டகங்களும் பந்தயத்திலிருந்தன.

ஓமானிகள் அழைத்து வந்திருந்த ஜெபலில் மேய்ந்த ஒட்டகங்கள் பந்தயத்திற்கு பொருத்தமற்றவையென்பதால் பரிதாப நிலைக்குப்போயிருந்த  அவைகளை விலைப்பேச காத்திருந்த ஏமனிகளின் சிரிப்பொலிகள் அவ்விடத்தை பரிசுத்தமாக்க முயன்றன.

திமிரற்ற குவைத்திகள் ஒட்டகங்களை மேய்க்கவென்று அழைத்து வந்திருந்த இந்தியர்களை சொற்ப விலைக்கு கைமாற்றிக்கொண்டிருந்தார்கள். ஒப்பந்தங்கள் ஏதும் தேவைப்பட்டிராத அப்பண்டமாற்றலில் சிக்குண்டிருந்த இந்தியர்களும் ஒட்டகப்பந்தயத்தில் பணத்தை கட்டியிருந்தார்கள்.

காற்று நின்றிருந்த அவ்வெளியில் பரவியிருந்த சனிக்கிழமை மத்தியான வெயில் மக்களை பழந்துணிகளைப்போல உருகுலைத்திருந்தது. பொருத்தமற்ற ஒட்டகங்களை கையோடு கொண்டு நடக்கும் அரபிகள் சில பிலிப்பினோ பெண்களை அழைத்து வந்திருந்தாலும் கறுப்பு துணிகளால் பொதியப்பட்டிருந்த அப்பெண்களுக்கு பந்தய மைதானத்தில் அனுமதியிருந்திருக்கவில்லை. உருகுலைந்த லேண்ட்குரூசர் வண்டியில் நடுங்கியபடி தொடர்ந்து புகைத்துக்கொண்டிருந்த அப்பெண்களை கூட்டமாய் நின்று கொண்டிருந்த மக்கள் கண்டுகொள்ளவில்லை. சில வெட்கங்கெட்ட கட்டுமானத்தொழிலாளர்கள் அவ்வண்டிகளை சுற்றிச்சுற்றி வந்து தங்கள் வீரபிரதாபங்களை காண்பிக்கும் பாடல்களை பாடிக்கொண்டிருந்தார்கள். பாடமட்டுமே தெரிந்திருந்த தென்னாட்டவர்களின் பாடற்சுருதியை சகித்திராத அப்பெண்கள் வண்டியின் கண்ணாடிகளை உயர்த்திவிட்டு ஏசியை உச்சத்தில் வைத்திருந்தார்கள்.

எட்டாயிரம் டாலர் விலையுள்ள பிலிப்பினோ பெண்களை திருமணம் செய்ய வலிமையிழந்த ஆண்கள் அப்பெண்களை அரபிகளிடம் விற்றிருந்தார்கள். உயரம் குறைந்த அப்பெண்கள் ஒட்டகத்தின் விலையைவிட குறைந்த விலைக்கு விற்கப்படுவதில் வருத்தமற்ற பிலிப்பினோக்கள் பந்தயதிடலை நிறைத்துக்கொண்டிருப்பதற்கு எந்த வெட்கமும் தேவைப்பட்டிருக்கவில்லை. வெயிலுக்கு இதமாக கண்ணாடியும் தொப்பியும் அணிந்திருந்த பிலிப்பினோக்களுக்கு மிஸ்பா தீவில் பொழுதுபோக்க வேறுஒன்றும் கிடைத்திருக்கவில்லை.

தீவுப்பிரதேசத்தில் பந்தய மைதானங்களும் நேரங்கெட்ட நேரங்களில் வந்திறங்கும் விமானங்களுக்கான ஓடுதளமுமே இருந்தன. உலகத்தோடு எந்த தொடர்புமற்ற அவ்வெளியில் ஒட்டகங்கள்மட்டுமே வசிப்பதாக வளைகுடாவாசிகளின் நீண்ட அங்கியோடு உலவும் வதந்தியை யாரும் நம்புவதில்லையென்றாலும் அப்பிரதேசத்திற்கு வெளியே இருந்தவர்கள் தொடர்ந்து பரப்பிகொண்டிருந்தார்கள்.

பண்டார்புரி புகையிலையை சுண்ணாம்பு சேர்த்து கசக்கி தம்பாக்காக மாற்றிக்கொண்டிருந்த பாகிஸ்தானிகள் அணிந்திருந்த சல்வார் கிளப்பிய துர்வாடையை முகர்ந்துகொண்டிருந்த கழுகுகள் மைதானத்திற்கு வெளியே இருந்தன. மைதானம் ஒட்டகங்களாலும் பந்தயங்களாலும் நிரம்பியிருந்தது.

தண்டனை நிறைவேற்ற பொருத்தமான சனிக்கிழமை மத்தியானத்தை ஒட்டகப்பந்தய மைதானம் கவர்ந்துவிட்டதில் நியமன அதிகாரிகளுக்கு மிகுந்த வருத்தமிருந்தது. சிலநாட்களுக்கு முன்னமே விளக்குகம்பத்தில் தூக்குகயிறுகளை தொங்கவிட்டு மக்களை குஷிப்படுத்தியிருந்தாலும் தண்டனை நிறைவேற்றலை கண்டுகளிக்க வந்திராத மக்களை சபிக்க போதுமான சொற்களை நியமன அதிகாரிகள் வைத்திருக்கவில்லை.

தூக்கில் தலை வைத்திருந்த பனிரெண்டு அப்போஸ்தலர்களின் உறவினர்களும் அழைத்து வந்திருந்த வாடகை ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கூட ஒட்டகப்பந்தய மைதானத்தையே எட்டிப்பார்த்துகொண்டிருந்தார்கள். ஆம்புலன்ஸ்களுக்கு சவஊர்வலம் போகும் வேலைகூட கிடையாதென்றாலும் பனிரெண்டு அப்போஸ்தலர்களையும் மரணத்திற்கு பிறகு இடமாற்றம் செய்யும் கனத்த வேலையிருந்தது. பிணங்களை ஆம்புலன்ஸ் வண்டியிலேயே இடமாற்றம் செய்ய முடியுமென்பதால் ஆம்புலன்ஸ்களை வாடகைக்கு அமர்த்தியிருந்தார்கள். விதிமுறைகளை  கெட்டியாக பிடித்திருந்த தீவுவாசிகள் எல்லா பிரதேசங்களிலும் வெளிச்சங்களை விரித்துபிடித்தபடி அலைந்தார்கள்.

இந்தோனேஷியப்பெண்ணோடு பிடிபட்டிருந்த பனிரெண்டு அப்போஸ்தலர்களையும் நியமன அதிகாரிகளிடம் ஒப்படைக்க எந்த தீவுவாசியும் துணிந்திருக்கவில்லையென்றாலும் தகவலை மோப்பம் பிடித்திருந்த ஓலைத்தொப்பி மட்டுமே வைத்துக்கொண்டிருந்த நியமன அதிகாரிகள் வந்திறங்கியபோது பனிரெண்டு அப்போஸ்தலர்களின் தலைவிதிகளும் மாறிவிட்டிருந்தன. எந்த அழகும் கொண்டிராத இந்தோனேஷியப்பெண் உடைகளோடு தான் இருந்தாளென்றாலும் சில விம்மல்களை வெடித்து பனிரெண்டு அப்போஸ்தலர்களையும் நியமன அதிகாரிகளிடம் கையளித்திருந்தாள். நளினம் நிரம்பிய அவளால் இயன்றது அதுதானென்றாலும் அவ்வுலகத்தில் அவளுக்கு வேறுவேலைகளும் இருந்தன. வீட்டுவேலைகளை செய்யவென்று இந்தோனேஷியாவிலிருந்து கிளம்பி வந்திருந்த அவளுக்கு அத்தீவின் புழுங்கலான உலகம் புளிப்பாக இருந்தது.

மரணத்திற்கு தயாராய் இருந்த பனிரெண்டு அப்போஸ்தலர்களின் கால்களுக்கு கீழே நிறுத்தப்பட்டிருந்த பனிரெண்டு வாகனங்களும் ஒருசேர கிளம்பும் தருணத்திற்காக காத்திருக்கும் பொறுமையற்றவர்கள் அத்தீவுபிரதேசத்தில் சுற்றிக்கொண்டிருந்தாலும் மைதானத்திற்கும் தூக்குகயிறுகள் தொங்கிக்கொண்டிருந்த அகலச்சாலைக்கும் பார்வைகளை கொடுத்திருந்தார்கள்.

மரணத்தை அறிவிக்க வந்த பனிரெண்டு வாகனங்களும் கட்டுமான கம்பனிகள் கைவிட்டிருந்த பழைய பிக்அப் வண்டிகளென்பதால் நியமன அதிகாரிகள் வண்டிகளை அக்குவேறு ஆணிவேறாக பரிசோதித்தபின்னரே மரணதண்டனை களத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள்.

நியமன அதிகாரிகள் மைதானத்திலிருந்து கெஞ்சிகூத்தாடி சில ஆட்களை முச்சந்திக்கு கொண்டு சேர்த்திருந்தார்கள். எண்ணிக்கையில் குறைந்த ஆட்களே வேடிக்கை பார்க்க வந்திருந்தாலும் செவியையும் புத்தியையும் மைதானத்தில் விட்டுவந்திருந்தார்கள்.  உற்சாகமற்ற ஆட்களுக்கு முகங்களை காண்பிக்கவென்று தூக்குதண்டனைக்கான கருப்பு துணியை பனிரெண்டு அப்போஸ்தலர்களுக்கும் நியமன அதிகாரிகள் அணிவித்திருக்கவில்லை. ஏற்கெனவே அழுதுவீங்கிய பனிரெண்டு அப்போஸ்தலர்களின் முகங்களும் எந்த கொடூரத்தையும் கொண்டிருக்காததால் முகங்களை மூடவேண்டிய அவசியம் நேர்ந்திருக்கவில்லை. 

சவக்களையற்ற பனிரெண்டு அப்போஸ்தலர்களின் முகங்களையும் தொடர்ந்து பார்க்கும் பெருவிருப்பம் சலிப்பாக மாறியிருந்தாலும் சகிக்கும் பக்குவம் நியமன அதிகாரிகளிடம் மிச்சமிருந்தது. இடைவிடாமல் பேசிக்கொண்டிருந்த நியமன அதிகாரிகள் தீவிலிருந்த ஒரேயொரு அகலச்சாலையின் போக்குவரத்தையும் முற்றாக ஒழித்திருந்தார்கள். கடைசிவிருப்பம் போல அலைவுற்ற பனிரெண்டு அப்போஸ்தலர்களின் கண்களும் மைதானத்தை கடந்து வந்திருக்கவில்லை.

ஆர்வங்கொண்டு வந்திருந்த சிலரும் தூக்குதண்டனையை சீக்கிரம் நிறைவேற்ற சொல்லி முணுமுணுத்துகொண்டிருந்தார்கள். மைதானத்திலிருந்து கிளம்பிய கூச்சலுக்கு முன்னே முணுமுணுப்புகள் நியமன அதிகாரிகளை எட்டியிருக்கவில்லையென்றாலும் ஓலைத்தொப்பியும் பலநாட்டு சாயம்போன உடைகளும் அணிந்திருந்த நியமன அதிகாரிகள் வேகமாகவே இயங்கினார்கள்.

பனிரெண்டு கார்களும் மிகச்சரியாக தூக்குகயிற்றின் நேர்கீழே நிறுத்தப்பட்டிருந்தன. போக்குவரத்து நின்றுவிட்டிருந்த அச்சாலைகளில் விளக்குகம்பங்கள் மட்டும் உயிரோடு இருந்தன. பின்புறமாக கைகள் கட்டப்பட்டிருந்த பனிரெண்டு அப்போஸ்தலர்களையும் கார்களின் பின்புறமாக ஏற்றி நிற்கவைக்க எந்த சிரமமும் நியமன அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருக்கவில்லை. தரங்குறைந்த நைலான் கயிறுகளை பனிரெண்டு அப்போஸ்தலர்களுடைய கழுத்திலும் முடிச்சிட்டபோதும் எந்த கலக்கமுமற்ற பனிரெண்டு அப்போஸ்தலர்களையும் பார்க்க நியமன அதிகாரிகளுக்கு லேசான கலக்கமிருந்தது.

குழப்பத்தால் தடுமாறிக்கொண்டிருந்த நியமன அதிகாரிகளால் எக்காரியத்தையும் ஒழுங்குபடுத்த முடிந்திருக்கவில்லை. கைகளை பின்புறமாக கட்டியிருந்ததால் பனிரெண்டு அப்போஸ்தலர்களுக்கும் தேவையற்ற இடங்களில் அரிப்பெடுத்தது. அரிப்பெடுத்த இடங்களை குறித்து நியமன அதிகாரிகளிடம் பேச அவர்களுக்கு தயக்கமிருந்தது.

பொறுமையற்றிருந்த உறவினர்கள் கண்ணீரை இழந்திருந்ததால் முகங்களை மைதானத்து பக்கமாக திருப்பிகொண்டிருந்தார்கள். பனிரெண்டு கார்களையும் ஒரே நேரத்தில் இயங்கவைக்க நியமன அதிகாரிகளில் ஒருவன் ஈரானிய நாட்டு துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டபோது அது வெடித்திருக்கவில்லை. துப்பாக்கி ஈரானிய தயாரிப்பென்றாலும் கைத்துப்பாக்கி வகையை சேர்ந்த அது அவசரத்திற்கு வெடித்திருக்காதது நியமன அதிகாரிகளை நிலைகுலைய வைத்திருந்தது. துப்பாக்கியை வானத்தை நோக்கி பிடித்திருந்தவன் துப்பாக்கியையும் சொற்பகூட்டத்தையும் பரிதாபமாக பார்த்தான். தூக்குகயிற்றினுள் தலைநுழைத்திருந்த பனிரெண்டு அப்போஸ்தலர்களுக்கும் வறண்டிருந்த தொண்டைக்கு குளிர்தண்ணீர் தேவைப்பட்டது. மரணத்திற்குள் அவர்களை இறக்கிவிட தயாராய் இருந்த கார்கள் பரிதாபத்தை மறைக்க உறுமிக்கொண்டிருந்தன.

பந்தயத்திற்கு தயாராய் திமிறிக்கொண்டிருந்த ஒட்டகங்களை திறந்துவிட மைதானத்தில் சுடப்பட்ட துப்பாக்கியின் ஓசை அப்பிராந்தியத்தின் உற்சாக அணையை திறந்தது. ஒட்டகங்கள் மூர்க்கங்கொண்டு ஓடத்துவங்கின. முச்சந்தி சாலையில் விளக்குகம்பங்களை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த சொற்பமக்களும் பந்தய மைதானத்தை நோக்கி ஓடத்துவங்கினார்கள்.


 


































Read more »